Skip to main content

"பாஜகவின் ட்ரோஜன் குதிரை மம்தா.. அவரை ஒருபோதும் நம்ப முடியாது" - மக்களவை காங்கிரஸ் தலைவர் கடும் விமர்சனம்!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

MAMATA BANERJEE

 

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்க்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் ஒருபகுதியாக காங்கிரஸும் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸும் தேசிய அளவில் கைகோர்த்துள்ளன. அண்மையில் டெல்லி சென்ற மம்தா, சோனியா மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து விவாதித்தார். அதன்பிறகு சோனியா காந்தி நடத்திய எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திலும் மம்தா பங்கேற்றார்.

 

அதேபோல் காங்கிரஸ் கட்சி, பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தாமால் அவரது வெற்றிக்கு ஆதரவு தெரிவித்தது. இதற்கிடையே, திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவர்கள் சில வாரங்களுக்கு முன்பு திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தனர். அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் 30 ஆண்டுகளாக அங்கம் வகித்தவரும், காங்கிரஸ் மகளிரணித் தலைவியாக இருந்தவருமான சுஷ்மிதா தேவ் அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார். இதனையடுத்து, சுஷ்மிதா தேவை திரிணாமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினராக்கியது.

 

இதன்பிறகு நேற்று (29.09.2021) கோவாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான லூய்சின்ஹோ ஃபலேரோ திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார். இந்தநிலையில், காங்கிரஸில் இருந்து பலர் திரிணாமூல் காங்கிரஸிற்கு தாவிவருவது இரு கட்சிகளுக்கிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவரும், மக்களவை காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்துள்ளதோடு, அவரை எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இருந்து விலக்க வேண்டும் என கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கூறியுள்ளதாவது, “மம்தா பானர்ஜி எப்போதுமே தனக்கு உணவளித்த கையைக் கடிக்க முயல்வார். எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை உருவாக்கும் முயற்சிகளில் இருந்து அவரை விலக்கி வைக்க வேண்டும். பாஜகவின் ட்ரோஜன் குதிரையான அவரை, பாஜகவிற்கு எதிரான போராட்டத்தில் ஒருபோதும் நம்ப முடியாது.

 

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் பிடியிலிருந்து தனது குடும்பத்தினரையும் கட்சித் தலைவர்களையும் பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜகவையும் மகிழ்விக்க அவர் தீவிரமாக முயற்சி செய்கிறார். காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற இலக்கை அடைய அவர் பாஜகவுக்கு உதவுகிறார். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சிதைக்க திரிணாமூல் காங்கிரஸ் முயற்சிக்கிறது.

 

காங்கிரஸ்ஸை பலிகொடுத்து திரிணாமூல் காங்கிரஸ் வளர்கிறது. முதலில் அதை மேற்கு வங்கத்தில் செய்தார்கள். தற்போது அதை தேசிய அளவில் செய்ய முயற்சிக்கிறார்கள். திரிணாமூல் காங்கிரஸ் அதன் கூட்டாளிகளை முதுகில் குத்துவதற்குப் பெயர் பெற்றது.”

இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அக்பர் - சீதா’ சர்ச்சை; சிங்கங்களுக்கு சூட்டப்பட்ட புதிய பெயர்கள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
New names given to lions on 'Akbar - Sita' Controversy

மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுரி உயிரியல் பூங்கா ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பூங்காவிற்கு, கடந்த 12 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து இரண்டு சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு ‘அக்பர்’ என்றும் 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு ‘சீதா’ என்றும் முன்னரே பெயரிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த இரண்டு சிங்கங்களையும் ஒரே கூண்டில் அடைக்க உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்ததாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து, ‘சீதா’ மற்றும் ‘அக்பர்’ சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘முகலாய மன்னரின் பெயரான அக்பர் என்ற பெயரையும் ராமாயணத்தில் வரும் சீதாவின் பெயரையும் சிங்கங்களுக்கு வைத்து ஒரே இடத்தில் வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்து மத வழக்கங்களில் சீதா தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர் உடன் சீதாவைத் தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். இதனால் அந்தச் சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா அமர்வில் கடந்த 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “சிங்கத்துக்கு அக்பர் என்று பெயர் வைப்பதை சீதா மட்டுமல்ல நானும் ஆதரிக்கவில்லை. இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர், மத போராளிகள், மரியாதைக்குரியவர்கள். எனவே இது போன்ற பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க வேண்டாம். எனவே, சர்ச்சைகளைத் தவிர்க்க இரண்டு சிங்கங்களுக்கும் வேறு பெயர்களை வைக்க வேண்டும்” என்று கூறி மாநில அரசிற்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, திரிபுரா உயிரியல் பூங்காவில் இருந்த சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர் வைக்கப்பட்டதற்காக, அம்மாநிலத்தின் தலைமை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை திரிபுரா அரசு இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டது.

இந்த நிலையில், அக்பர் - சீதா பெயரால் சர்ச்சையில் சிங்களுக்கு புதிய பெயரை வைக்க மேற்கு வங்க அரசு பரிந்துரை செய்துள்ளது. அதில், அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கு ‘சூரஜ்’ என்ற பெயரும், சீதா என்ற பெண் சிங்கத்திற்கு ‘தயா’ என்றும் புதிய பெயர்களை மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் மேற்கு வங்க அரசு பரிந்துரைத்துள்ளது.

Next Story

“வாக்காளர்கள் கவனத்திற்கு...” - சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.32 கோடி ஆகும். இதில் முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும். 80 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் ஆவர். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடியும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடியும், திருநர் வாக்காளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. மொத்த வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள் (65 சதவிகிதம்) வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்களும், கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது மாலை 6 மணிக்குள் வரிசையில் வந்து நிற்பவர்கள் வாக்களிக்கலாம். கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை முழுமையாக வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 950 ஆகும். இதில் ஆண் வேட்பாளர்கள் 874 பேரும், பெண் வேட்பாளர்கள் 76 பேரும் ஆவர்.

வாக்குச்சாவடி வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்லலாம். ஆனால் வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 13 வகையான அரசு ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க இலவசமாக வாகனம் அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.