Skip to main content

லட்சத்தீவு விவகாரம்: அதிரடி தீர்மானத்தை நிறைவேற்றியது கேரளா!

Published on 31/05/2021 | Edited on 31/05/2021

 

kerala assembly

 

இந்தியாவில் மிகச் சிறிய நிலப்பரப்பு கொண்ட யூனியன் பிரதேசம் லட்சத்தீவு. 65,000 பேரை மக்கள் தொகையாகக் கொண்ட இந்த தீவுக்கூட்டத்தில் 98 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். பெரும்பாலானோர் பேசுகின்ற மொழி மலையாளம். தொடக்கக் காலங்களிலிருந்தே லட்சத்தீவுக்கும் கேரளாவுக்கும் இடையேயான உறவென்பது வலுவானதாகவே இருந்துவருகிறது. மலையாள மொழி மட்டுமின்றி ஆங்கிலமும் அதிகளவில் பேசப்படுகிறது. அதனுடன் திவேகி, ஜெசெரி உள்ளிட்ட வட்டார மொழிகளும் பேசப்படுகின்றன. பெரும்பாலான மக்கள் மீன்பிடி தொழிலையும், மீன் பதப்படுத்தும் தொழிலையும், சுற்றுலாவையும் நம்பிதான் இங்கு இருக்கின்றனர்.

 

யூனியன் பிரதேசமான லட்சத்தீவு பகுதி, மத்திய அரசால் நியமிக்கப்படும் நிர்வாக அதிகாரியினால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த நிர்வாக அதிகாரி பொறுப்புக்கு வழக்கமாக ஐஏஎஸ்/ஐபிஎஸ் அதிகாரிகள்தான் நியமிக்கப்படுவர். ஆனால், இம்முறை ஓர் அரசியல்வாதி இப்பகுதியின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதே பிரச்சினைகளின் தொடக்கப்புள்ளி. லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக இருந்த ஐபிஎஸ் தினேஷ்வர் சர்மா திடீரென உயிரிழக்க, அவருக்குப் பதிலாக பிரஃபுல் கோடா படேல் என்பவரை இப்பொறுப்பில் நியமித்தது மத்திய அரசு.

 

பிரஃபுல் கோடா படேல் பதவியேற்றவுடன் கரோனா தடுப்பூசி விதிமுறைகளில் கைவைத்தார். இதனால் அங்கு கரோனா பரவல் அதிகமானது. பள்ளிகளில் வழங்கப்பட்டுவந்த அசைவ உணவு நிறுத்தப்பட்டது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்தத் தீவில் மாட்டுக்கறியைத் தடை செய்யும் வகையில் சட்டவரைவு கொண்டுவரப்பட்டுள்ளது. குற்றங்கள் குறைவான இந்த தீவில் குண்டாஸ் சட்டத்தை அமல்படுத்த சட்டவரைவு கொண்டுவரப்பட்டுள்ளது. இது சட்டமானால் எந்தக் காரணமும் கூறாமல், ஒருவரை ஒருவருடம்வரை தடுப்புக்காவலில் வைக்கலாம். ஏற்கனவே மக்கள் தொகை குறைவான லட்சத்தீவில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால் ஏற்கனேவே கொதித்திருந்த லட்சத்தீவு மக்களுக்கு மேலும் ஒரு இடியாக லட்சத்தீவு மேம்பாட்டு சட்டவரைவு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வரைவு சட்டமாகும் பட்சத்தில் யார் நிலத்தையும், எந்த நிலத்தையும் அரசு கையகப்படுத்தலாம். இது அந்த மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தற்போது பெரிய அளவில் பிரஃபுல் கோடா படேலுக்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. அவரைத் திரும்பப் பெற வேண்டுமென நாட்டிலுள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. 

 

கேரளாவிலிருந்தும்பிரஃபுல் கோடா படேலை திரும்பப் பெறக் கோரி கோரிக்கைகள் எழுந்தன. அம்மாநிலத்தின் அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள்வரை லட்சத்தீவு மக்களுக்கு ஆதராகவும், பிரஃபுல் கோடா படேலுக்கு எதிராகவும் குரல்களை எழுப்பினர். இந்தநிலையில் கேரளா சட்டமன்றத்தில், லட்சத்தீவு மக்களுக்கு ஒற்றுமையைத் தெரிவித்தும், பிரஃபுல் கோடா படேலை திரும்பப் பெறக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் லட்சதீவு விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டுமென்றும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

 

முன்னதாக இந்த தீர்மானத்தை முன்மொழிந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், "லட்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும். மக்களின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவது மத்திய அரசின் பொறுப்பு. மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படும் நிர்வாகி அகற்றப்பட வேண்டும். லட்சத்தீவு மக்களின் உயிர்களையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.