![pm modi](http://image.nakkheeran.in/cdn/farfuture/lT2E4pNkhC55HP9osROWtT65Xw58TbIyH6mL1NRlA0o/1612604319/sites/default/files/inline-images/pm-ji.jpg)
குஜராத் உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்டு 60வது வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி, அந்நீதிமன்றத்தின் வைரவிழா இன்று (06.02.2021) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி வைரவிழாவை முன்னிட்டு, தபால் தலை ஒன்றை வெளியிட்டார்.
இதன்பிறகு உரையாற்றிய பிரதமர் மோடி, சட்டத்தின் ஆட்சியே, இந்தியக் கலாச்சாரம் மற்றும் மதிப்புகளின் அடிப்படையாக இருந்து வருவதாகவும், எந்தவொரு சூழ்நிலை ஏற்பட்டாலும் நீதித்துறை எப்போதும் தனது கடமையைச் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் மோடி ஆற்றிய உரை வருமாறு:
உலகிலேயே அதிகமான வழக்குகளை, காணொலி மூலம் விசாரித்தது நமது உச்ச நீதிமன்றம்தான் என்பது நமக்கு பெருமை அளிக்கிறது. நமது உயர் நீதிமன்றங்களும், மாவட்ட நீதிமன்றங்களும் கூட கரோனா பரவலின்போது ஏராளமான இணைய நடவடிக்கைகளை மேற்கொண்டன. உலகத் தரம் வாய்ந்த நீதி அமைப்பை நிறுவுவது நீதித்துறை மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
பல நூற்றாண்டுகளாக, இந்தியக் கலாச்சாரம் மற்றும் மதிப்புகளின் அடிப்படையாக சட்டத்தின் ஆட்சி இருந்து வருகிறது. சுயராஜ்யத்தின் தோற்றம் அங்கேதான் உள்ளது. சட்டத்தின் ஆட்சி, நமது சுதந்திரப் போராட்டத்தைப் பலப்படுத்தியது. நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களும் சட்டத்தின் ஆட்சிக்கு முன்னுரிமை அளித்தனர்.
நமது நீதித்துறை எப்போதுமே அரசியலமைப்பை மேலும் வலுப்படுத்த அதை நேர்மறையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் விளக்கியுள்ளது. நாட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக இருந்தாலும் அல்லது தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய எந்தவொரு சூழ்நிலையும் ஏற்பட்டாலும், நீதித்துறை எப்போதும் தனது கடமையைச் செய்து வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.