Skip to main content

"எனக்கு அடிப்படை உரிமை இல்லையா?" - தரையில் அமர்ந்து தர்ணா செய்த சந்திரபாபு நாயுடு!

Published on 01/03/2021 | Edited on 01/03/2021

 

chandrababu naidu

 

ஆந்திர மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பாக, சித்தூர் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடவுள்ள பெண்ணின் கணவருக்குச் சொந்தமான டீக்கடை ஒன்று, மாநகராட்சி அதிகாரிகளால் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு இவ்வாறு அழுத்தமளித்து தேர்தலில் இருந்து விலகும் முடிவை எடுக்க வைப்பதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மீது குற்றஞ்சாட்டியுள்ள தெலுங்கு தேசம், அதனைக் கண்டிக்கும் விதமாக சந்திரபாபு நாயுடு தலைமையில் போராட்டத்தை அறிவித்தது.

 

இந்தப் போராட்டத்திற்கு உள்ளூர் போலீஸார், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பது மற்றும் கரோனா பரவல் தாக்கம் போன்ற காரணத்தால் அனுமதி தர மறுத்தனர். இருப்பினும் சந்திரபாபு நாயுடு, தடையை மீறி போராட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்தார். அவரை திருப்பதி விமான நிலையத்திலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது சந்திரபாபு நாயுடு, “நான் மாவட்ட ஆட்சியரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் பார்க்க வேண்டும்” என்றார். அதற்கும் ஆந்திர காவல்துறையினர் அனுமதியளிக்கவில்லை.

 

இதனையடுத்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், விமான நிலையத்திலிருந்தே தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர், "என்ன இது? மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க எனக்கு அடிப்படை உரிமைகள் இல்லையா? இந்த நாட்டில் என்ன நடக்கிறது? நான் முதல்வராக 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். நான் எதிர்க்கட்சித் தலைவர். என்னை ஏன் தடுக்கிறீர்கள். நீங்கள் எனக்கு அனுமதி வழங்கவில்லை. நான் இங்கேயே உட்கார்ந்துகொள்வேன்" என கேள்வி எழுப்பி தர்ணாவில் அமர்ந்தார். இதனையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

சந்திரபாபு நாயுடு தலைமையில் போராட்டம் நடப்பதைத் தடுக்கும் விதமாக, ஏற்கனவே சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த, தெலுங்கு தேச கட்சியின் முக்கியத் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை; ஆனால் ஒரு கண்டிஷன்’ - சந்திரபாபு நாயுடு வாக்குறுதி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Chandrababu Naidu's promise Stipend for Backward People at lok sabha election campaign

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதனால், அந்த மாநிலங்களிலும் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வருகிற மே 13ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.

175 சட்டசபை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளையும் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அனைத்து இடத்திலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில், பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க 6 இடங்களிலும் போட்டியிட உள்ளது. மேலும், வாக்காளர்களைக் கவரும் விதமாக, அங்கு போட்டியிடும் கட்சிகள் வித விதமாக வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.

இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறியிருப்பதாவது, “பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக உயிர் துறந்த மகாத்மா ஜோதிராவ் பூலேவின் 197வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். ஜோதிராவ் பூலேவின் கனவுகள் நனவாக, தெலுங்கு தேசக் கட்சி ஆட்சி அமைந்ததும், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவோம். அதில், 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும்” என்று கூறினார். 

இவர் ஏற்கனவே, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைந்தால், தரமானது மட்டுமன்றி, விலை குறைவாகவும் மதுபானம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.