Skip to main content

புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்! வேட்புமனு தாக்கல் வரும் 30ஆம் தேதி தொடக்கம்! 

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

Puducherry local government elections in 3 phases! Nomination starts on the 30th

 

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல், 32 ஆண்டுகளுக்குப் பின் கடந்த 2006இல் நடைபெற்றது. அந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2011இல் நிறைவடைந்தது. அதன் பிறகு 10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இதனை எதிர்த்து பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தேர்தல் நடத்தப்படவில்லை. அதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் ‘அக்டோபர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது சட்டவிரோதம்’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு தேவையான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டது.

 

மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகள் வரையறை செய்யப்பட்டு, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி. தாமஸ் செய்தியாளர்களுக்கு நேற்று (22.09.2021) நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “புதுச்சேரி மாநிலம் சுதந்திரம் அடைந்து 2 முறை உள்ளாட்சித் தேர்தலை சந்தித்துள்ளது. இறுதியாக 2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் தேர்தல் நடத்தப்படவில்லை. 2012ஆம் ஆண்டு தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக சில பணிகள் முடிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் பணியைத் தொடர்வதற்கு வசதியாக இருந்தது. உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை வாக்குச்சீட்டு அடிப்படையில் கடந்த காலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது.

 

தற்போது முதல்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட இருக்கிறது. ஏற்கனவே புதுச்சேரியில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டாலும், தற்போது உள்ளாட்சித் தேர்தலில் 1,149 பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்படுவதால் மிக அதிக எண்ணிக்கையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்பட்டன. புதுச்சேரியில் 1,100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே இருந்தது. இதனை சமாளிக்க தெலங்கானாவிலிருந்து 1200, கர்நாடகாவிலிருந்து 1300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. புதுச்சேரியிலுள்ள 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துகள், 108 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடங்கிய 1,149 பதவிகளுக்கான தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் மாதம் 21, 25, 28 ஆகிய தேதிகளில் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

 

அதன்படி முதற்கட்டமாக அக்டோபர் 21ஆம் தேதி மாஹ, ஏனாம் மற்றும் காரைக்கால் நகராட்சிகளுக்கும் கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, டி.ஆர்.பட்டினம், திருநள்ளாறு ஆகிய 5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலுக்காக செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். மறுநாள் எட்டாம் தேதி, மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 11ஆம் தேதி மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகும். அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக அக்டோபர் 25ஆம் தேதி புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்குத் தேர்தல் நடைபெறும். இதற்கு 4ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம். 12ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.

 

15ஆம் தேதி மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள கடைசி நாளாகும். அதன்பிறகு இறுதி கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி அரியாங்குப்பம், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், வில்லியனூர், பாகூர் ஆகிய 5 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள பதவிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. இதற்கு ஏழாம் தேதி முதல் 15ம் தேதி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். 16ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். 18ஆம் தேதி மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள கடைசி நாளாகும். தொடர்ந்து அனைத்து வாக்குகளும் 7 வாக்கு எண்ணிக்கை மையங்களில் அக்டோபர் 31ஆம் தேதி ஒரே நேரத்தில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்” என அவர் கூறினார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் புதுச்சேரி மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.