Skip to main content

"மனித உரிமைகள் மீறல் என்ற பெயரில் நாட்டின் பிம்பத்தைக் கெடுக்க முயற்சி" - பிரதமர் மோடி எச்சரிக்கை!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

Narendra Modi

 

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நிறுவன நாள் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மனித உரிமை மீறல்கள் என்ற பெயரில் சிலர் நாட்டின் பிம்பத்தைக் கெடுக்க முயற்சிக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

 

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நிறுவன விழாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரை வருமாறு; 

 

'சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்' ஆகியவற்றுடன் தேசம் முன்னேறுகிறது. ஒரு வகையில், இது அனைவருக்கும் மனித உரிமைகளை உறுதி செய்வதற்கான அடிப்படைக் கொள்கையிலும் செயல்படுகிறது. அரசாங்கம் ஒரு திட்டத்தைத் தொடங்கினால் & அது ஒரு சிலருக்கு மட்டுமே பயனளிக்கும் என்றால், அது உரிமைகள் குறித்த பிரச்சனையை எழுப்பும்; அதனால்தான் அனைவருக்கும் அனைத்து திட்டங்களின் பயன்களும் கிடைப்பதை உறுதி செய்யும் குறிக்கோளுடன் நாங்கள் முன்னோக்கிச் செல்கிறோம்.

 

சுதந்திரத்திற்குப் பிறகும், நமது அரசியலமைப்பு, சமத்துவம் குறித்த புதிய கோணத்தை உலகிற்கு அளித்தது. கடந்த தசாப்தங்களில், உலகம் பல முறை திசைதிருப்பப்பட்டது, ஆனால் இந்தியா அதன் கொள்கைகளில் உறுதியாக இருந்தது.இன்று, இந்தியா பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஊதியத்துடன் 26 வார மகப்பேறு விடுப்பை வழங்கி வருகிறது. அடிப்படையில் இது பிறந்த குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.  பல தசாப்தங்களாக, முஸ்லீம் பெண்கள் முத்தலாக் சட்டத்திற்கு எதிராகச் சட்டங்களைக் கோரி வருகின்றனர். முத்தலாக் சட்டத்தை உருவாக்கி அவர்களுக்கு புதிய உரிமைகளை வழங்கினோம். ஹஜ்ஜின் போது முஸ்லீம் பெண்களை 'மஹ்ரம்' நிர்பந்தத்திலிருந்து நமது அரசாங்கம் விடுவித்தது 

 

பெண்களின் பாதுகாப்புக்காக 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், மருத்துவம், காவல்துறை தொடர்பான உதவிகளை வழங்கவும், மனநல ஆலோசனை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றை வழங்கவும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 650 க்கும் மேற்பட்ட விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றங்களுக்கு மரண தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிலர் சில சம்பவங்களில் மனித உரிமை மீறல்களைப் பார்க்கிறார்கள் ஆனால் அதைப் போன்ற மற்ற சம்பவங்களில் அதனைப் பார்ப்பதில்லை. அரசியல் கண்ணாடிகள் மூலம் பார்க்கும் போது மனித உரிமைகள் மீறப்படுகின்றன. பாரபட்சமான இந்த நடத்தை ஜனநாயகத்திற்குத் தீங்கு விளைவிக்கும். பாரபட்சமான நடத்தை மூலம் அவர்கள் நாட்டின் பிம்பத்தைச் சேதப்படுத்த முயற்சிக்கின்றனர்.

 

சிலர் மனித உரிமை மீறல் என்ற பெயரில் நாட்டின் பிம்பத்தைக் கெடுக்க முயற்சி செய்கிறார்கள், மக்கள் அவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனித உரிமைகள் என்பது உரிமைகள் மட்டுமல்ல, கடமைகளும் கூட தனித் தனியாக அல்லாமல் இரண்டையும் ஒன்றாக விசாரிக்க விவாதிக்க வேண்டும். தங்கள் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வைத் தவிர, ஒவ்வொரு தனிநபரும் தங்கள் கடமைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.


இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

 

 

சார்ந்த செய்திகள்