Skip to main content

இவர் இறந்ததால் பிறந்தன மொழிவழி மாநிலங்கள்...

Published on 16/03/2018 | Edited on 16/03/2018
potti sriramalu


மார்ச் 16 – மொழிவழி மாநிலம் உருவாக்கிய பொட்டி ஸ்ரீராமுலு பிறந்தார்

என் மொழிக்காரன் தான் என் மாநிலத்தை ஆள வேண்டும், என் மாநிலத்தில் உருவாகும் ஆற்று நீரை உனக்கேன் தர வேண்டும் என இன்று மொழியை வைத்தும், இனத்தை வைத்தும் சண்டைகள் வருகிறது. அந்த சண்டைகளுக்கு மூலக்காரணம் மொழிவழியாக மாநிலங்களை பிரித்தது தான். மொழிவழியாக மாநிலத்தை பிரிப்பதை ஆரம்பத்தில் பலரும் எதிர்த்தனர். ஆனால் தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட பொட்டி ஸ்ரீராமுலு என்கிற சுதந்திர போராட்ட வீரர், மொழிவழி மாநிலம் வேண்டும்மென உண்ணாவிரதம்மிருந்து உயிர்விட்டதால் நாட்டில் ஏற்பட்ட கலவரத்தால் மொழிவழி மாநிலம் உருவாக்க உத்தரவிட்டார் பிரதமராக இருந்த நேரு.

யார் அந்த பொட்டி ஸ்ரீ ராமுலு?

ஆந்திராவில் குருவைய்யா – மகாலட்சமி என்கிற தம்பதியின் மகனாக 1901 மார்ச் 16ந்தேதி பிறந்தார் பொட்டி ஸ்ரீராமுலு. சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக ஆந்திராவின் பெரும்பான்மை மாவட்டங்கள் இருந்தது. அப்போதைய நெல்லூர் மாவட்டமும், மாநில பிரிப்புக்கு பின் உருவான பிரகாசம் மாவட்டத்தில் தற்போது உள்ளது ராமுலுவின் சொந்த கிராமமான படமட்டிபள்ளி.

ராமுவுக்கு சிறுவயதாகும்போதே அவரது குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்தது. சென்னையில் பள்ளிக்கல்வியை கற்றவர் மும்பைக்கு சென்று கல்லூரியில் சேர்ந்தார். விக்டோரிய ஜீப்ளி கல்வி நிறுவனத்தில் படித்தவர் மும்பை இரயில்வேயில் பணிக்கு சேர்ந்தார். பணியில் இருந்தபடி சுதந்திரபோராட்டங்களில் கலந்துக்கொண்டார். நான்கு ஆண்டுகள் ரயில்வேயில் மாதச்சம்பளம் 250 ரூபாய்க்கு பணியாற்றியபோது இவருக்கு திருமணம் நடைபெற்றது. சுதந்திர போராட்டத்தில் காந்தியின் அகிம்சை வழியை ஏற்றுக்கொண்ட ராமு சாத்வீக போராட்டங்களில் கலந்துக்கொண்டார்.

உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவரது மனைவி மற்றும் பிறந்த குழந்தை அடுத்தடுத்து இறந்துவிட வேலையை விட்டுவிட்டு வாழ்க்கையை வெறுத்து விட்டோந்தியாக இருந்தார். அதன்பின் நண்பர்களின் அறிவுறுத்தலால் முழு நேர ஊழியராக காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் சேர்ந்தார். உப்பு சத்தியாகிரக போராட்டம், வெள்ளையனே வெளியேறு போராட்டம், தனிநபர் சத்தியாகிரக போராட்டம் என காந்தி அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்துக்கொண்டார். இதனால் மூன்று முறை சிறை தண்டனை பெற்று சிறையில் இருந்தார்.

சுதந்திரத்திற்க்கு இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில் நெல்லூர் வந்து பணியாற்றினார் நேரு. தலித் மக்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்காத உயர் சாதியினர் எனச்சொல்பவர்களை எதிர்த்து பெரும் போராட்டங்களை நடத்தி தலித்கள் சில கோயிலுக்குள் செல்ல அவரால் அனுமதி வாங்க முடிந்தது. தலித் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தார்.

இந்திய விடுதலைக்கு பிறகு தலித் மக்களை புறக்கணிக்ககூடாது, தலித் மக்களுக்கான உரிமைகளை வழங்கு என பொட்டி ஸ்ரீ ராமுலு எங்கு சென்றாலும், அக்கருத்தை முன்வைத்து பேசுவார், அதிகாரிகளிடம் வலியுறுத்துவார். தன் கையில் தலித்களுக்கு உரிமைகளை வழங்கு என அட்டை ஒன்றை கையில் வைத்திருப்பார். இதனால் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவரோ என சந்தேகத்துடன் ஒதுங்கி செல்வார்கள்.

இந்தியாவை நிர்வாக வசதிக்காக மாகாணங்களை பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது, அதனை பிரதமர் நேரு நிராகரித்தார். பெரிய மாகாணங்கள் மட்டும் பிரிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி சென்னை மாகாணத்தை பிரித்து தெலுங்கு பேசும் மக்களுக்காக ஆந்திரா மாநிலம், சென்னையை தலைநகராக கொண்டு உருவாக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்தார் பொட்டி ஸ்ரீ ராமுலு. மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படாது என நேரு அறிவித்தார்.

இதனை கண்டித்து பொட்டி ஸ்ரீராமுலு, சென்னையில் இருந்த மகரிஷி புலுசு சாம்பமூர்த்தியின் இல்லத்தில் உண்ணாவிரதத்தை தொடங்கினார். 1952 அக்டோபர் 19ந்தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். 82 நாள் உண்ணாவிரதத்துக்கு பின்பு 1952 டிசம்பர் 15ந்தேதி மறைந்தார். இதனால் தற்போது ஆந்திரா மாநிலத்தில் உள்ள கர்னூல், விசாகப்பட்டினம், விஜயவாடா உட்பட பல பகுதிகளில் மவுன ஊர்வலம் கலவரமானது. மூன்று நாட்கள் தொடர்ந்து அப்பகுதிகளில் கலவரம் நடைபெற்றது. இறுதியில் கலவரத்தை அடக்க போலிஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 7 பேர் இறந்தனர். அதன்பின்பே கலவரம் கட்டுக்குள் வந்தது. இதனால் வேதனையடைந்த நேரு 3 நாட்களுக்கு பிறகு 1992 டிசம்பர் 19ந்தேதி ஆந்திரா தனி மாநிலமாக உருவாக்கப்படும் என அறிவித்தார்.

அதேப்போல் சென்னை மாகாணத்துக்குள் இணைந்திருந்த கேரளாவின் ஒரு பகுதி, கர்நாடகாவின் ஒரு பகுதியும் பிரித்து தனித்தனி மாநிலமாக்கப்படும் என அறிவித்தார் நேரு. அதன்படி அந்தந்த மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதில் சென்னையை தெலுங்கர்களும், கன்னியாகுமரி, செங்கோட்டையை மலையாளிகளும், பெங்களுரூவை கன்னடர்களும் எங்கள் மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதை தமிழ் அறிஞர்கள் கடுமையாக எதிர்த்து போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக கன்னியாகுமரி, செங்கோட்டை, சென்னை போன்றவை தக்கவைக்க முடிந்தன.

அவர் நினைவை போற்றும் வகையில் ஆந்திரா மக்கள் இன்றளவும் அவரை அமரஜீவி என கொண்டாடுகின்றனர். சென்னையில் உள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்தை நினைவு சின்னமாக அரசின் சார்பில் பராமரிக்கப்படுகிறது.

Next Story

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து...” - மல்லிகார்ஜுன கார்கே உறுதி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
State status for Puducherry Mallikarjuna Karke confirmed

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. நாங்கள் என்ன வாக்குறுதி, சொன்னாலும் செய்வோம். ஆனால் பிரதமர் மோடி செய்ய மாட்டார். இதனை காங்கிரஸும், ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மட்டுமே செய்ய முடியும்.

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூட இடம் பெறவில்லை. நேற்று வெளியான தேர்தல் அறிக்கை புதுச்சேரி மக்களின் எதிர்ப்பார்ப்புகளை அப்பட்டமாக புறக்கணித்துள்ளது. 2024 தேர்தலில் இந்தியக் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு வாக்குறுதியளித்ததை நாங்கள் நிறைவேற்றுவோம் என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட ஆலைகள் ரேஷன் கடைகள் திறக்கப்படும்” எனப் பேசினார். 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.