Skip to main content

இந்தியாவில் அதிகம் பரவும்  ஒமிக்ரானின் துணை மாறுபாடு!

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

corona

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக மூன்று லட்சத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து நாட்டில் நிலவும் கரோனா சூழல் குறித்து விளக்கமளித்தார்.

 

செய்தியாளர் சந்திப்பில் லாவ் அகர்வால் கூறியதாவது; நாட்டில் இதுவரை 95 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 74 சதவீதம் பேருக்கு  இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது. 97.03 லட்சம் தகுதியான நபர்களுக்கு பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் நாட்டில் கரோனா உறுதியாகும் சதவீதம் கிட்டத்தட்ட 17.75 சதவீதமாக இருந்தது. 11 மாநிலங்களில் 50,000 மேற்பட்டவர்கள் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 14 மாநிலங்களில் 10,000 ஆயிரத்திலிருந்து 50,000 நபர்கள் வரையும், 11 மாநிலங்களில் பத்தாயிரத்திற்கும் குறைவானவர்களும் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.

 

கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் 3 லட்சத்துக்கும் அதிகமானோரும், ஆந்திரப் பிரதேசம், குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரும் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சம்பந்தமாக நாங்கள் மாநிலங்களுடன் தொடர்பில் இருக்கிறோம். ஜனவரி 26 நிலவரப்படி, 551 மாவட்டங்களில், கரோனா உறுதியாகும் சதவீதம் 5-க்கும் மேல் இருக்கிறது.

 

கடந்தாண்டு மே மாதம் 7 ஆம் தேதி, கரோனாவின் இரண்டாவது அலையின் உச்சத்தில் இருந்தபோது, ஒரேநாளில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 188 பேருக்கு கரோனா உறுதியானது. 3679 உயிரிழப்புகள் ஏற்பட்டன. 3% பேருக்கு மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. 21 ஜனவரி 2022 அன்று, 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு கரோனா உறுதியானது. 435 இறப்புகள் பதிவானது. 75 சதவீதம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு லாவ் அகர்வால் தெரிவித்தார்.

 

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தின் இயக்குநர், நாட்டில் ஒமிக்ரானின் துணை மாறுபாடான பிஏ.2 இப்போது இந்தியாவில் அதிகம் பரவி வருவதாகக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஒருவரிடம் இருந்து 18 பேருக்கு பரவும் தன்மை; அடுத்த 40 நாட்கள் மிக முக்கியமானது’ - சுகாதாரத்துறை தகவல்

Published on 29/12/2022 | Edited on 29/12/2022
'One-to-18 transmission; next 40 days critical' - health department shock

 

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளை வாங்கியது. அதன் பிறகு தடுப்பூசி, ஊரடங்கு, தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை மூலம் கட்டுப்பாட்டிற்குள் வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் ‘பி.எஃப்.7’ என உருமாறி அதன் புதிய அலையைத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்தியாவிலும் புது வகை கொரோனா பரவல் தொடர்பான அச்சம் மேலோங்கி வரும் நிலையில், மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் காரணமாக மாநிலங்களில், குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் தீவிரக் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

 

இந்த நிலையில், இந்தியாவில் புதுவகை கொரோனா பரவலைத் தடுப்பதில் அடுத்த 40 நாட்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தது என சுகாதாரத்துறை கருதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வரும் ஜனவரி மாதம் மத்தியில் இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சுகாதாரத்துறை கருதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா அலை ஒன்று, இரண்டு ஆகியவற்றின் போக்குகளின் அடிப்படையில் இந்தக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

கடந்த சில நாட்களில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வகை கொரோனா மனிதர்களிடையே தொற்றும் விகிதம் அதிகமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்பிருந்த கொரோனா தொற்றுகள் ஒருவரிடம் இருந்து சராசரியாக 5 முதல் 6 பேருக்கு பரவும் வேகத்தைக் கொண்டிருந்த நிலையில், தற்போது பரவி வரும் புது வகை ‘பி.எஃப்.7’ கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து 10 முதல் 18 பேருக்கு பரவும் எனவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

 

 

Next Story

இந்தியாவில் ஒமைக்ரான் XE  தொற்று உறுதி!

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

 Omicron XE infection confirmed in India!

 

இந்தியாவில் பல மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் திரும்பபெறப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அனைத்து நாடுகளுக்கான விமான சேவையை இந்திய அரசு தொடங்கியிருந்தது. இந்நிலையில் மும்பையில் ஒருவருக்கு ஒமைக்ரான் XE என்ற புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பான தகவலை மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் XE என்ற புதிய வகை கரோனா தொற்று 10 மடங்கு வேகமாக பரவும் வைரஸ் என்றும், சீனாவில் இந்த புதிய வகை தொற்று பாதிப்பு இருந்த நிலையில் இந்தியாவில் முதன்முறையாக ஒமைக்ரான் XE உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் XE தொற்று முதலில் பிரிட்டன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் பரவல் சீனாவிலேயே அதிகம் இருந்தது. இதனால் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிராவில் மும்பை நகரில் ஒமைக்ரான் XE  உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.