Skip to main content

'என் க்ரஷ் சமி கபூர்' - ஜெயலலிதாவின் மலரும் நினைவுகள்!!!

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

JJ interview BBC


 

மைக்கை எறிந்தார்...

 

முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா தன் வாழ்நாளில் ஒரு கட்டத்திற்கு மேல் தனக்கென ஒரு வட்டத்தை போட்டு அதனுள் இருந்தார். பல்வேறு ரகசியங்கள், வதந்திகள் இருந்தன. அதனால் எப்பொழுதும் அவர் ஊடகங்களிடமிருந்தும் தள்ளியே இருந்தார். ஆனாலும், செய்தியாகிக் கொண்டுதான் இருந்தார். கலைஞரை போல ஊடகங்களுக்கு அணுக்கமானவராய் எப்பொழுதுமே ஜெயலலிதா இருந்ததில்லை. அவரது  1991-96 ஆட்சியின் பொழுதெல்லாம் முற்றிலும் தமிழ் ஊடகங்களை புறக்கணித்தே வந்திருக்கிறார்.  ஆனாலும் எப்போதாவது ஒரு முறை அவர் அளித்த பேட்டிகள் பரபரப்பேற்படுத்தத்  தவறியதில்லை. அவை பெரும்பாலும் ஆங்கில ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களாகும்.

 

ஜெயலலிதாவின் மிக புகழ் பெற்ற நேர்காணல் என்றே இதை கூறலாம். 2004இல் பிபிசியில் ஒளிபரப்பப்பட்ட 'ஹார்ட்டாக் இந்தியா' (Hard Talk) என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கரண் தாப்பர் ஆரம்பத்திலிருந்தே ஜெயலலிதாவை தன் கேள்விகளால் சீண்டினார். சற்று ரணகளமாகவே சென்ற பேட்டியில் ஒரு கட்டத்தில் தி.மு.கவை பற்றி  குற்றம் சாட்டும் போது ஜெயலலிதா கையில்  பேப்பர் இருந்தது. அதற்கு கரண் தாப்பர், 'நீங்கள் ஏன்  குறிப்புகளைப்  பார்த்து  சொல்கிறீர்கள்?' என்று கேட்க, கோபமடைந்த  ஜெயலலிதா 'நான் ஒன்றும் பார்த்து படித்து சொல்லவில்லை, உங்கள் முகத்தைப்  பார்த்து தான் சொல்கிறேன்' என்பார். இப்படி அனலாகவே சென்று கொண்டிருந்த நேர்காணல் ஜெ.வின் ஜோசிய நம்பிக்கை பற்றிய கேள்வியில் பற்றி எரிய ஆரம்பித்தது. விருப்பமற்ற முறையில் வந்து முகத்தின் முன் நின்ற கேள்விகளால் கோபமடைந்த ஜெயலலிதா, நேரடியாக கோபத்தை காட்டினார்.  அந்த நேர்காணலின் இறுதியில் 'வரும் 2006 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி அடையும் நம்பிக்கை இருக்கிறதா?' என்ற கேள்விக்கு, 'எனக்கு ஜோசியம் பார்த்து கணிக்க தெரியாது, நீங்கள் இங்கு தானே இருப்பீர்கள், பொறுத்திருந்து பாருங்கள்' என்று கூறிய ஜெயலலிதா, இறுதியில் 'உங்களிடம் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கரண் தாப்பர் கூற, 'உங்களிடம் பேசியது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை'  என்று கூறி  மைக்கை எறிந்து  விட்டு கோபமாக சென்றுவிட்டார்.

 

என் முடிவுகளை நான் எடுக்கவில்லை 
 

JJ interview NDTV


 

2013இல் என்.டி.டிவியில் 'டாக்கிங் ஹெட்ஸ்' எனும் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் பதில்கள் பொறுமையாக இருந்தது. அதன் தொகுப்பாளர் ஜெனிபர் கேள்விகளை ஜெயலலிதாவுக்கு ஏற்ப கேட்டார். 'உங்கள் தனிப்பட்ட வாழ்வும், பொது வாழ்வும் ஒரு போர்க்களமாகத்தானே உள்ளது, அதனை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அதற்கான சக்தி உங்கள் குடும்பத்தார் அல்லது நண்பர்களிடமிருந்து பெறுகிறீர்களா?' என்ற கேள்விக்கு, 'எனக்குள்தான் எனக்கான சக்தியை பெறுகிறேன். என் குடும்பத்தில் யாரும் அரசியலில் ஈடுபட்டதில்லை.  இதுவரை எனக்கான துறையை தேர்ந்தெடுத்தது கூட நானில்லை. சினிமாவிற்கு என் அம்மாவினால்தான் வந்தேன். அரசியலுக்கு எம்.ஜி.இராமச்சந்திரன்தான் அழைத்து வந்தார். அதனால் அனைத்து பிரச்சனைகளையும் நான் காலப்போக்கில் எதிர்கொள்ள கற்றுக்கொண்டேன். இப்படி தன் தனிப்பட்ட வாழ்வை பகிர்ந்திருந்தார் ஜெயலலிதா.

 

என் க்ரஷ் சமி கபூர்! 

 

JJ interview Simi

 

 

1999ஆம் ஆண்டு சிமி கார்வெல் நடத்திய 'ரெண்டேஸ்வஸ்' என்ற பிரபல நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இன்னொரு முகத்தைக் காட்டுவதாக அமைந்தது இந்த பேட்டி. மிகவும் உற்சாகமான பேட்டியான இதில் சிமி கார்வல் ஜெயலலிதாவின் பள்ளிப் பருவத்தைப் பற்றி பேசும்பொழுது, 'அப்பொழுது உங்கள் மனதைக் கவர்ந்த ஆண்கள் யாரும் இருந்தனரா' என்று கேட்க, கிரிக்கெட் வீரர் நாரி கான்ட்ராக்டர் மீது 'க்ரஷ்' இருந்ததாகவும், அவரைப் பார்ப்பதற்காகவே அப்பொழுது கிரிக்கெட் போட்டிகளை காணச் சென்றதாகவும் கூறினார். மேலும் ஹிந்தி திரைப்பட நடிகர் சமி கபூரையும் தனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று கூறினார். தொகுப்பாளர் சிமி, ஜெயலலிதாவிற்கு பிடித்த பாடல் பற்றி கேட்டு, அதை பாடச் சொன்னார். முதலில், 'இப்பொழுது பழக்கத்தில் இல்லை என்று கூறி பாட மறுத்த ஜெயலலிதாவை, சிரித்துக் கேட்டு, பாடவைத்துவிட்டார் சிமி. 'ஆஜா சனம்' என்ற அந்த ஹிந்தி பாடலை அழகாக பாடுவார் ஜெயலலிதா. இந்த பேட்டி ஆரம்பத்திலிருந்து இறுதி வரை ஜெயலலிதாவின்  குதூகலத்துடனும் சிரிப்புடனும் இருக்கும்.

 

 

JJ interview simi2

 
இவைதான் ஜெயலலிதாவின் புகழ் பெற்ற நேர்காணல்கள். ஜெயலலிதா, குறைவாகத்தான் பேட்டிகள் கொடுத்துள்ளார். அதுவும் தமிழ் ஊடகங்களுக்கு மிக மிக அரிது. 2011இல் முதல்வராக பதவியேற்ற பொழுது, செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா, 'இனிமேல் உங்களை வாரா வாரம் சந்திப்பேன்' என்று கூறினார். அவரது அணுகுமுறை மாறிவிட்டதோ என்று செய்தியாளர்கள் நினைக்க, அடுத்த வாரமே அது தவறென தெரிந்தது. செய்தியாளர் சந்திப்புகள் நடக்கவில்லை. ஊடகங்களிடமிருந்து விலகி விலகி சென்ற ஜெயலலிதாவிடம் கடைசிவரை கேட்கப்படாமலேயே நூற்றுக்கணக்கான கேள்விகள் செய்தியாளர்கள், மக்களின் மனதில் இருக்கின்றன. 

படங்கள் : BBC, NDTV,   Simigarewalofficial 
 
 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.