Skip to main content

“பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க வேண்டும்” - இ.பி.எஸ்

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
EPS says Incident happened against women must be prevented

பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராகத் தொடரும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்கதையாகிவிட்டன. பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலமாகத் திகழ்ந்த தமிழ் நாட்டை, பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு தி.மு.க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமியை 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன். கடந்த சில மாதங்களாகவே, தொடர்ச்சியாக அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், 4 மாத கர்ப்பமான நிலையிலேயே வெளியில் தெரியவந்துள்ளது. காவல் துறை விசாரணையில், இந்தk கொடூரச் செயலை செய்த கும்பல் மேலும் ஒரு சிறுமியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் சமூக வலைத்தளங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது.

தி.மு.க ஆட்சியில் நடைபெற்று வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளையும், போதைப்பொருள் புழக்கத்தால் நடைபெறும் குற்றச் செயல்களையும் நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்துள்ளேன். சிறார்கள்-இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. தற்போது, நெஞ்சை பதைபதைக்கும் இத்தகு குற்றச் செயல்களைக் கூட சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எவ்வித அச்சமும் இன்றி செய்யத் துணிந்துவிட்டனர் சமூக விரோதிகள். 

இந்தத் தி.மு.க ஆட்சி தமிழ் நாட்டை அலங்கோல நிலைக்கு தள்ளிவிட்டதன் அடையாளம் தான் மேற்கண்ட நிகழ்வு. இந்தத் தி.மு.க ஆட்சியில், தொடர்ச்சியாக நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் குறித்து நான் பேசுகின்றபோது, தேர்தல் ஆதாயத்திற்காக இல்லாமல், ஒரு குடும்பத் தலைவனாக நம் பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பொறுப்பிலேயே பேசினேன்.

தற்போது பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் இத்தகு பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தத் தவறிய தி.மு.க அரசை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மட்டுமல்லாமல், ஒரு தந்தை என்கிற அக்கறையுடனே கண்டிக்கிறேன். உடுமலைப்பேட்டை பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்