Skip to main content

“தயவு செய்து வாருங்கள்” - இந்தியர்களிடம் கோரிக்கை வைக்கும் மாலத்தீவு

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
Maldives appeals to Indians

கடந்த ஜனவரி மாதம், லட்சத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி, ஆழ்கடல் பகுதியில் நீந்தி பவளப் பாறைகளைப் படம் பிடித்த காட்சிகள் வெளியாகி இருந்தது. அதேபோல் கடற்கரை பகுதியில் அமர்ந்து சிந்திப்பதை போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாஜகவினரால் 'ட்ரெண்ட்' செய்யப்பட்டது. அதே நேரம் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர்கள் இருவரும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தியா குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவு செய்தனர். 

இந்தக் கருத்துகள் பல்வேறு விமர்சனங்களைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, ‘மூன்று அமைச்சர்களின் கருத்துக்கும் மாலத்தீவு அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்போர் மீது அரசுத் தரப்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என மாலத்தீவு அரசு விளக்கம் அளித்தது. இதைத் தொடர்ந்து, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, 3 அமைச்சர்களையும் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையான நிலையில், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மாலத்தீவுக்கான சுற்றுலா திட்டத்தை ரத்து செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இதனால், மாலத்தீவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்க பெருமளவில் குறைந்தது. இதன் காரணமாக, மாலத்தீவின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியர்கள் முன்பு போல் மாலத்தீவு சுற்றுலாவுக்கு வர வேண்டும் என்று மாலத்தீவு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. அதே வேளையில், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களுக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கண்டனம் தெரிவித்திருந்தார். 

Maldives appeals to Indians

இந்த நிலையில், தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் இப்ராஹிம் பைசல் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “எங்களுக்கு ஒரு வரலாறு உண்டு. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களது அரசும், இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது. நாங்கள் எப்போதும் அமைதி மற்றும் நட்பு சூழலை ஊக்குவிக்கிறோம். இந்திய சுற்றுலா பயணிகளுக்கு எங்களது மக்களும் அரசாங்கமும் அன்பான வரவேற்பை வழங்குவார்கள். சுற்றுலாத் துறை அமைச்சர் என்ற முறையில், இந்தியர்களிடம் தயவு செய்து மாலத்தீவினை சுற்றுலா தலத்தின் ஒரு பகுதியாக இருக்குமாறு நான் கூற விரும்புகிறேன். எங்கள் பொருளாதாரம் சுற்றுலாவைச் சார்ந்துள்ளது” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்