Skip to main content

ஹீலர் பாஸ்கர் அப்படி என்னவெல்லாம் பேசியிருக்கிறார்?

Published on 04/08/2018 | Edited on 05/08/2018

இயற்கை மருத்துவம், இல்லுமினாட்டிகள், இல்லத்திலேயே பிரசவம் பார்ப்பதற்கு பயிற்சி... என்று பிசியாக இருந்த ஹீலர் பாஸ்கர், தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். காரணம், பின்வரும் அறிவிப்பு...  

healer baskar

 

ஆம், இயற்கையாக வீட்டிலேயே பிரசவம் பார்க்க பயிற்சி தருவதாக ஒரு முகாம் குறித்த செய்தி கோவை சுற்றுவட்டாரத்தில் கடந்த வாரம் பரவியது. இதை அறிந்த இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை பிரிவு காவல்துறையிடம் தகவல் தெரிவிக்க, உடனடியாக அந்த முகாமை நடத்தவிருந்த ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் திருப்பூரைச் சேர்ந்த கார்த்திகேயன் தன் மனைவிக்கு யூ-ட்யூப் வீடியோவில் பெற்ற பயிற்சியைக் கொண்டு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் மனைவி இறந்துவிட, அவர் கைது செய்யப்பட்டார். இதன் விளைவுதான் ஹீலர் பாஸ்கர் மீதான காவல்துறையின் இந்த துரித நடவடிக்கை. இயற்கை பிரசவம் மட்டுமல்ல, இயற்கை மருத்துவம், இல்லுமினாட்டிகளால்தான் நம் நாடு சுரண்டப்படுகிறது, இந்த உலகமே இயங்குகிறது என்று தன் யூ-ட்யூப் வீடியோக்களில் பேசி ஹீலர் பாஸ்கர் பல திசைகளிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார். அவர் பேசியவற்றில் ஹைலைட்டான சில விஷயங்கள் இங்கே...

 

healer

 

"நம் எல்லாருக்கும் கண், காது, மூக்கு என உடலில் பாகங்கள் இருக்கு. இது எல்லாம் படிச்ச அறிவு மூலமா நமக்கு வந்ததா? இல்லை இயற்கை அறிவான, உடலின் உள்ளே இருக்கும் அறிவால் வந்ததா? நிச்சயம் நம்ம எல்லோருக்கும் தெரியும் உடலின் இயற்கை அறிவால் வந்தது. உலகத்துல இருக்க டாக்டர் எல்லாம் படிச்ச அறிவை வச்சிக்கிட்டு வைத்தியம் பாக்கறான். அதனாலதான் அவனால்  ஒரு வியாதியையும் குணப்படுத்த முடியல. இப்போ நான் சொல்லப் போறது உங்க உடலான இயற்கை அறிவை வைத்து வியாதிகளை  தீர்ப்பது எப்படி என்று.

 

பொய் தான் நம் வியாதிகளுக்கு மருந்து! ஒரு நாளைக்கு 21 முறை, நாம் என்ன பொய் சொல்கிறோமோ அதை மூளை உண்மை என்று நம்பிவிடும். அதனால் எல்லாரும் 'நாம் நல்லா இருக்கிறோம், நமக்கு வியாதி இல்லை' என்று பொய் சொல்லுங்க. இனி உங்கள் வாழ்க்கை, உங்கள் ஆரோக்கியம், உங்கள் கையில்.

 

பசி எடுத்தா மட்டும் சாப்பிடுங்க அப்படி இல்லையா சாப்பிடாதீங்க; உங்க யாருக்காவது எய்ட்ஸ், கேன்சர் இருக்கா ?. அடுத்த மூணு மாசத்துக்கு பசி எடுத்தா மட்டும் சாப்பிடுங்க உங்க எய்ட்ஸ், கேன்சர் இருக்கிற இடம் தெரியாம போயிடும் அப்படி இல்லனா என் சட்டையைப் புடிச்சு கேளுங்க!!!.

 

 

 

சாப்பிடும் போது உதட்டை மூடி சாப்பிடுங்க. அப்படி சாப்பிட்டா இன்னும் மூணு மாசத்துல உங்க உடம்பை விட்டு சக்கரை ஓடிவிடும். பிரான்ஸ், ஜெர்மெனி, இங்கிலாந்து இங்கே எல்லாம் போய் பாருங்க யாருமே உதட்டை பிரிச்சு சாப்பிட மாட்டாங்க.!! 

 

நமது உடலில் என்ன வியாதி இருக்கிறதோ, அந்த வியாதிக்கு என்ன மருந்து வேண்டுமோ, அந்த மருந்து, எந்த உணவில், எந்த பழத்தில், எந்த காய்கறிகளில் இருக்கிறதோ அது உங்கள் நாக்கிற்குப் பிடிக்கும். ஆக எது பிடிக்கிறதோ அதை சாப்பிடுங்கள் அதுவே மருந்து. யாருக்கெல்லாம் கிட்னியில் கல் இருக்கிறதோ, அவங்களுக்கு எல்லாம் தக்காளி ரொம்ப பிடிக்கும் ஏன்னா அதுதான் அதுக்கு மருந்து!

 

முடிஞ்ச அளவிற்கு 'நான் - வெட்ஜ்' உணவைத் தவிருங்கள். ஏன் என்றால் 'வெட்ஜ்' உயிர் உள்ளது 'நான் - வெட்ஜ்' உயிர் அற்றது.

 

முக்கியமா 'சாஃப்ட் ட்ரிங்க்ஸ்' குடிக்காதீங்க அப்படி நீங்க அத குடிச்சா, உங்க இரத்தத்துக்குத் தேவையான நீர் சத்து கிடைக்காம, உடம்பு உங்க எலும்புகளை பிழிஞ்சு அதிலிருந்து சத்துக்களை எடுக்க ஆரம்பிக்குது. அதனால் தான் மூட்டு வலி வருது.

 

பற்களை எப்படி பாதுகாப்பது? காலையில் பல் விளக்காதீங்க. பல் விளக்காவிட்டாலே போதும், பற்களை பாதுகாக்கலாம். காலையில நீங்க பல் விளக்குனா எவ்வளவு நேரம் சுத்தமா இருக்கு? 5 நிமிஷம்? ஆமா, காபி குடிசீங்கன்னாலே பல் அசுத்தமாகிடுது. கிருமிகள் எல்லாம் பகலில் தூங்கும். நீங்க தூங்கும்போதுதான் அதுங்க முழிக்கும். இரவெல்லாம் உங்கள் பற்களை அடித்து உடைத்து,  தங்களுக்கு வேண்டியதை தின்றுவிட்டு அதிகாலையில் தூங்கிவிடும். அதற்குப்பின் நீங்க பல் விளக்கி என்ன பிரயோஜனம்? இரவில்தான் பல் விளக்கணும்.

 

 

       

காற்றோட்டமான இடத்திலதான் படுக்கணும். காற்றோட்டம் என்பது ஃபேன் (fan) போட்டுட்டு படுப்பது இல்லை. சுத்தமான காற்று உள்ள வரணும் கெட்ட காற்று வெளிய போகணும் இன்னிக்கு இருக்கிற காலகட்டத்தில் அது முடியாது, அதுக்கு நான் ஒரு ஐடியா சொல்றான்; உங்க பெட் ரூம் சுவரில் ஒரு பக்கம் ஓட்டை போட்டு எக்சாஸ்ட் ஃபேன் (fan)  மாட்டுங்க அதுக்கு நேர் எதிர் பக்கம் இன்னும் ஒரு ஓட்டை போட்டு அதை கொசு வலையால் அடைங்க, அவ்வளவு தான் காற்று சுத்தமாயிடும்!!!

 


அவர் கூறியவற்றில் சில உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. என்றாலும் அதற்காக மனித வாழ்வில் பல நோய்களை அடியோடு ஒழிக்க உதவிய மருத்துவமே வேண்டாம் என்பது பல உயிர்களோடு விளையாடும் விளையாட்டு. இவர் இல்லுமினாட்டிகளைக் குறித்து பேசியிருப்பதையெல்லாம் எழுத பல கட்டுரைகள் தேவைப்படும்.