Skip to main content

குட்கா ஊழல் நடைபெறவில்லை என நான் கூறவில்லை! - காவல் ஆணையர் ஜார்ஜ் விளக்கம்!

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
george ss


குட்கா ஊழல் நடைபெறவில்லை என நான் கூறவில்லை, நடைபெற்றுள்ளது என முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை நொளம்பூரில் உள்ள வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இருக்கின்ற அனைத்து உண்மைகளின் அடிப்படையில் பேசுகிறேன். தி.மு.க வழக்கறிஞர் தனது மனுவில் எனது பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

சென்னை காவல் ஆணையராக நான் இருந்த போது நான் யார் மீது குற்றம் சுமத்தவில்லை. குட்கா ஊழலில் நான் ஆணையராக இருந்த போது குட்கா ஊழல் தொடர்பான வதந்திகள் பரப்பப்பட்டது. எனவேதான் இது குறித்து அரசுக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டேன். குட்கா புகார் தொடர்பாக நான் யாரையும் சந்திக்கவில்லை, என்னையும் யாரும் வந்து சந்திக்கவில்லை.

குட்கா புகார் கூறப்பட்ட காலத்தில் நான் பணியில் இல்லை, சிபிஐயின் எஃப்.ஐ.ஆரில் என் பெயர் இல்லை. குட்கா விவகாரத்தில் 2016 ஏப்ரல், மே, ஜூனில் சோதனை நடந்தது. நான் பதவிக்கு வந்தது செப்டம்பரில்தான்.

33 ஆண்டுகளாக காவல்துறையில் சிறப்பான சேவையாற்றி பணியை முடித்துள்ளேன். குட்கா விவகாரம் விசாரணையில் இருப்பதால் நான் சந்திக்கும் பிரச்சனையை கூற விரும்பவில்லை. குட்கா விஷயத்தில் என்னைக் குறிவைத்து செயல்படுவது மிகவும் வருந்தத்தக்க உள்ளது.

குட்கா விவகாரத்தில் யாரும் பணம் பெறவில்லை என்று கூறவில்லை, ஆனால் யார் பெற்றார்கள் எனத் தெரியாது. குட்கா விவகாரத்தில் எனது பெயரைச் சேர்ந்ததில் 100 சதவீதம் ஏதோ நோக்கம் இருப்பதாக நினைக்கிறேன். வேண்டுமென்றே அறிக்கையில் சிலர் பெயர்களைச் சேர்த்து, ரகசிய அறிக்கையை கசிய விட்டுள்ளனர்.

அப்போதைய மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயக்குமார் சரியாக பணியாற்றாததால் அவரை கண்டித்துள்ளேன். சட்டவிரோத நடவடிக்கைகளை கூடுதல் ஆணையர் ஜெயக்குமார் மறைத்துள்ளார். குட்கா விவகாரம் தொடர்பாக அப்போதைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அறிக்கை அளிக்காதது ஏன்?எனக்கு கீழ் பணியாற்றிய அனைவரிடமும் கடுமையாக நடந்து, பணியை சிறப்பாக செய்ய அறிவுறுத்தியுள்ளேன். உளவுப்பிரிவு இணை ஆணையராக இருந்த வரதராஜூவுக்கு ஊழல் பற்றி ஏன் தெரியவில்லை?

குட்கா ஊழல் நடைபெறவில்லை என நான் கூறவில்லை, நடைபெற்றுள்ளது. சிபிஐ சோதனையில் வீட்டில்தான் இருந்தேன். நான் டிஜிபி ஆவதைத் தடுக்க நடந்த சதியாக நினைக்கிறேன். நானும், டிஜிபி ராஜேந்திரனும் குறிவைக்கப்படுகிறோம்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திர முறைகேடு; எஸ்.ஐ.டி. விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Electoral bond SIT A case in the Supreme Court for investigation

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்த பத்திரங்களை கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக வழங்கலாம். மேலும், அந்த கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதனை நிதியாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்தத் தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்தத் திட்டத்தில் கூறப்பட்டது.

இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி (15.02.2024) தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதம் என தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்து சிறப்பு புலானாய்வு குழு (S.I.T. - Special Investigation Team) அமைத்து விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது. பொதுநல வழக்குகள் மற்றும் பொதுநலன் ஆகிய அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், “அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை விசாரணையில் சிக்கிய பல நிறுவனஙகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்துள்ளதால் விரிவான விசாரணை தேவை. முக்கிய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஊழலுக்கு துணை போயிருக்கின்றன. எனவே இது தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.