
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 2024ஆம் ஆண்டும் நடைபெற இருக்கிறது. ஆனால் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளைத் தற்போதே தொடங்கிவிட்டன. கடந்த மாதம் நடைபெற்ற பிரசாந்த் கிஷோர் - சரத் பவார் சந்திப்பு, அதன்பிறகு நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம், அண்மையில் நடைபெற்ற ராகுல் காந்தி - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு ஆகிய அனைத்தும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை மையமாகக் கொண்டே நடைபெறுவதாக கருதப்படுகிறது.
இதற்கிடையே, மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். கடந்த மார்ச் மாதத்திலேயே பாஜக அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சோனியா காந்தி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியிருந்த மம்தா, தற்போது எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்திக்க ஐந்து நாள் பயணமாக நேற்று (26.07.2021) டெல்லி சென்றார்.
இந்தநிலையில, மம்தா இன்று மதியம் 2 மணிக்கு காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தை சந்தித்தார். அதன்பிறகு மூன்று மணிக்கு காங்கிரஸ் தலைவரான ஆனந்த் ஷர்மாவையும், மாலை 6.30 மணிக்கு மற்றொரு காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வியையும் சந்திக்கிறார்.
இதற்கிடையியே 4 மணிக்கு பிரதமர் மோடியையும் மம்தா சந்திக்கவுள்ளார். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடியை மம்தா சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மம்தா அடுத்தடுத்த நாட்களில் சோனியா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.