Skip to main content

அதிமுக VS பாமக: கூட்டணி உடைந்தாலும் கோரிக்கையில் ஒற்றுமை!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

ADMK and PMK Unity in demand even if alliance breaks down!

 

ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்துகிறது மாநில தேர்தல் ஆணையம். நேற்றுமுதல் (15.09.2021) மனு தாக்கலும் துவங்கிவிட்டன. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இந்த மாதம் 22ஆம் தேதி கடைசி நாள். மனுத்தாக்கலுக்கான கால அவகாசம் குறைவாக இருப்பதால் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் எல்லா கட்சிகளிடமும் சுறுசுறுப்பு காணப்படுகிறது.

 

இந்த நிலையில், தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது அதிமுக. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர், ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதமும் அனுப்பியுள்ளது அதிமுக தலைமை.

 

ADMK and PMK Unity in demand even if alliance breaks down!

 

இதனையடுத்து பாமகவும் இதே கோரிக்கையை முன்வைத்து கடிதம் அனுப்பியுள்ளது. பாமக தலைவர் ஜி.கே. மணி இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் மொத்தமுள்ள 37 ஊரக மாவட்டங்களில் 28 மாவட்டங்களுக்கான தேர்தல் 2019-ல் நடத்தி முடிக்கப்பட்டன. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கு தற்போது தேர்தல் நடக்கவிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு வேட்பு மனு தாக்கல் துவங்கினால்தான் அனைத்து கட்சிகளுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய தேவையான கால அவகாசம் இருக்கும். ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 30 மணி நேரத்தில் மனுத் தாக்கல் துவங்குவதால் போதிய அவகாசம் இல்லை.

 

76.59 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே பங்கேற்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது நியாயமற்றது. இதைவிட சுமார் 10 மடங்கு அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் ஒரே கட்டமாகத்தான் நடந்தன. ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலைப் பிரித்து இரண்டு கட்டமாக நடத்துவது நியாயம் அல்ல. தேர்தலில் முறைகேடுகள் நடப்பதற்கு வழிவகுக்கும். இதனால், 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்’’ என்று அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறார் ஜி.கே. மணி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.