Skip to main content

எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்... வெள்ளை அறிக்கை கேட்கும் அண்ணாமலை

Published on 28/09/2021 | Edited on 28/09/2021

 

BJP TamilNadu Leader Annamalai  comment about opposition parties struggle

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், இதற்காக தலைநகர் டெல்லியில் 300 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும் நேற்று (27.09.2021) இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

எதிர்க்கட்சிகளின் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘விவசாயிகளுக்கு நன்மை தருகிற, விவசாயிகளை வியாபாரிகளாக மாற்றுகிற வகையிலான மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இந்த நிலையில், திமுக,காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவசாய சட்டங்களை எதிர்த்து கடையடைப்பு போராட்டம் அறிவித்தன.

 

ஆனால் போராட்டம் படுதோல்வி அடைந்ததோடு, சில அரசியல் கட்சிகளைத் தவிர எந்தவொரு விவசாயிகளும் சாலையில் இறங்கி வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட தயாராக இல்லை. ஏனெனில் பிரதமரின் விவசாயிகளுக்கான பல திட்டங்கள், பயிர்க் காப்பீடு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி உள்ளிட்ட பல திட்டங்கள் விவசாயிகளின் வாழ்க்கையில் நம்பிக்கையூட்டியுள்ளன.

 

முதல்வர் ஸ்டாலின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் விவசாயிகளிடம் நம்பிக்கையை இழந்துவிட்டார். 25 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக, விவசாயிகள் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை.

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை வியாபாரிகளாக மாற்றி, தொழில் முனைவோர்களாக மாற்றும். வேளாண் சட்டங்களைப் புறக்கணிக்கும் முதல்வர், விவசாயிகளின் இன்றைய நிலைக்கு என்ன தீர்வு தரப்போகிறார் என்பதை வெள்ளை அறிக்கையாக தர வேண்டும்’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.