உத்தர பிரதேசத்தில் ரேபரேலி தொகுதியின் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் அதிதி சிங். கடந்த 2017ம் ஆண்டு அரசியலில் நுழைந்த இவர், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு 89 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார்.இவருக்கும், பஞ்சாப் எம்.எல்.ஏ.வான அங்கத் சைனிக்கும் வருகிற 21ந்தேதி புதுடெல்லியில் திருமணம் நடைபெற உள்ளது.

இதுபற்றி பேசிய அதிதி, எனது தந்தை மறைவுக்கு முன்பே திருமணம் பற்றி முடிவானது. அதனால் திருமணம் திட்டமிட்டபடி நடைபெறும். எனினும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களே திருமணத்திற்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு உள்ளனர் என கூறினார். கடந்த அக்டோபர் 2ந்தேதி உத்தர பிரதேச அரசு அழைத்ததன்பேரில், சிறப்பு சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொண்டதற்காக காங்கிரஸ் கட்சி அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதேபோன்று காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு வரவேற்பு தெரிவித்து அதிதி சிங் சர்ச்சையை ஏற்படுத்தினார்.