Published on 03/06/2021 | Edited on 03/06/2021

ஆசிரியர் தகுதி தேர்வில் (T.E.T) வெற்றிபெற்றவர்களுக்கு வழங்கப்படும் தகுதி சான்றிதழ் இதுவரை ஏழு ஆண்டுகளே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. இதனால் ஆசிரியர்கள் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை தகுதித் தேர்வை எழுத வேண்டியிருந்தது. இந்தநிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சகம், 2011ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்ட தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ், அவர்களின் ஆயுள் முழுவதும் செல்லும் என அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால், ஆசிரியர்கள் இனி ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு எழுத வேண்டியதில்லை. மேலும், மத்திய கல்வித்துறை அமைச்சகம், ஏற்கெனவே ஏழு ஆண்டுகள் நிறைவுபெற்றவர்களுக்கு சான்றிதழ்களைத் திருத்தி வழங்குவது அல்லது புதிய சான்றிதழ்களை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.