Skip to main content

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? - ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் விளக்கம்

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Dr. C Rajendiran - Goverment hospital - health care

 

சரியான வகையில் உணவு உண்ணும் முறை குறித்து ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் விளக்குகிறார்

 

அனைவருக்கும் ஏன் வியாதி வருவதில்லை என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். தங்களுக்கு மட்டும் நோய்கள் ஏற்படுவது ஒரு சாபம் என்று பலர் நினைக்கின்றனர். சிலருக்கு பிறக்கும்போதே மரபணு சார்ந்து வியாதிகள் ஏற்படுகின்றன. சிலருக்கு வாழும் முறை, பழக்கவழக்கங்கள் சார்ந்து வியாதிகள் ஏற்படுகின்றன. உடல் எடையைக் குறைப்பதற்கு உணவுப் பழக்கம் மிகவும் முக்கியம். நாம் உணவு உண்ணும் முறைக்கு இதில் பெரிய பங்கு இருக்கிறது. ஆரோக்கியமான முறையில் நாம் உணவு உண்ண வேண்டும். 

 

வயிற்றுப் பசி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நம்முடைய அன்றாட வேலைகளைச் செய்வதற்கு நமக்குள் ஒரு எரிபொருள் தேவை. அதைக் கொடுப்பது உணவுகள் தான். 2020 ஆம் ஆண்டு கொரோனாவின் கோரப்பிடியில் நான் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் என்னால் சாப்பிட முடியாது. எனக்கு செயற்கை ஆக்சிஜன் கொடுத்து வைத்திருந்தார்கள். கிட்டத்தட்ட 10 நாட்கள் நான் அசராமல் நம்பிக்கையோடு இருந்தேன். அதன் மூலம் கொரோனாவை விரட்டியடித்தேன். அதற்கு கடவுளும் என் மீது அன்பு கொண்டவர்களும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். 

 

அந்த நேரத்தில் என்னுடைய எடை 21 கிலோ குறைந்திருந்தது. அப்போது என்னால் மிகவும் குறைவாகவே சாப்பிட முடிந்தது. உடல் எடையைக் குறைப்பதில் நம்முடைய உணவுப் பழக்கம் முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை சொந்த அனுபவத்தின் மூலம் அப்போதுதான் நான் அறிந்தேன். நம்மையே அறியாமல் தினமும் நாம் சாப்பிடும் தின்பண்டங்களால் அதிகமான கலோரிகளை உள்ளே எடுத்துக்கொள்கிறோம். நாம் வேகவேகமாக சாப்பிடும்போது 'போதும்' என்கிற உணர்வு விரைவாக வந்துவிடும். இதனால் ஜீரணமும் கஷ்டமாகும். 

 

மெதுவாக சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் அதிகமான உணவை எடுத்துக்கொள்கிறார்கள். உணவின் அளவை அவர்களால் குறைக்க முடியாது. எனவே வேகமாக சாப்பிடுவதும் தவறு, மிகவும் மெதுவாக சாப்பிடுவதும் தவறு. உணவை உண்பதற்கு 15 நிமிடங்களை ஒதுக்கி ஆற அமர சாப்பிட வேண்டும். உணவைப் பொறுமையாக மென்று சாப்பிடும்போது வயிறு நிரம்பும் உணர்வும் கிடைக்கும், திருப்தியடைந்த உணர்வும் கிடைக்கும். உணவின் அளவு மற்றும் தரம் மிகவும் முக்கியம். சாப்பிடும்போது அடிக்கடி தண்ணீர் குடிப்பதும் தவறு. இதனால் வயிற்றின் கொள்ளளவு அதிகமாகி, இன்னும் சாப்பிட வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும்.