Skip to main content

இந்திய அரசின் அறிவிப்பு... மகிழ்ச்சியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

Government of India announces ... Foreign tourists happy!


இந்தியாவில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா பரவத் தொடங்கியது. உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உள்நாட்டு, சர்வதேச பயணிகளின் விமான போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது. இருப்பினும், சர்வதேச சரக்கு விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு உள்நாட்டு விமான போக்குவரத்து படிப்படியாக அதிகரித்தபோதிலும், சர்வதேச விமான போக்குவரத்துக்கு இன்னும் தடை நீடிக்கிறது. சில குறிப்பிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அந்த நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

 

சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டவுடன், வெளிநாட்டினர் இந்தியா வருவதற்கான அனைத்து வகையான விசாக்கள் வழங்கும் பணிகளும் நிறுத்தப்பட்டன. கரோனா பரவல் குறைய தொடங்கியவுடன், சுற்றுலா விசாவைத் தவிர, இதர வகை விசாக்கள் மட்டும் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டன. அதே சமயத்தில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வராததால், சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சுற்றுலாவைச் சார்ந்த ஓட்டல்கள், சொகுசு விடுதிகள், சுற்றுலா வாகனங்கள் ஆகியவற்றின் வருவாய் பாதிக்கப்பட்டது. சுற்றுலா வழிகாட்டிகள் போன்ற பலர் வேலை இழந்தனர்.

 

இந்தச் சூழலில் இந்தியாவில் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 90 கோடியைக் கடந்தது. அதேபோல், வெளிநாடுகளிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது மும்முரமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (07/10/2021) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

 

அந்த அறிவிப்பில், "முதற்கட்டமாக, தனி விமானத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டும் இந்தியா வர அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் வருகிற அக்டோபர் 15ஆம் தேதியிலிருந்து இந்தியாவுக்கு வரலாம். அவர்களுக்குப் புதிதாக சுற்றுலா விசா வழங்கப்படும். அத்துடன், தனி விமானம் அல்லாமல், வழக்கமான விமானத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நவம்பர் 15ஆம் தேதியிலிருந்து அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கும் புதிதாக சுற்றுலா விசா வழங்கப்படும். வெளிநாட்டு பயணிகள் அனைவரும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் வருகிற காரணத்தால், தங்கள் குடும்பத்தினருடன் இந்தியாவிற்கு வந்து கொண்டாடக் காத்திருக்கும் வெளிநாட்டினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மத்திய அரசின் அறிவிப்பால், இந்தியாவில் சுற்றுலாத்துறை மீண்டெழும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  

 

வெளிநாட்டு பயணிகளை ஈர்க்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், ஒன்றரை ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை, வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உள்துறை அமைச்சகம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

 

பொருளாதார ரீதியிலாக இந்திய விமான நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சர்வதேச விமான சேவையைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மற்றும் ஈரான் செல்லும் இந்தியர்களுக்கு மத்திய அமைச்சகம் அறிவுறுத்தல்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Union Ministry Instructions For Indians traveling to Israel and Iran

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையே, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர்ச்சூழல் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலை சமாளிப்பதற்கு இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

Union Ministry Instructions For Indians traveling to Israel and Iran

இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, ‘இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் நிலவும் போர் சூழலைக் கருத்தில் கொண்டு அடுத்த அறிவிப்பு வரும் வரை, அனைத்து இந்தியர்களும் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அந்த நாடுகளில் உள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரங்களை தொடர்பு கொண்டு தங்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மிகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறும், முடிந்த வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று தெரிவித்தார்.

Next Story

“எங்களை காப்பாற்றுங்கள்” - ரஷ்ய ராணுவத்தால் கதறும் இந்தியர்கள்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 Indian tourists shouts Save us from Russia

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் சூழ்நிலை உருவாகி நீடித்து வரும் நிலையில் மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை உக்ரைன் மீது தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் உக்ரைன் எல்லையில் சிக்கியிருப்பதாக அவர்கள் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், 7 இந்தியர்கள் ரஷ்ய ராணுவ உடைகள் அணிந்து பேசியதாவது, “கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி புத்தாண்டை கொண்டாடுவதற்காக ரஷ்யாவிற்கு சுற்றுலா பயணிகளாக வந்தோம். வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல எங்களுக்கு உதவிய ஒரு ஏஜெண்டை நாங்கள் சந்தித்தோம். அதன் பின்னர், அந்த ஏஜெண்ட் எங்களை பெலாரஸுக்கு அழைத்துச் செல்ல முன்வந்தார். ஆனால், அங்கு விசாவுடன் தான் செல்ல வேண்டுமென்று எங்களுக்கு தெரியாது. 

அதன் பின், நாங்கள் பெலாரஸுக்குச் சென்றோம். அங்கு நாங்கள் அவருக்கு பணம் கொடுத்தோம். ஆனால், அவர் அதிக பணம் கேட்டார். எங்களிடம், அவர் கேட்ட பணம் இல்லாததால் எங்களை நெடுஞ்சாலையில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன் பின்னர், அங்கு வந்த போலீசார், எங்களை பிடித்து ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டனர். ரஷ்ய இராணுவம் எங்களை தெரியாத இடத்தில் மூன்று, நான்கு நாட்கள் அடைத்து வைத்தது. பின்னர் உதவியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் சமையல்காரர்களாக பணிபுரிய எங்களை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வற்புறுத்தினார்கள். ஒருவேளை கையெழுத்து போடவில்லையென்றால், எங்களை 10 ஆண்டுகள் சிறையில் அடைத்து விடுவோம் என அவர்கள் மிரட்டினார்கள். 

அந்த ஒப்பந்தம், அவர்களின் மொழியில் இருந்ததால், அது எங்களுக்கு புரியவில்லை. ஆனால், நாங்கள் அதில் கையெழுத்திட்டோம். அதன் பிறகு, அவர்கள் எங்களை ராணுவப் பயிற்சி மையத்தில் சேர்த்தனர். பின்னர் தான், நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அவர்கள் எங்களை ராணுவத்தில் சேர்த்து பயிற்சி கொடுத்தனர். 

ஒரு வருடத்திற்குப் பிறகுதான் நாங்கள் வெளியேற முடியும் என்று ரஷ்ய இராணுவம் எங்களிடம் கூறுகிறது. உக்ரைன் எல்லையில் எங்களை இறக்கிவிட்டு துப்பாக்கியுடன் முன்னேறிச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டனர். அவர்கள், இந்த போரில், வெற்றிபெற உதவுமாறு எங்களைக் கேட்கிறார்கள். நாங்கள் போருக்கு தயாராகவில்லை. அவர்களுக்கு எப்படி உதவுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதில், நாங்கள் பிழைக்காமல் கூட போகலாம். இது எங்கள் கடைசி வீடியோவாக இருக்கலாம். அதனால், எங்களை காப்பாற்றுங்கள்” என்று தெரிவித்தனர். 

இதனிடையே, ரஷ்யா சார்பில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அஸ்பன் என தெரியவந்துள்ளது. மேலும், அந்த 7 பேர் யார் என்பது குறித்த விசாரணையில், ககான்தீப் சிங் (24), லவ்பீரித் சிங் (24), நரேன் சிங் (22), குர்பீரித் சிங் (21), குர்பீர்த் சிங் (23), ஹர்ஸ் குமார் (20), அபிஷேக் குமார் (21) எனத் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த 7 இந்தியர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு செய்யும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.