Skip to main content

மிஷன் 2024: காங். உடனான கூட்டணயில் சலசலப்பை ஏற்படுத்திய திரிணாமூல் காங். நாளேடு!

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

mamata - rahul

 

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. ஆனால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளைத் தற்போதே தொடங்கிவிட்டன. பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, தேசிய மாநாட்டுக் கட்சி என பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்தநிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டணிக்குள் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் திரிணாமூல் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ பத்திரிகை ஜாகோ பங்களா கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

மேற்கு வங்க முதல்வர் மம்தாவிற்கு பிரதமர் பதவி மீது கண் இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் காங்கிரஸ், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என கருதப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

இந்தச் சூழலில் ஜாகோ பங்களாவில் 'ராகுல் காந்தி தோற்றுவிட்டார், மம்தாவே மாற்று' என வெளியாகியுள்ள அந்தக் கட்டுரையில், "காங்கிரஸ் இல்லாத பாஜக எதிர்ப்பு கூட்டணி பற்றி நாங்கள் ஒருபோதும் விவாதிக்கவில்லை. ஆனால் மோடிக்கு மாற்றாக ராகுல் காந்தி இன்னும் உருவாகவில்லை. மம்தா பானர்ஜி நாட்டிற்கான மாற்று முகம். அந்த மாஸ் லீடரை (மம்தாவை) மாற்றாக முன்வைத்து நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யத் தொடங்குவோம்" என கூறப்பட்டுள்ளது.

 

மேலும் அந்தக் கட்டுரையில், "ராகுல் காந்திக்கு பல சந்தர்ப்பங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் தோல்வியடைந்துவிட்டார். மாற்று கூட்டணி காங்கிரசுடன் ஏற்படுத்தப்படும். ஆனால் பிரச்சாரத்திற்கு வலுவான ஒரு முகம் இருக்க வேண்டும். அந்த முகம் மம்தா பானர்ஜி" என கூறப்பட்டுள்ளது.

 

அதை தொடர்ந்து, "நாடு மாற்று ஒன்றைத் தேடிவருகிறது. எனக்கு ராகுல் காந்தியை நீண்டகாலமாக தெரியும். ஆனால் அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்று முகமாக உருவாக தவறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் மோடிக்கு மாற்று முகமாக மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்" என திரிணாமூல் காங்கிரஸின் மக்களவை தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்தக் கட்டுரை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கட்டுரையினால் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் சிக்கல் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதற்கிடையே இந்தக் கட்டுரை குறித்துப் பேசியுள்ள காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, "மாற்று முகமாக யார் வெற்றிபெற்றுள்ளார், யார் வெற்றிபெறவில்லை என்ற விவாதத்தில் ஈடுபடமாட்டோம். இது 2021தான். மக்களவைத் தேர்தல் 2024இல்தான் நடைபெற உள்ளது. 2014 முதல் மோடி அரசுக்கு எதிராக ராகுல் காந்தி நிலையான எதிர்க்கட்சித் தலைவராக இருந்துவருகிறார்" என தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர், "ஒரு கூட்டணி உருவாகும்போது, கூட்டணியை யார் வழிநடத்துவது என்பது குறித்து அனைவரும் ஒருமனதாக முடிவெடுப்பார்கள் என்றே இந்திய அரசியல் வரலாறு தெரிவிக்கிறது. எனவே அதுவரை நிறைய கருத்துகள் வரும். ஆனால் அவையெல்லாம் இறுதி முடிவல்ல" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“காங்கிரசிற்கு ஒரு வாக்குக்கூட கிடைக்காது” - மம்தா பானர்ஜி அதிரடி பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Mamata Banerjee speech on Congress won't get a single vote in west bengal

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொண்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்றது. வரும் 26ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. 

அதன்படி, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று (24-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “மேற்கு வங்கத்தில் 26,000 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்களிடமிருந்து அல்ல, எந்த அரசாங்க ஊழியரிடமிருந்தும் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது. உச்சநீதிமன்றத்தில் இருந்து நீதி கிடைக்கும் என இன்னும் நான் நம்புகிறேன்.

பாஜக உயர் நீதிமன்றத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். சி.பி.ஐயை விலைக்கு வாங்கியுள்ளனர். என்.ஐ.ஏ.வை வாங்கியுள்ளனர். பி.எஸ்.எப்-ஐ விலைக்கு வாங்கியுள்ளனர்.  தூர்தர்ஷனின் நிறத்தை காவி நிறமாக்கி விட்டார்கள். அதில், பாஜக மற்றும் மோடியைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். அதைப் பார்க்காதீர்கள். புறக்கணிக்க வேண்டும்” என்று கூறினார்.