Skip to main content

அதிமுக கூட்டணியில் இருந்து விலகத் தயாராகும் கட்சிகள்?

Published on 28/01/2021 | Edited on 29/01/2021

 

ADMK alliance Parties preparing to leave the ADMK  ..?

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது. இதற்காக தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும் தயாராகிவருகிறது. ஆளும் அதிமுக சார்பில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்துவருகிறார். எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின், எம்.பி. கனிமொழி மற்றும் தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகள் பலரும் பல்வேறு வகையில் தேர்தல் பிரச்சாரங்களை நடத்திவருகின்றனர். 


இந்தியத் தேர்தல் ஆணையமும் விரைவில் தேர்தல் தேதியை அறிவிக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுகவின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டு பின் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். ஆகிய இருவரும் இணைந்து அரசியல் செய்தனர். அதன் பின்னும் விளம்பரம், பிரச்சாரப் பயணம் என இருவரும் தனித்தனியே செயல்படுவதால் இன்னும் அதிமுக ஒரே தலைமையில் இருக்குமா எனும் சந்தேகம் அக்கட்சியினர் மத்தியிலும் அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் பேசுபொருளாகியுள்ளது. 
 


இந்நிலையில், சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, சந்திப்பு முடிந்து செய்தியாளர்களிடம், “சசிகலாவை 100 சதவீதம் அ.தி.மு.க.வில் இணைக்க வாய்ப்பில்லை” என அறிவித்தார். தற்போது சசிகலா நேற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சிகிச்சை முடிந்து வெளியே வந்து அவரது கருத்தைச் சொல்லும்போதுதான் பெரும் அரசியல் மாற்றம் இருக்கும் எனப் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. 
 

ADMK alliance Parties preparing to leave the ADMK  ..?


இதனிடையே தர்மபுரியில் தேமுதிக கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கட்சியினரின் பல்வேறு இல்ல விழாக்களில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “சசிகலா விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும். அவர் மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டும். முதல்வர் பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரல்ல அவர் அதிமுகவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். இந்தத் தேர்தலில் தேமுதிக 41 தொகுதிகளை எதிர்பார்க்கிறது” எனத் தெரிவித்தார். 
 

cnc

 

எப்பொழுது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம் எனும் நிலையில், கூட்டணிக் கட்சிகள் அதன் தலைமைக் கட்சியுடன் ஆலோசித்து, அதன் தொகுதிகளில் களப்பணிகளை தற்போதிலிருந்தே செய்யவேண்டிய நிலையில் உள்ளது. இந்நிலையில், பிரேமலதாவின் இந்த கருத்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. சசிகலாவை நிராகரித்துவிட்டுச் செயல்படுமா அல்லது சசிகலாவை இணைத்துக்கொண்டு ஒற்றைத் தலைமையில் செயல்படுமா அல்லது சசிகலாவை முன்னிலைப்படுத்தி தினகரன் அமமுக தலைமையில் மூன்றாவது அணியை உருவாக்குவாரா எனப் பல கேள்விகள், கூட்டணிக் கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளதால், அதிமுக கூட்டணிக் கட்சிகள் கூட்டணியிலே தொடரலாமா அல்லது வெளியேறலாமா எனும் குழப்பத்தில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.