Skip to main content

அவருக்கு படுக்கை கொடுங்கள்; இல்லையென்றால் ஊசிபோட்டு கொன்றுவிடுங்கள் - தந்தைக்காக கதறிய மகன்!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

sagar kishor

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி ஒருலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

இதனால் மஹாராஷ்ட்ரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், கரோனா பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க படுக்கை வசதியில்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கரோனா பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைக்கு வெளியேயே சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்களில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

 

இவ்வாறு சிகிச்சைக்காக காத்திருக்கும் ஒருவரின் மகன், ‘படுக்கையைத் தாருங்கள் அல்லது தந்தையைக் கொன்றுவிடுங்கள்’ என கதறிய நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சாகர் கிஷோர் நஹர்ஷெடிவர் என்பவரின் தந்தை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. சாகர் கிஷோர், தனது தந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க முயன்றுள்ளார். ஆனால் பல மருத்துவமனைகளுக்குச் சென்றும், படுக்கை வசதி இல்லாததால் அவரது தந்தைக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர், தந்தையை தெலங்கானாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கும் மருத்துவமனைகளில் இடமில்லை.

 

இதனையடுத்து அவர், தனது தந்தையை அழைத்துக்கொண்டு மஹாராஷ்ட்ராவிற்கே திரும்பியுள்ளார். அப்போதும் மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை. 24 மணி நேரத்திற்குள் இரண்டு மாநிலங்கள் சுற்றியும் அவரது தந்தைக்கு மருத்துவமனையில் அனுமதி கிடைக்காத நிலையில், ஆம்புலன்ஸில் அவரது தந்தைக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த ஆக்சிஜன் அளவும் குறைந்துகொண்டே வந்துள்ளது.

 

இந்தநிலையில், மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த அவரிடம் ஊடகம் ஒன்று பேசியுள்ளது. அப்போது அவர் "அவருக்குப் படுக்கை ஒன்றை ஏற்பாடு செய்யுங்கள் அல்லது ஊசி போட்டுக் கொன்றுவிடுங்கள். என்னால் அவரை இந்த நிலைமையில் வீட்டுக்கு அழைத்துச் செல்ல இயலாது. உங்களிடம் படுக்கைகளும் இல்லை" என தெரிவித்தார். அவர் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருவதோடு, பலரையும் உலுக்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் நடந்த படுகொலை; சி.சி.டி.வி கேமராவில் பதிவான பகீர் காட்சி!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Incident in maharashtra hotel and scene recorded on CCTV camera

மகாராஷ்டிரா மாநிலம், புனே - சோலாப்பூர் நெடுஞ்சாலை பகுதியில் பிரபலமான தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில், நேற்று (17-03-24) மதியம் 4 பேர் கொண்ட நண்பர்கள் டேபிளில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஹோட்டலில் துப்பாக்கிகளுடன் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள், டேபிளில் அமர்ந்திருந்த ஒரு நபரை நோக்கி சுட்டனர். தலையில் குண்டு பாய்ந்த அவர், கீழே விழுந்து மயங்கி விழுந்தார். இதனையடுத்து, அங்கு அமர்ந்திருந்த மற்ற நபர்கள் அங்கிருந்து பதறி அடித்து ஓடினர். 

இந்த சம்பவம் அரங்கேறிய சிறிது நேரத்திலேயே, மேலும் 6 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலில் நுழைந்து, துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிய நபரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். அதன் பின்னர், அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில், பலத்த காயமடைந்த நபர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர், அவினாஷ் என்பதும், அவர் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் என்பதும் தெரியவந்தது.

மேலும், தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹோட்டலில், நடந்த இந்த கொடூர படுகொலை, அங்கு பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகியிருக்கிறது. அந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து கொலை செய்த நபர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

“பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
BJP is the biggest threat to India Chief Minister MK Stalin

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மணிப்பூரில் துவங்கினார். இந்த யாத்திரை மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக நடைபெற்றது. இதனையடுத்து மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று (17.03.2024) நிறைவு செய்யப்பட்டது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்த ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துகள். மும்பையை அடைந்துள்ள இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும். நாடாளுமன்ற மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை விரைவில் ஆட்சியில் இருந்து அகற்றுவோம். பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி, பொய் பிரச்சாரம் ஆகியவற்றை இந்தியா கூட்டணி விரைவில் முறியடிக்கும்.

இந்தியா கூட்டணியால் அச்சமடைந்துள்ள பிரதமர் மோடி, இந்த கூட்டணிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் முகம் அம்பலமாகியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பா.ஜ.க. ரூ. 8 ஆயிரத்து 250 கோடியை குவித்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஒரே இலக்கு பா.ஜ.க.வை தோற்கடிப்பது தான். பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள பாலாசாகேப் தாக்கரேவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “உத்தரப் பிரதேசத்தில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதன் காரணமாக நான் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது” என்று கூறப்பட்டுள்ளது.