Skip to main content

விடுதலைப் புலிகள் பெயரில் பணவசூல் செய்யாத இயக்கம் என்பதால் இதை மதிக்கிறோம்! - வைகோ பேச்சு

Published on 20/02/2018 | Edited on 20/02/2018

மே பதினேழு இயக்கம் சார்பாக ''வெல்லும் தமிழ் ஈழம்'' மாநாடு 18-02-2018 அன்று சேப்பாக்கம் அண்ணா கலை அரங்கத்தில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழ் ஈர்ப்பாளர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர், இதை தொடர்ந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் வைகோ சிறப்புரை ஆற்றினார். அவரது பேச்சிலிருந்து... 

 

Vaiko speech


"இந்த தமிழ்நாட்டிலே, இந்த மேடையில் உள்ள நானும் பழ.நெடுமாறன் அவர்களும் 43 ஆண்டுகளை ஈழ விடுதலைக்காகவும் தமிழ் உரிமைகளுக்காகவும் சுயநலமின்றி எங்கள் வயதைக் கொடுத்திருக்கிறோம், எங்கள் காலம் முடிந்துவிடும். அடுத்து வரும் காலத்தை யோசிக்கிறவன் நான். எங்களுக்குப் பிறகு மே பதினேழு இயக்கம் தான் தமிழ் உரிமைகளுக்காக போராடக்கூடிய இயக்கமாக இருக்கும். எனவேதான் தம்பி திருமுருகன் காந்தியை அனைத்து இடங்களிலும் முன்னிறுத்திப் பேசுகிறேன். 2009ஆம்  ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்த பின்னர்தான் மே பதினேழு இயக்கம் பற்றி அறிந்தேன். அதன் நேர்காணல்களை கண்டேன், என் மனதைக் கவர்ந்தன. 
 

கொழும்பிலே காமன்வெல்த் மாநாடு நடக்கவிருந்த சூழலிலே, கொலைப்போர் நடந்த சிங்கள நாட்டில் போர்க்குற்றவாளி ராஜபக்சேவின் தலைமையில் அந்த காமன்வெல்த் உலக மாநாடு நடக்கக்கூடாது என சொன்னோம். அண்ணன் நெடுமாறன் அறிக்கை தந்தார், நான் அறிக்கை தந்தேன், போராடினோம். அப்போது நம்மால் செய்யமுடியவில்லை. ஆனால் பேராசிரியர் ராமசாமி (பினாங்கு ராமசாமி) அவர்கள் மொரீசியஸ் பிரதமரிடம் நீங்கள் அந்த மாநாட்டிலே பங்கேற்றக்கூடாது என்று சொன்னார். மொரீசியஸ் காமன்வெல்த் நாடுகளில் ஒன்று. பேராசிரியர் ராமசாமியின் வேண்டுகோளை ஏற்று மொரீசியஸ் பிரதமர் நான் காமன்வெல்த் மாநாட்டில் பங்குகொள்ளமாட்டேன் என தெரிவித்தார். 

 

Vaiko with Ramasamy


2014-ல் ஈழ விடுதலை மாநாடு  பினாங்கு மாநகரிலே நடத்தினார் தம்பி வேல்முருகனும் அந்த மாநாட்டிற்கு வந்திருந்தார் அந்த மாநாட்டில் என்னை சிறப்புரை ஆற்ற சொன்னார் பினாங்கு மாநிலத்தின் ஏழு இடங்களிலே என்னை கொண்டுபோய் உரையாற்ற வைத்தார். இன்று இந்த சென்னை பிரகடனம் பினாங்கு பிரகடனத்தின் தொடர்ச்சி, பினாங்கு பிரகடனம் மூலமாக  உலக தமிழர் பாதுகாப்பு மையத்திற்கு தலைராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் பேராசிரியர் ராமசாமி.  தன்னை முன்னிலை படுத்திக்கொள்ளாமல் விடுதலை புலிகளின் பெயரை சொல்லி பணவசூல் செய்யாமல் நேர்மையாக யோக்கியமான ஒரு இயக்கமாக மே பதினேழு இயக்கம் இருக்கிறது என்பதினால் அதை மதிக்கிறேன். 
 

நெடுமாறனும் நானும் விடுதலை புலிகளை ஆதரித்தோம் என்ற காரணத்திற்க்காக பத்தொன்பது மாதம் சிறையில் இருந்தோம். ஜாமீன் கேட்டோமா? இல்லை. பத்தொன்பது வருடம் என்றாலும் இருப்போம். வெறும்பேச்சல்ல, ஒழுக்கத்தில் உறுதியில்... எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் காட்டுக்குள்ளே இருந்துகொண்டு விமானப்படையை தயாரித்தவன் இந்த உலக வரலாற்றில் எங்கள் பிரபாகரனை தவிர யார்? காட்டுக்குள் இருந்துகொண்டு நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்த எங்கள் பிரபாகரனுக்கு நிகராக உலக வரலாற்றில் ஒருவன் பெயரைச் சொல்.  பாவிகளே... அழித்தீர்களே புலிகளை, ஆயுதம் கொடுத்தீர்களே? கொடுக்காதீர்கள் என மன்றாடினேனே... பதினேழு முறை மன்றாடினேனே மன்மோகன்சிங்கிடம். எந்த தமிழ் ஈழம் அமைந்தால் தனித்தமிழ்நாடு இங்கே உருவாகும் என்று அச்சப்பட்டுக்கொண்டு சிங்களவனுக்கு ஆதரவாக விடுதலை புலிகளை அழிக்க ஆயுதம் அனுப்புகிறீர்களோ, அதுவே தனித்தமிழ்நாடு அமைவதற்கான பாதையை அமைக்கும் என நேருக்கு நேராகச் சொன்னேன். ஈழப்படுகொலையை நாடு முழுவதும் கொண்டு போனது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம். எங்களுக்கு ஓட்டு கிடைக்காமல் இருக்கலாம், ஜெயிக்காமல் இருக்கலாம். ஆனால் தமிழர் உரிமை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுபோய்  சேர்ப்பதற்கான கடமையை நாங்கள் செய்தோம், அதேபோல் நீங்கள் முன்னெடுக்கும் காரியங்கள் வெற்றிபெறட்டும்! ஈழ விடுதலை, அது நடக்கும் சுதந்திர தமிழ் ஈழம், அது மலரும் வெல்லும் தமிழ் ஈழம்! வணக்கம்."

  

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.