Skip to main content

அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர்..? ஜெயகுமாரின் பதில்! 

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

ADMK's next leader ..? Jayakumar's answer!

 

அதிமுக பொன்விழா ஆண்டு வருகிற அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் பொன்விழா கொண்டாட்ட நிகழ்வுகள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று (11.10.2021) காலை 10 மணியளவில் தொடங்கி 2 மணிநேரம் நடைபெற்றது.

 

இந்தக் கூட்டத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகளான ஜெயகுமார், சி. விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, காமராஜ், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொன்விழா கொண்டாட்டம் தவிர, ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்தும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்ல இருப்பது குறித்தும், அதிமுகவின் புதிய அவைத் தலைவரை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

 

இக்கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளரைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “அதிமுக தோற்றுவிக்கப்பட்ட  50 ஆண்டுகளில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்தது. இது எந்த ஒரு கட்சிக்கும் கிடையாது. ஐந்து முதலமைச்சர்கள் இதுவரை அதிமுக ஆட்சியில் ஆண்டுள்ளனர். பல சோதனைகள், இன்னல்களைத் தாண்டி வீரநடை, வெற்றிநடை போட்டுவருகிறது அதிமுக இயக்கம். பொன் விழா எப்படி கொண்டாட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொன் விழா ஆண்டு என்பதால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும்” என்றார். 

 

மேலும், ‘உண்மையான எதிர்க்கட்சி நாம் தமிழர் தான்’ என்ற சீமானின் கருத்து குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, “இந்த இயக்கத்தை எந்த கொம்பன் நினைத்தாலும் ஆட்ட முடியாது; அசைக்கவும் முடியாது. 1 கோடி 46 லட்சம் வாக்குகள் பெற்ற அதிமுக, இமயமலை போன்றது. ஆக இமயமலை போல் உள்ள இயக்கத்தைப் பரங்கிமலை போன்றவர்கள்; தாழ்ந்து கிடப்பவர்கள் கருத்து தெரிவிப்பது 2021இன் சிறந்த நகைச்சுவையாக பார்கிறேன்” என்றார். 

 

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து குறித்தும், அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர் பதவிக்கு உங்கள் பெயரும் அடிப்படுகிறதே என்ற நிருபர்களின் கேள்விக்கு, “வியூகங்கள் சார்ந்த தலைமை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். எந்தக் குழப்பமும் இல்லை, இது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. உரிய நேரத்தில் அவைத் தலைவர் குறித்து அறிவிக்கப்படும். நான் ஒரு சாதாரண தொண்டன். இதுவே என் பெருமை; அது போதுமானது. பதவி இரண்டாவதுதான்” என்றார். 

 

சசிகலா குறித்தான கேள்விக்குப் பதிலளித்த ஜெயகுமார், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் உண்மையான அதிமுக தொண்டர்கள் எங்கேயும் போகமாட்டார்கள். சாகும்வரை அதிமுகதான். சிறையிலிருந்து வந்தவர்கள் ஏன் ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை. தற்போது அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்தவர்; மக்கள், தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டவர் நினைவிடம் செல்கிறார். நீங்கள் எங்கே வேண்டுமானாலும் போலாம் யாரும் வர மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.