Skip to main content

தர்ணா போராட்டத்தில் ராகுல் காந்தி!

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

rahul gandhi

 

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29ஆம் தேதி தொடங்கிய நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் வன்முறையாக நடந்துகொண்டது மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை உள்நோக்கத்தோடு தாக்கியதன் மூலமாக அவையின் மாண்பைக் குலைத்தது ஆகியவற்றுக்காகக் காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 

12 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி நீக்கத்தை திரும்பப் பெற வேண்டும் என குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடுவிடம் எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்தக் கோரிக்கையை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

 

இதனைத்தொடர்ந்து மூன்றாவது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல் இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களும் இரண்டாவது நாளாக இன்று (02.12.2021) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், 12 மாநிலங்களவை உறுப்பினர்களின் இடைநீக்கத்தை எதிர்த்து நடைபெறும் தர்ணா போராட்டத்தில் ராகுல் காந்தியும் பங்கேற்றுள்ளார்.

 

இதற்கிடையே மாநிலங்களவை, எதிர்க்கட்சியினரின் தொடர் முழக்கங்களால் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் மக்களவையும் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வில்லேஜ் குக்கிங் சேனல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Village cooking channel put an end to rumours

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனலில் வரும் சமையல் வீடியோவில் ‘இன்னைக்கு ஒரு புடி’என்ற வசனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் பெரியதம்பி தாத்தா. இவர் சமீபத்தில் இதயநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வில்லேஜ் குக்கிங் சேனல் நிர்வாகி சுப்ரமணியன் வேலுசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில் வில்லேஜ் குக்கிங் சேனலில் தோன்றும் தாத்தாவின் மருத்துவ செலவுக்கு உதவ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. மறுத்துவிட்டார் என பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த வதந்தியை சுப்ரமணியன் வேலுசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் வதந்தியாக பரப்பப்பட்ட செய்தியை மேற்கோள்காட்டி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது முற்றிலும் பொய்!. எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது!.

இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சித் தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வில்லேஜ் குக்கிங் சமையல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது கிராமத்துச் சூழலில் ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து காளான் பிரியாணியை ரசித்து சாப்பிட்ட வீடியோ மக்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

Next Story

வயநாட்டில் ராகுல் காந்தி ரோடு ஷோ!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Rahul Gandhi road show in Wayanad

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி இன்று (15.04.2024) நீலகிரி மாவட்டம் பந்தலூர் வந்தடைந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் சென்ற ராகுல் காந்தி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையடினார்.

அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு சென்றார். அங்கு அவர் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு ரோட் ஷோ நடத்தினார். அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பதிலுக்கு ராகுல் காந்தியும் பொதுமக்களுக்கு கை கொடுத்து உற்சாகப்படுத்தினார். இத்தொகுதியில் சிபிஐ சார்பில் அன்னி ராஜாவும், பாஜக சார்பில் கேரள மாநிலத் தலைவர் கே சுரேந்திரனும் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் பாலக்காட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளது கவனிக்கத்தக்கது.