Skip to main content

‘100 ஆண்டுகளுக்கும் மேலான உறவு’ - தாயுடன் நினைவலைகளைப் பகிர்ந்த ராகுல்காந்தி

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
Rahul Gandhi shares memories with his mother

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன் தினம் (13.05.2024) நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், உத்தரப் பிரதேசம் மாநிலம், ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். நட்சத்திர தொகுதியான அமேதி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிருதி இராணிக்கு எதிராக ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார். ரேபரேலி தொகுதியில் ஐந்தாம் கட்டமாக மே 20ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ராகுல் காந்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

இந்த ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், தனது தாய் சோனியா காந்தியுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “ரேபரேலியும், அமேதியும் நமக்கு வெறும் தொகுதிகள் அல்ல, அவை நமது கர்மபூமி. ஒவ்வொரு மூலையிலும் தலைமுறைகளின் நினைவுகள் உள்ளன. என் அம்மாவுடன் இருக்கும் பழைய புகைப்படங்களைப் பார்க்கும்போது, என் அப்பா மற்றும் பாட்டியின் நினைவு வந்தது. அவர்களின் சேவை பாரம்பரியத்தை நானும் என் அம்மாவும் தொடங்கினோம். 

100 ஆண்டுகளுக்கும் மேலான இந்த உறவு, அன்பு மற்றும் நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டு எங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. அமேதி மற்றும் ரேபரேலி எங்களை அழைக்கும் போதெல்லாம், நாங்கள் அவர்களை அங்கே சந்திப்போம்” என்று குறிப்பிட்டு அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுடைய நினைவலைகளை இருவரும் கலந்துரையாடிய வீடியோவை பதிவிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் சோனியா காந்தி பேசியதாவது, “ஜவஹர்லால் நேரு, 1921இல் இப்பகுதியுடன் இந்த அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். ராகுலின் தாத்தா ஃபெரோஸ் காந்தி 1952-ம் ஆண்டு ரேபரேலி எம்.பி.யாக இருந்தார். திருமணங்கள் அல்லது இறப்புகளின் போது நாங்கள் கிராம கிராமமாகச் செல்வோம். வெள்ளம் அல்லது வறட்சியின் போது கூட நாங்கள் கிராமங்களுக்கு சென்று மக்களைச் சந்தித்தோம். அவர்கள் என்னை உடனடியாக ஏற்றுக்கொண்டார்கள். நான் ஒரு மகள் மற்றும் மருமகள் போன்ற உறவைப் பகிர்ந்து கொண்டேன்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்