Skip to main content

ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளியில் பட்டம் பெற்றாரா மத்திய உள்துறை இணையமைச்சர்? - வெடித்தது புதிய சர்ச்சை!

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

home affairs MINISTER FOR STATE

 

பிரதமர் மோடி உட்பட பாஜகவை சேர்ந்த சில மத்திய அமைச்சர்களின் கல்வித்தகுதி ஏற்கனவே சர்ச்சையான நிலையில், தற்போது மத்திய உள்துறை இணையமைச்சராக கடந்த 7 ஆம் தேதி பொறுப்பேற்ற நிசித் பிரமானிக்கும் கல்வி தகுதி தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் நடந்த மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற நிசித் பிரமானிக், மக்களவை உறுப்பினர் பதவியை தக்கவைத்துக்கொள்ள சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.

 

ELECTION AFFIDAVIT
                                                  தேர்தல் பிரமாண பத்திரம் 

 

இந்த சட்டமன்ற தேர்தலிலும், 2019 மக்களவை தேர்தலிலும் தான் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் மக்களவை இணையதளத்தில் நிசித் பிரமானிக், பி.சி.ஏ பட்டப்படிப்பு (BCA) படித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குவங்க திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் இதனை சுட்டிக்காட்டவும், இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து சர்ச்சையாகியுள்ளது.

 

LOK SABHA WEBSITE
                         மக்களவை இணையதளத்தில்

 

இந்தவிவகாரம் குறித்து மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் நிசித் பிரமானிக்கிடம் போட்டியிட்டு தோற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ உதயன் குஹா, "மார்ச் மாதம் வரை அவரது அதிகபட்ச கல்வித்தகுதி 12 வகுப்பு தேர்வை எழுதியிருப்பது. அதில் தேர்ச்சியடைந்தாரா என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை. 12 வகுப்பில் தேர்ச்சி பெறாமல் ஒருவர் எப்படி பட்டம் பெற்றிருக்க முடியும்" என கேள்வியெழுப்பியுள்ளார்.

 

நிசித் பிரமானிக், பாலகுரா ஜூனியர் பேசிக் ஸ்கூலில் பட்டம் பெற்றிருப்பதாக மக்களவை இணையதளத்தில் கூறப்பட்டிருக்கும் நிலையில், பாலகுரா ஜூனியர் பேசிக் ஸ்கூல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான பள்ளிக்கூடம் எனவும் உதயன் குஹா குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து மேற்குவங்க பாஜக தலைவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர். இந்த விவகாரம் குறித்து நிசித் பிரமானியே பதிலளிப்பதுதான் சரியாக இருக்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மற்றும் ஈரான் செல்லும் இந்தியர்களுக்கு மத்திய அமைச்சகம் அறிவுறுத்தல்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Union Ministry Instructions For Indians traveling to Israel and Iran

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையே, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர்ச்சூழல் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலை சமாளிப்பதற்கு இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

Union Ministry Instructions For Indians traveling to Israel and Iran

இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, ‘இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் நிலவும் போர் சூழலைக் கருத்தில் கொண்டு அடுத்த அறிவிப்பு வரும் வரை, அனைத்து இந்தியர்களும் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அந்த நாடுகளில் உள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரங்களை தொடர்பு கொண்டு தங்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மிகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறும், முடிந்த வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று தெரிவித்தார்.

Next Story

பரோலில் வெளியே வரும் கைதிகளைக் கண்காணிக்க ‘ஜிபிஎஸ்’ கருவி; உள்துறை அமைச்சகம் அனுமதி

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

'inistry of Home Affairs permission to GPS'device to track prisoners

 

கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி சிறைத்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் குழு, மத்திய உள்துறையிடம் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், ‘ஜாமீனில் விடுதலையாகும் சிறைக் கைதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவியைப் பொறுத்தலாம்’ என்று பரிந்துரை செய்தது. இது தொடர்பான நடவடிக்கையை காஷ்மீர் போலீசார் உடனடியாக அமல் செய்தனர். இந்த நிலையில், அனைத்து மாநிலங்களில் உள்ள சிறைவாசிகள் பரோலில் வெளியே வந்தால் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவியைப் பயன்படுத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

 

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறையில் அடைக்கப்பட்டுள்ள கடும் குற்றங்கள் செய்த குற்றவாளிகளை மற்ற குற்றவாளிகளிடம் இருந்து பிரிக்க வேண்டும். தற்காலிக விடுதலை அல்லது பரோலில் வெளியே வரும் கைதிகளைக் கண்காணிக்கும் வகையில் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படலாம். அதேபோல், கைதிகள் தங்களின் நடமாட்டத்தை கண்காணிக்க இத்தகைய கருவியை அணிய வேண்டும் என்று விரும்பினால் சிறையிலிருந்து அவர்களுக்கு விடுப்பு அளிக்கலாம். 

 

சிறையிலிருந்து வெளியே சென்ற பிறகு அந்தக் கருவியை அகற்றினால், எதிர்காலத்தில் வழங்கப்படும் எந்தவொரு சிறை விடுமுறையையும் அந்த கைதிகளுக்கு வழங்கப்படுவதை ரத்து செய்யலாம். எனவே, பரோலில் விடுவிக்கப்படும் கைதிகளைக் கண்காணிக்கும் வகையில் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகளை அந்தந்த மாநில அரசுகள் பொறுத்தலாம்” என்று தெரிவித்துள்ளது.