Skip to main content

திருடர்களிடம் தப்பிய தீர்த்தங்கரர் சிற்பம்!

Published on 22/10/2018 | Edited on 22/10/2018
Sculpture



புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஆத்தங்கரைவிடுதி ஊராட்சிக்குட்பட்ட  கீழ வாண்டான் விடுதியில், மிகச்சிறிய அளவிலான பத்மபிரபர் சிற்பமும், நம்பிராஜன் குடும்பத்தினரால் சிவனார் என்ற பெயரில் வழிபாட்டிலுள்ள  மகாவீரர்  சிற்பமும், சமணப்பள்ளி கட்டுமானமும் தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன், தலைவர் ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், மரபு நடை ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரி ரங்கன், உறுப்பினர்கள் கண்ணன்  ரமேஷ்குமார்,ஆத்தங்கரைவிடுதி உயர்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர்கள் பழனிசாமி , கண்ணன் ஆகியோரடங்கிய குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன், கந்தர்வகோட்டை பகுதியின் வரலாற்றை தொகுக்கும் பணியின்போது இந்த சமணப்பள்ளி அடையாளம் காணப்பட்டது.
 

அக்னி ஆறும் சமணமும்

அக்கினி ஆறு புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பெரிய குளத்தில் இருந்து 78 கிலோ மீட்டர் வரை பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது , இது  அஞ்ஞான விமோச்சனி என அழைக்கப்பட்டுள்ளது அஞ்ஞானத்திற்குரிய இணையான சொல் அக்கியானி ஆகும். இச்சொல் மருவி அக்னி ஆறாக மாற்றம் பெற்றிருக்கும் என அனுமானிக்க முடிகிறது. 

சமணக்கொள்கையோடு ஆற்றின் பெயர் உள்ளதும்,  இவ்வாற்றுப்படுகையில் உள்ள வாழமங்கலம் , மங்கத்தேவன் பட்டி , மோசகுடி , கோவில் வீரக்குடி , செம்பாட்டூர், புத்தாம்பூர் , உள்ளிட்ட ஊர்களில் சமணத்தடயங்கள்  உள்ளதும் தற்போது கீழ வாண்டான் விடுதியில் சமணப்பள்ளி அடையாளப்படுத்தபட்டிருப்பதும் புதிய வரலாற்று ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் என நம்பலாம். 
 

சமணப்பள்ளி அமைவிடம் 
 

கீழ வாண்டான் விடுதி மற்றும் மேல வாண்டான் விடுதி எல்லையிலுள்ள அக்கினி ஆற்றின் தென் புறமுள்ள சிவனார் திடலில்  சுமார் 97 சென்ட் பரப்பளவில் 200 அடி  நீள அகலத்துடன் இந்த தொல்லியல் மேடு அமைந்துள்ளது. இங்குள்ள செங்கல் 17x  16x 3 செ.மீ , 22 x 13.5x 4 செ.மீ, 24x 12x3  செ.மீ  என்ற அளவுகளில் உள்ளன.   இவை கங்கை கொண்ட சோழபுரத்தின் மாளிகை மேட்டில் இருந்த செங்கல் அளவுகளோடு ஒத்துள்ளது. இது முழுக்க செங்கல் மற்றும் களிமண் கொண்ட கட்டுமானமாக இருந்துள்ளதால் பத்தாம் நூற்றாண்டு கட்டுமானமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. இச்சமணப்பள்ளி  பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்டுள்ளது 
 

கீழ வாண்டான் விடுதி மகாவீரர்
 

சிவனார் என்ற பெயரில்  வழிபாட்டிலுள்ள சிற்பம் ஐந்து அடி உயரம் மூன்று அடி அகலம் கொண்டதாக உள்ளது.  இது சமண சமயத்தின் இருபத்து நான்காவது   தீர்த்தங்கரரான  மகாவீரர் திருமேனி என அடையாளங்காணப்பட்டுள்ளது. இச்சிற்பம் திகம்பரராக, தியான கோலத்துடன்,  சுருள் முடி தலையுடனும், திறந்த கண்கள், நுனியில் சிறிது சேதமடைந்த மூக்கு , நீண்ட துளையுடைய காதுகள் , புன்முறுவலுடன் கூடிய உதடுகள் ,  விரிந்த மார்புடன்  அமர்ந்த நிலையில், தலையின்  பின்புறமாக முக்காலத்தையும் உணர்த்தும் விதமாக ஒளிவீசும் பிரபா வளையமும்,  மேற்பகுதியில் சந்திராதித்தம் , நித்த விநோதம் , சகல பாசானம் எனும்     முக்குடையும் , பின்புலத்தில்  குங்கிலிய மரமும்  சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் சாமரத்துடன் இருப்பதாக வடிக்கப்பட்டுள்ளது,    இச்சிற்பத்தின் முக்கிய அடையாளமான  சிங்க முத்திரை கட்டுமானத்தில் மறைந்துள்ளது.
 

மிகச்சிறிய தீர்த்தங்கரர் சிற்பம் 
 

அடையாளங்காணப்பட்ட மிகச்சிறிய அளவிலான மற்றொரு சிற்பம்  17  சென்டிமீட்டர்   உயரம் கொண்டதாகவும் ,  தலை சிதைந்த நிலையில், தாமரை மேல் அமர்ந்த தியான  நிலையிலுள்ளது, இது ஆறாவது தீர்த்தங்கரரான   பத்ம பிரபராக இருக்கலாம். எனினும் பெரும்பாலும் மகாவீரர் மற்றும் ஆதிநாதரின் சிற்ப தொகுதிகளே வழிபாட்டிலிருந்துள்ளதாலும், தென் கயிலையில் தாமரை மீது அமர்ந்த நிலையில் ஆதிநாதர்   தவமிருந்ததாக சொல்லப்படும் சான்றுகள் மூலம் முதலாம் தீர்த்தங்கரரான ஆதிநாதர் சிற்பமாகவும் இருக்கவும்  வாய்ப்புள்ளது. 
 

சிற்பத்தின் வலப்புறம் அமைந்துள்ள இயக்கியர் சிற்பம் 3 சென்டிமீட்டர் அளவில் மிக நுணுக்கமாக  மண்டியிட்டவாறு சாமரத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. இடப்புறம் உள்ள இயக்கியரின் சிற்பம்  சிதைந்துள்ளது. 
 

தாமரை மலரின் காம்பிலிருந்து இரண்டு புறமும்  கீழ்ப்புறமாக சுருண்ட கொடி அமைப்புகள் காட்டப்பட்டுள்ளது. இதில்  மண்டியிட்டு கை கூப்பிய நிலையில் தனித்தனியாக நான்கு  மனித உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 
 

திருடர்களிடம் தப்பிய சிற்பம் 
 

      சிவனார் மேட்டிலிருந்த  சிற்பம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே திருடர்களால் மாட்டு வண்டி மூலம் கடத்திச் சென்றபோது  திடீரென்று வண்டி மாடுகள் மயக்கமடைந்ததாலும்  அவர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவாலும், உயிர் பயத்தால்,  சிற்பத்தை வயல் வெளியில் தூக்கி வீசிவிட்டு வண்டி மாட்டை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட அதனை அவ்வூர் அம்பலக்காரர் தனது பாதுகாப்பில் வைத்திருந்தாகவும் . பிறகு  நம்பிராஜனின் குடும்பத்தினர் கேட்டு பெற்று வந்து அதனை சிறு கோயிலாக எழுப்பி வழிபடுவதாக கூறுகின்றனர்.
 


   இது போன்ற நம்பிக்கை கதைகளே பல சிற்பங்களுக்கு காவலாக இருந்து வருகிறது என்றார்.