Skip to main content

ஜம்மு காஷ்மீர் எப்போது பாகிஸ்தானின் அங்கமானது? - ஃபரூக் அப்துல்லா பேச்சு! 

Published on 14/10/2021 | Edited on 14/10/2021

 

farooq abdullah

 

ஜம்மு காஷ்மீரில் இரண்டு ஆசிரியர்கள், மருந்துக்கடை உரிமையாளர், தெருவோர உணவுக்கடை உரிமையாளர் உள்ளிட்ட ஏழு பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். இந்தநிலையில், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பள்ளி முதல்வர் ஒருவரின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

 

இதில் கலந்துகொண்டு பேசிய ஜம்மு காஷ்மீரின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானுக்கு சொந்தமாக மாறாது என தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "நாம் இந்த மிருகங்களை (தீவிரவாதிகளை) எதிர்த்துப் போராட வேண்டும். இந்த இடம் ஒருபோதும் பாகிஸ்தானாக மாறாது. எந்த சூழ்நிலையிலும் நாம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்போம். கொலையாளிகள் என்னை சுட்டுக்கொன்றாலும் சரி, ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் அங்கம் ஆகாது" என தெரிவித்தார்.

 

மேலும் ஜம்மு காஷ்மீரிலிருந்து மக்கள் வெளியேறியபோது, சீக்கியர்கள் அங்கேயே இருந்ததை நினைவுபடுத்திய ஃபரூக் அப்துல்லா, "நாம் இங்கேயே வாழ்ந்து இங்கேயே இறக்க வேண்டும். நான் அதற்காக பெருமைப்படுகிறேன். அந்த நேரத்தில் நீங்கள் எனக்கு நம்பிக்கையை அளித்தீர்கள்" என கூறினார்.

 

தொடர்ந்து அவர், "ஒரு ஆசிரியர் நம் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து அவர்களுக்கு வழிகாட்டுவார். அவரைக் கொன்றுவிட்டு இஸ்லாமிற்கு சேவை செய்வதாக நினைத்தால், கண்டிப்பாக இல்லை. அது சாத்தானுக்கு செய்யும் சேவை. சாத்தான் நரகத்திற்குச் செல்லும். அதற்கு சேவை செய்பவர்களும் நரகத்திற்குச் செல்வார்கள். நாடு முழுவதும் எரிந்து கொண்டுள்ளது. நம்மைப் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இதைச் செய்பவர்கள் வெற்றிபெற மாட்டார்கள். சில காலம் நமக்குப் பின்னடைவு ஏற்படும். ஆனால் கடவுள் அவர்களை வெற்றிபெற அனுமதிக்க மாட்டார். நம்மைப் பிரிக்க முயல்பவர்கள் இப்போதைக்கு சில நன்மைகளைப் பெறுவார்கள், ஆனால் இறுதியில் அழிந்து போவார்கள்" என தெரிவித்தார்.

 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நாம் அஞ்சாமல் வாழ வேண்டும். தீவிரவாதிகள் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்கள். அவர்கள் என்ன நினைத்தாலும் அவர்கள் தோல்வியடைவார்கள். ஆனால் முஸ்லிம்கள், சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நாம் அனைவரும் வலுவாக நிற்க வேண்டும். இந்தியாவில் முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்களைப் பிரிக்கும் ஒரு வகுப்புவாத புயல் உருவாகிவருகிறது. இந்தப் பிரிவினை அரசியலை நிறுத்த வேண்டும். அது நிறுத்தப்படாவிட்டால் இந்தியன் பிழைக்கமாட்டான். இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்றால் நாம் ஒன்றாக வாழ வேண்டும், அப்போதுதான் இந்தியா முன்னேறும்" என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

குஜராத்தில் ரூ. 480 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
unwanted things seized in Gujarat worth Rs 480 crore

குஜராத் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போர்பந்தர் துறைமுகம் அருகே 6 பேருடன் படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் படகில் வந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது படகில் வந்தவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து படகில் சோதனை மேற்கொண்டபோது போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 480 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக 6 பாகிஸ்தானியர்களை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் குஜராத்தில் கடந்த 30 நாட்களில் இரண்டாவது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.