Skip to main content

9 மாத குழந்தைகளுக்கும் கட்டாயம் ஆகப்போகும் ஹெல்மெட் !

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

KIDS

 

இந்தியாவில் சாலைகளில் ஓடும் வாகனங்களில், நான்கில் மூன்றுபங்கு வாகனங்கள் இருசக்கர வாகனங்களாக இருக்கின்றன. அதேபோல் இந்தியாவில் ஒருநாளைக்கு 30 குழந்தைகள் சாலை விபத்துகளில் இறப்பதாகவும், இறக்கும் குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகள் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் எனவும் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

 

இந்தநிலையில், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக வரைவு அறிவிக்கையை உருவாக்கி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், பொதுமக்களின் கருத்துகளுக்காகவும் பரிந்துரைகளுக்காகவும் வெளியிட்டுள்ளது.

 

அந்த வரைவு அறிவிக்கையில், 9 மாத குழந்தைகள் முதல் 4 வயது குழந்தைகள்வரை ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்க முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் உள்ள இருசக்கர வாகனங்களின் அதிகபட்ச வேகத்தை 40 கிலோமீட்டராக நிர்ணயிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் ஏற்கனவே 4 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புழல் சிறையில் டி.டி.எஃப் வாசன்

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

 TDF Vasan in Puzhal Jail

 

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி நேற்று முன்தினம் (17.9.2023) சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனம், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, தனது வாகனத்தின் முன் சக்கரத்தைத் தூக்கிச் சாகசம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது வாகனம் அவரது கட்டுப்பாட்டை மீறி சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார்.

 

இதில், டி.டி.எஃப். வாசன் சாலையோரம் இருக்கும் புதரில் விழுந்து கிடந்துள்ளார். இந்த விபத்தைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்திருந்தனர். மேலும் அவருக்கு எலும்பு முறிவுக்குக் கையில் கட்டுப் போடப்பட்டது.

 

அதே சமயம் இந்த விபத்து தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன. இதையடுத்து டி.டி.எஃப் வாசன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது. கவனக் குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் டி.டி.எஃப் வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். டி.டி.எஃப். வாசனின் ஆபத்தான மற்றும் அதிவேகமான வாகன சாகசத்தினால், பல இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என்ற விமர்சனமும் அவர் மீது உள்ளது. இந்நிலையில் டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது புழல் சிறையில் டி.டி.எஃப் வாசன் அடைக்கப்பட்டுள்ளார்.   

 

 

Next Story

இப்போ விழுமோ எப்போ விழுமோ? - ஹெல்மெட்டுடன் பணியாற்றும் அரசு ஊழியர்கள்

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

 'Now or when will it fall?'-Government employees working with helmets

 

அரசு அலுவலகக் கட்டடம் பாழடைந்து கிடக்கும் நிலையில், அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அச்சத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பணியாற்றும் வினோத சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது.

 

தெலுங்கானாவில் ஜெகத்தியாலா மாவட்டம் பீர்பூர் நகரில் உள்ளது மண்டல பரிஷத் அலுவலகம். இந்த அலுவலகத்தின் கட்டடம் மிகவும் பாழடைந்துள்ளது. இதனால் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில், அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் உள்ளனர். பலமுறை வேறு கட்டடத்திற்கு அலுவலகத்தை மாற்றும்படி ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து கோரிக்கை வைத்த போதிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இருப்பினும் அங்கே பணி செய்யத்தான் வேண்டும் என்ற கட்டாயத்திற்கும் உள்ளாகியுள்ளனர். எப்பொழுது வேண்டுமானாலும் கட்டடம் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் இருக்கும் ஊழியர்கள், ஹெல்மெட் அணிந்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே இந்த அலுவலகத்தின் சில இடங்கள் இரண்டு முறை இடிந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.