Skip to main content

மருத்துவ அடையாள எண் என்பது என்ன? 

Published on 28/09/2021 | Edited on 28/09/2021

 

ayushman bharat digital mission scheme medical identity card

 

மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டமான 'ஆயுஷ்மான் பாரத்' மின்னணு இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் தொடங்கி வைத்தார். 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இத்திட்டம், ஆறு யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டுவரும் நிலையில், நாடு முழுமைக்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்துள்ளார்.

 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டில் உள்ள அனைவருக்கும் மருத்துவ அடையாள அட்டை ஆயுஷ்மான் திட்டத்தில் வழங்கப்படும். இது ஒரு தொலைநோக்கு திட்டம். இதன் மூலம் ஏழை முதல் அனைத்து தரப்பினருக்கும் மருத்துவ வசதி பெறுவது எளிதாகும். மருத்துவர்களை அணுகும்போது மொழி பிரச்சனை இருக்காது. மருத்துவ சிகிச்சைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் நீக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

 

மருத்துவ அடையாள எண் என்பது என்ன? என்பது குறித்து பார்ப்போம்

மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தில் ஒவ்வொரு நபருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும். மருத்துவ சிகிச்சை விவரங்கள், மருத்துவ ஆவணங்கள், பரிசோதனை முடிவுகள் என ஒரு நபரின் அனைத்து மருத்துவ தகவல்களும் அடையாள எண்ணில் கொண்டுவரப்படும். மின்னணு முறையில் இணைக்கப்பட்டிருக்கும் அடையாள எண்ணை, செல்பேசி செயலி உதவியுடனும் அணுக முடியும். மருத்துவ நிபுணர்களின் பதிவேடு, சுகாதார வசதிகளின் பதிவுகள், நவீன பாரம்பரிய மருத்துவர்கள் குறித்த தகவல்கள் அடங்கிய களஞ்சியமாக செயலி செயல்படும்.

 

மருத்துவர்கள், மருத்துவ சேவை வழங்குவோர் அடையாள எண்ணை கணினியில் உள்ளீடு செய்தால் அனைத்து விவரங்களும் தெரிந்துவிடும். மருத்துவ அடையாள எண் வழங்குவதால் மருத்துவ சிகிச்சை அளிப்பது எளிதாகும். அதே நேரம், பாதுகாப்பு, ரகசியத் தன்மை மற்றும் மருத்துவம் சம்பந்தமான தனிநபர் தகவல்களின் தனியுரிமை உறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரமணா பட பாணியை மிஞ்சும் முறைகேடு! 

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

Ramana movie style surpassing!

 

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு, ஆகஸ்ட் 7, 2023ஆம் தேதி மறக்கமுடியாத நாளாகிவிட்டது. ஆம், அன்றைய தினம்தான் மோடி அரசின் செயல்பாடுகளில், சுமார் 7.5 லட்சம் கோடி அளவிலான ஊழல்கள் குறித்த சி.ஏ.ஜி. அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மருத்துவக் காப்பீட்டுத் துறையில் நடந்துள்ள ஊழல்கள் ரமணா பட பாணியையும் மிஞ்சக்கூடியதாக உள்ளது!

 

ஆயுஷ்மான் பாரத் -பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற காப்பீட்டுத் திட்டத்தில் இணையும் ஒவ்வொரு பயனாளியின் குடும்பத்தினருக்கும் குறிப்பிட்ட விதிமுறைகளின்படி 5 லட்ச ரூபாய் அளவிலான மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கான நிதிப் பங்களிப்பில், ஒன்றிய, மாநில அரசுகள் 60:40 என்ற அளவில் பங்களிப்பு செய்கின்றன. மாநில அரசின் பங்களிப்பு இருந்தும் அதனை தனிப்பட்டு பிரதமரின் திட்டமாகக் காட்டுவதே தவறான விளம்பரமாகும்.

 

இத்திட்டத்துக்கான டேட்டா தளத்தை ஆய்வு செய்த சி.ஏ.ஜி., அதில் பயனாளிகளின் பெயர்கள், பிறந்த தேதி, சுகாதாரம் குறித்த கணக்குகள், பயனாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை என அனைத்தையும் ஆய்வு செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்தது. பல தகவல்கள் பொய்யாக, போலியாக ஏற்றப்பட்டிருந்தன. இதில் குறிப்பிடப்பட்டிருந்த மொபைல் எண்களைக் கொண்டு பயனாளர்களைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை.

 

* இத்திட்டத்தில் இணைவதற்கான தகுதியில்லாத குடும்பங்களை முறைகேடாக இணைத்திருந்த வகையில் மட்டுமே சுமார் 22.44 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந் திருப்பதாகக் கணக்கு வெளியிட்டுள்ளது சி.ஏ.ஜி.

 

* சுமார் 2.5 லட்சம் பயனாளர்களுக்கு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற தேதிக்குப் பின்னர் அறுவைச்சிகிச்சை நடந்ததாக தேதி குறிப்பிடப்பட்டுள்ளது! இந்த தில்லுமுல்லுவில் 1.79 லட்சம் பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். இந்த மோசடியில் அரசாங்கத்திடமிருந்து 300 கோடிக்குமேல் மருத்துவக்காப்பீடாகப் பெறப்பட்டுள்ளது!

 

* மருத்துவச் சிகிச்சைக்கான தொகையை க்ளைம் செய்யும்முன்பே அதற்கான தொகை அனுப்பப்பட்டு மோசடி நடந்திருக்கிறது!

 

* 45,846 மருத்துவக் காப்பீட்டு க்ளைம்களில், சம்பந்தப்பட்ட நோயாளி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தேதி உள்ளது!

 

* ஒரே நோயாளி, ஒரே நேரத்தில் பல மருத்துவமனைகளில் சிகிச்சையிலிருந்ததாகவும் காட்டப்பட்டிருக்கிறது!

 

* 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவக் காப்பீட்டின்கீழ் சிகிச்சையளித்து மோசடி நடந்துள்ளது.

 

* போலியான ஆதார் எண் அல்லது பயன்பாட்டில் இல்லாத மொபைல் எண்களைப் பதிவு செய்துள்ளார்கள். உதாரணத்துக்கு, 9999999999 என்ற செல்போன் எண்ணில், மொத்தம் 7.49 லட்சம் பேரை இத்திட்டத்தில் இணைத் திருக்கிறார்கள்!

 

* அதேபோல், 8888888888 என்ற எண்ணைப் பயன்படுத்தி சுமார் 1.4 லட்சம் பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகக் காட்டப்பட்டுள்ளது! இன்னொரு போலியான மொபைல் எண் மூலமாக 96,000 பேர் வரை இணைக்கப்பட்டிருக்கிறார்கள்!

 

* அடுத்த மோசடி, "ரமணா' படத்தில் முக்கியமான காட்சியில், ஏற்கெனவே இறந்த ஒரு மனிதருக்கு சிகிச்சை அளிப்பதுபோல் ஒரு மருத்துவமனையில் நாடகமாடுவார்களே, அதனை நிஜத்தில் இத்திட்டத்தில் செய்திருக்கிறார்கள்! சிகிச்சையின்போதே 88,760 நோயாளிகள் இறந்துள்ளனர். அவர்களுக்காக மட்டுமல்லாது, "ரமணா' பட பாணியில், ஏற்கெனவே இறந்துவிட்ட 2,14,923 பேருக்கு மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கணக்கு காட்டி காப்பீட்டை க்ளைம் செய்துள்ளார்கள்! சத்தீஸ்கர், ஹரியானா, ஜார்கண்ட், கேரளா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இதுபோன்ற க்ளைம்கள் அதிகமாக செய்யப்பட்டுள்ளன!


* இத்திட்டத்தில் 11.04 லட்சத்துக்கு மேல் போலியான பயனாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகப் பலமுறை தேசிய சுகாதார ஆணையம் எச்சரிக்கைவிட்டும் அதுகுறித்து பெரிதும் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.


இந்த மோசடி குறித்து தெரியவந்ததுமே ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவும் இதுகுறித்து கேள்வி எழுப்பத் தொடங்கவும், பயனாளிகள் குறித்து சரிபார்க்க செல்போன் எண்களை ஆய்வு செய்வது தேவையில்லை என்றும், அது பயனாளிகளுக்கு அவசியமற்ற ஒன்று என்று ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சகம் சார்பில் மழுப்பலான பதிலைத் தந்திருக்கிறார்கள். அமைச்சகத்தின் பதில்கள் அனைத்தும் முழுப்பூசணியை சோற்றில் மறைப்பதாக இத்திட்டத்தில் நடந்துள்ள மோசடிகளை மறைப்பதுபோலவே உள்ளது. நேர்மையான அரசாக இருந்தால், சி.ஏ.ஜி. அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள முரண்பாடுகள், மோசடிகள் குறித்து நாடு முழுக்க தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். இத்திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழலை மறைக்கப் பார்ப்பதோடு, இத்தகைய மோசடிகள் தொடர்வதையும் வேடிக்கை பார்க்கிறது என்று வேதனையுடன் கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். மத்தியிலுள்ள அனைத்து புலனாய்வு அமைப்புகளும் ஒன்றிய அரசின் கைக்குள் இருக்கும் சூழலில், சி.ஏ.ஜி. அமைப்பு மட்டும்தான் ஓரளவு சுதந்திரமாகச் செயல்படுகிறது. அதன் குரலுக்கு மதிப்பளித்து விசாரணைக்கு உத்தரவிடுவதே நல்ல அரசுக்கு அழகு. 
 

தெ.சு. கவுதமன் 

 

 

Next Story

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மட்டும் எவ்வளவு முறைகேடு? 

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

How much malpractice in Ayushman Bharat scheme alone?

 

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி,  ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் ஆயுஷ்மான் பாரத் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா எனும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் துவங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற மக்களும் பயன்பெறலாம். நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் பயன்பெறுவதற்கு தனித்தனியே வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மோட்டார் வாகனங்கள் வைத்துள்ளோர், மாதம் ரூ. 10,000 வரை வருமானம் ஈட்டுவோர் இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியாது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். இதற்கு ஆதார், பான் உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்படுகின்றன. 

 

2018ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டம் கடந்த 2020ம் ஆண்டு டிஜிட்டலாக்கப்பட்டது. 2020ல் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரத் தினத்தன்று செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை டிஜிட்டல் மயமாக்கி சுகாதார அடையாள அட்டையை அறிமுகம் செய்தார். இந்த அடையாள அட்டை மூலம், பயனாளிகள் முதல் முறை மட்டும் தங்கள் நோய் குறித்து மருத்துவரிடம் பதிவு செய்தால் போதுமானது. அதன்பிறகு அவர்கள் ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்குச் செல்லும்போது அந்த சுகாதார அடையாள அட்டையைக் கொண்டே மருத்துவர்கள் அவர்களின் நோய் குறித்தும் கடைசியாக அவர்கள் அதற்காகக் கொண்ட சிசிச்சை குறித்தும் அறிந்துகொள்ள முடியும். இந்த சுகாதார அடையாள அட்டையில் ஒவ்வொருவரின் நோய், அது சார்ந்த மருத்துவம் குறித்து சேகரிக்கப்படும் அனைத்து தகவலும் பாதுகாக்கப்படும். இந்தத் திட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி வரை நாடு முழுவதும் 24.33 கோடி நபர்கள் ஆயுஷ்மான் பாரத் அட்டையைப் பெற்றுள்ளனர்.  

 

How much malpractice in Ayushman Bharat scheme alone?

 

மருத்துவத்திற்காக அதிக செலவு செய்ய முடியாத குடும்பங்களுக்காக கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதைத் தான் தற்போது வெளியான சி.ஏ.ஜி. அறிக்கை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. இந்தக் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேட்டின் அச்சாணியாக ஆதார் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சி.ஏ.ஜி அறிக்கை வெளியிட்டுள்ள தகவலின்படி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 9999999999 என்ற போலி மொபைல் எண்ணைக் கொண்டு நாடு முழுவதும் 7.5 லட்சம் நபர்களின் ஆதார் இணைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில், வெறும் ஏழு ஆதார் அட்டைகளின் எண்ணைக் கொண்டு 4,761 ஆயுஷ்மான் பார்த் அட்டை பெறப்பட்டுள்ளது. 

 

குறிப்பாக நோயாளிகள் இறந்த பின்னரும், ஆயுஷ்மான் பாரத் மூலம் அவர்களின் பெயரில் சிகிச்சைக்கான பணம் செலவிடப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மொத்தமாக இதுவரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், ரூ. 12 லட்சம் முதல் ரூ. 22 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. 

 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், குஜராத் மாநிலம் காந்தி நகரில் கடந்த 18ம் தேதி நடந்த ஜி.20 நாடுகளைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாட்டில், உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூ.எச்.ஓ.) தலைவர் டெட்ராஸ் அதானோம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் காந்தி நகரில் உள்ள ஒரு சுகாதார மருத்துவ மையத்திற்குச் சென்றேன். அங்கு, ஆயிரம் வீடுகளுக்கு வழங்கப்படும் ஆரம்ப சுகாதாரச் சேவைகளால் ஈர்க்கப்பட்டேன். இந்தியாவில் தொலைப்பேசி மூலம் மருத்துவம் வழங்கப்படுகிறது. இந்த சேவைகளுக்கு உள்நாட்டில் மருத்துவக் காப்பீடு அட்டைகள் சிறந்த சிகிச்சைகளை அளிக்கின்றன. உலகளாவிய டிஜிட்டல் ஹெல்த் முன்முயற்சியில் தலைமை தாங்கியதற்காக இந்தியாவின் ஜி20 தலைமைக்கு நன்றி” என்று கூறினார்.