Skip to main content

சேலத்தில் பிரபல ரவுடிகளின் புகலிடமாகும் அதிமுக! குண்டர்கள் அடுத்தடுத்து ஐக்கியம்!!

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

சேலத்தில் குண்டர் சட்டத்தில் அடிக்கடி உள்ளே சென்று வந்த பிரபல கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் ரவுடிகள் ஆளும் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளது, கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த பரமசிவம் மகன் குமார் என்கிற வளர்த்தி குமார் (50). பிரபல ரவுடி. கடந்த பத்தாண்டுகளில் வெளியில் நடமாடியதைவிட சிறையில் இருந்தது அதிகம்.

 

kumar5




ரேஷன் அரிசி கடத்தல் மன்னனான வளர்த்தி குமார், ரேஷன் ஊழியர்கள், ரவுடிகளை கூட்டணி சேர்த்துக்கொண்டு அதை முழு நேரத் தொழிலாகவே செய்து வந்தார். பணம் கொட்டுவதை அறிந்த அவருடைய கூட்டாளி மோகன், வளர்த்தி குமாருடன் நேரடியாக மோதத் தொடங்கினார். இந்த மோதலில் மோகன் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் வளர்த்தி குமார் கைது செய்யப்பட்டார்.
 


மோகன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த சண்முகம் என்பவரும் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கும் வளர்த்தி குமார் மீது பாய்ந்தது. அரிசி  கடத்தல், ஆள் கடத்தல், கொலை, வழிப்பறி என முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் சேலம் மாநகர காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 


வளர்த்தி குமார் தொடர்ந்து வெளியே இருப்பது பொதுச்சமூகத்திற்கு ஆபத்து என்பதை உணர்ந்த காவல்துறையினர், அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க ஆரம்பித்தனர். இதுவரை ஆறு முறை குண்டர் தட்டுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார். சேலம் மாநகர காவல்துறை மட்டுமின்றி, உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரும் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 


 


அதேநேரம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி காவல்துறையிலும் வளர்த்தி குமாருக்கு செல்வாக்கு இருந்ததால், வெளியே இருக்கும்போது அவருக்கு அச்சுறுத்தல் இருக்குமேயானால், உடனடியாக குண்டர் சட்டத்தில் உள்ளே சென்று விடுவார். இதில் வியப்புக்குரிய சங்கதி என்னவெனில், எந்த ஒரு குண்டர் சட்ட வழக்கிலும் இதுவரை அவர் ஆறு மாதத்திற்கு மேல் சிறையில் இருந்தது இல்லை.
 


இந்நிலையில், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாஜலம் முன்னிலையில் வளர்த்தி குமார், வியாழக்கிமை (ஜன. 30) திடீரென்று அதிமுகவில் இணைந்தார். 
 


இது ஒருபுறம் இருக்க, சேலத்தின் மற்றொரு பிரபல ரவுடியும், ஆள்கடத்தல் புள்ளியுமான அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த ஜவஹர் (35) என்பவரும் ஆளுங்கட்சியில் ஐக்கியமானார். இவர் மீது கொலை, வழிப்பறி, ஆள் கடத்தல் என 25க்கும் மேற்பட்ட வழக்குகள் சேலம் மாநகர காவல்துறையில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவரும் இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
 


சில மாதங்களுக்கு முன்பு, ஒரு முதியவரை மிரட்டி பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்றதாக அன்னதானப்பட்டி காவல்துறையில் ஜவஹர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த அவர், திடீரென்று அதிமுகவில் இணைந்தது, காவல்துறை வட்டாரத்தில் மட்டுமின்றி, அதிமுகவிலும் சலசலப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. 


 


மேலும், ஜவஹரின் நான்காவது மனைவி நளினி என்பவர், ஜவஹர் சேலம் மாநகரில் பல இடங்களில் விபச்சார விடுதிகள் நடத்தி வருவதாகவும், குடும்பப் பெண்களை திருமணம் செய்து, அவர்களையும் பலான தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளி விடுவதாகவும் கடந்த 2014ம் ஆண்டில் சேலம் மாநகர காவல்துறை ஆணையரிடம் நேரில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 
 


உள்ளாட்சி தேர்தல் நெருக்கத்தில் ரவுடிகள் அதிமுகவில் இணைந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், காவல்துறை வசம் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும், ஆளுங்கட்சியில் அவர்கள் ஐக்கியமாகி வருவதாகவும் சொல்கிறார்கள் உள்ளூர் ர.ர.க்கள்.
 


மறைந்த முதல்வர் ஜெயலலிதா, குற்றவாளிகள், ரவுடிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை என்று அடிக்கடி முழங்குவார். ஆனால் தற்போது நிலவரம் தலைகீழாக மாறி விட்டது. அதன் விளைவுதான் அதிமுகவில் ரவுடிகள் அடுத்தடுத்து சேர்க்கப்பட்டு வருகிறார்கள் என்கின்றனர் ர.ர.க்கள்
 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.