Skip to main content

இறந்த தாயின் உடலுடன் 4 நாட்களாக வசித்த மகள்; அடுத்தடுத்து நேர்ந்த சோகம்!

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
Daughter lived with mother's for 4 days in karnataka

கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி ஷெட்டி (62). 15 ஆண்டுகளுக்கு முன் கணவனை இழந்த ஜெயந்திக்கு பிரகதி ஷெட்டி (32) என்ற மகள் இருந்தார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட பிரகதியை, தாய் ஜெயந்தி கவனித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், ஜெயந்தி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அதனால், ஜெயந்திக்கு சில மாதங்களுக்கு முன் கால் ஒன்று வெட்டி எடுக்கப்பட்டது. இருப்பினும், மகளை ஜெயந்தி கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 1 வாரமாக ஜெயந்தி வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனையடுத்து, கடந்த 16ஆம் தேதி அன்று ஜெயந்தி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், ஜெயந்தியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது ஜெயந்தி வீட்டில் இருந்து செல்போன் ஒலி கேட்ட போதும், யாரும் எடுக்கவில்லை.

இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், ஜெயந்தி வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது பிரகதி மயக்கமாக கிடந்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள், இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ஜெயந்தி வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அங்கு ஜெயந்தி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். மேலும், மயங்கிய நிலையில் இருந்த பிரகதியை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஜெயந்தி மற்றும் பிரகதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஜெயந்தி உயிரிழந்ததை அறியாமல், மனநலம் பாதிக்கப்பட்ட பிரகதி உடலுடன் 4 நாட்களாக இருந்துள்ளார். மேலும், அவர் உணவு, தண்ணீர் இன்றி சோர்வடைந்ததால், வீட்டிலேயே மயக்கமடைந்துள்ளார் என்பது தெரியவந்தது. இறந்த தாயின் உடலுடன் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் தண்ணீர், உணவு இன்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்