#GoBackModi ஹேஷ்டேக் உலகளவிலும் முதலிடத்தையும் பிடித்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், தெரிந்தே மத்திய அரசு அதை அமைக்காமல் தாமதம் செய்வதாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எனவே, இன்று சென்னை திருவிடந்தையில் நடைபெற இருக்கும் ராணுவக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பதற்காக வந்திருக்கும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு வீடுகளிலும், மோடி செல்லும் வழிகளிலும் கறுப்பு கொடி காட்டி அறவழியில் போராடவேண்டும் என அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.

Advertisment

அதேபோல், மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் பலரும் #GoBackModi என்ற ஹேஷ்டேக் உடன் எதிர்ப்பு பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். தொடக்கத்தில் இந்தியளவில் இந்த ஹேஷ்டேக் முதலிடத்தைப் பிடித்திருந்த நிலையில், தற்போது உலகளவிலும் #GoBackModi முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகத்தமிழர்கள் எப்போதும் தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து குரல் கொடுத்து வரும் சூழலில், அதையே #GoBackModi பிரதிபலித்திருக்கிறது.