Skip to main content

நாங்க யார்ன்னு தெரியுமா? நயன்தாரா வேணாம் நிக்கி கல்ராணி ஓகே... ஈஷாவின் சிவராத்திரி!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகா சிவராத்திரி நாளில், தனது ஈஷா யோகா மையத்தில் கூட்டத்தைக் கூட்டி கல்லா கட்டுகிறது சர்ச்சைக்குரிய சாமியார் ஜக்கி வாசுதேவின் கும்பல்.

"பூண்டி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தைச் சுற்றிவாழும் பழங்குடியின மக்களின் நிலங்களை சட்டவிரோதமாக அபகரித்து, அதில் வானளாவிய கட்டடங்களை எழுப்பிக் கொண்டிருப்பதைப் பற்றி ஆதாரப்பூர்வ புகார்கள் கொடுத்தாலும் ஆள்வோர் அதைக் கண்டுகொள்வதில்லை. சிவராத்திரி தியானம் என்ற பெயரில் அளவுக்கதிகமான ஒளி, ஒலியை எழுப்பி, வனவிலங்குகளைத் துன்புறுத்துவதும் தொடர்கதையாகி இருக்கிறது' என்று ஆதங்கப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்

 

jakki



மேலும் பேசிய அவர்கள், "இதைத் தட்டிக் கேட்டுப் போராடும் பழங்குடியின மக்களை மிரட்டுவதற்காகவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பிரதமர் மோடியை சிவராத்திரி நாளில் ஈஷாவுக்குக் கூட்டிவந்து, தனது ஆளுமையை நிறுவினார் ஜக்கி. அதேபோல், இங்கு தன்னைப்போலவே கட்டி வைத்திருக்கும் ஆதியோகி சிலையை வியாபாரமாக்க, சினிமா நடிகைகளை ஆடவைத்தார். அப்படித்தான் ஒருமுறை தமன்னாவும், காஜல் அகர்வாலும் வந்து ஆடிவிட்டுப் போனார்கள்.

 

jakki



ஜக்கியும், நடிகைகளுமாக இப்படி சேர்ந்து போடும் ஆட்டத்தைப் பார்க்க, அலைமோதும் கூட்டத்திற்கு ரகரகமாக கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மேடைக்கு நெருக்கமாக இருக்கும் கங்கா கேலரியில் இடம்பெற, தலைக்கு ரூ.50 ஆயிரம் கட்டவேண்டும். அடுத்த வரிசையான யமுனா கேலரிக்கு ரூ.20 ஆயிரமும், நர்மதா கேலரிக்கு ரூ.5 ஆயிரமும், கோதாவரிக்கு ஆயிரம் ரூபாயும் விதிக்கப்பட்டிருந்தது. கடைசி வரிசைக்கு காவிரி எனப் பெயரிட்டு, அதற்கும் ரூ.500 வசூல்செய்தே ஆட்களை அனுமதிக்கிறார்கள். இலவசம் என்ற பேச்சுக்கே இடமில்லை'' என்றார்கள்.

 

actress



இந்தமுறை, திரையுலகின் அட்ராக்ட்டிவ் நட்சத்திரத்தை இந்த விழாவிற்கு அழைத்து, அவர் வரமறுத்ததுதான் ஹாட் டாபிக் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆம், இளசுகளின் கனவுக் கன்னியாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் இருக்கும் நயன்தாரா சிவராத்திரி விழாவிற்கு வந்தாலே கூட்டம் அமோகமாக கூடும். கரன்சிகளை அள்ளலாம் என்று ஜக்கி திட்டம் தீட்டினார்.

 

jakki



இதற்காக நயன்தாரா தரப்பை ஜக்கியின் ஆட்கள் அணுகினார்கள். நயனோ, "என்னால் இந்த விழாவில் கலந்துகொள்ள முடியாது. நான் கேரளா திருவல்லா சிரியன் கிறிஸ்தவத்தைச் சேர்ந்தவள் என்றாலும், எந்த மத நிகழ்ச்சியையும் தவிர்த்தது கிடையாது. தற்போது நடித்துக் கொண்டிருக்கும் "மூக்குத்தி அம்மன்' படத்திற்காக, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற எல்லா கோவில்களுக்கும் போயிட்டேன். போய்க்கிட்டும் இருக்கேன். அதனால, வேறெந்த நிகழ்ச்சியிலும் இப்போதைக்கு கலந்துகொள்ள முடியாது' என்று மறுத்திருக்கிறார்.

 

jakki



இதைக்கேட்டு கடுப்பான ஜக்கி தரப்பு.. "நாங்க யார்ன்னு தெரியுமா? நாங்க கூப்பிட்டு வரமாட்டேன்னு சொல்ல எவ்வளவு தைரியம் வேணும்? பார்த்துக்கலாம்'' என்று மிரட்டி இருக்கிறது. அதன் பிறகுதான், அடுத்த சாய்ஸாக "டார்லிங்' படம் மூலம் தமிழில் அறிமுகமான நிக்கி கல்ராணியை தேர்வு செய்தார்கள். இவரும் ஜக்கியைப் போலவே கர்நாடகாவைச் சேர்ந்தவர். இந்துக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில்தான் படித்தார். அதனால், கிறிஸ்தவத்தின் மேல் தனக்கிருக்கும் ஈர்ப்பைக் காரணம்காட்டி, அவரும் வர மறுத்திருக்கிறார். அவரை ஐ.டி. ரெய்டைக் காட்டி ஜக்கி தரப்பு மிரட்ட, வேறு வழியில்லாமல் ஈஷாவுக்குள் ஐக்கியமானார் நிக்கி. மத்திய அரசில் தங்களுக்குள்ள செல்வாக்கைக் காட்ட ஐ.டி.ரெய்டு என மிரட்டல் விடுவது சகஜமாகி விட்டது.


ஐ.டி.யைக் காட்டி நிக்கியை ஈஷா தரப்பு வளைத்ததுபோல, ஏன் நயன்தாராவை இழுக்கவில்லை என்று நாம் கேட்டபோது, "தன்னுடைய பவரைப் பயன்படுத்தி நயன்தாராவை ஐ.டி. ரெய்டில் சிக்க வைக்கலாம் என்று முதலில் ஈஷா கணக்குப் போட்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில் ரஜினியோடு நயன் ஜோடிபோட்ட "தர்பார்' படம் வெளியானதால், அவரை மிரட்டும் வகையில் ஐ.டி.யை இதில் இழுத்துவிட்டால் ரஜினியின் மேலிட செல்வாக்கை எதிர்கொள்ள நேரிடலாம் என நயன் மீதான வேகத்தை கொஞ்சம் பிரேக் போட்டு வைக்கலாம் என்று ஈஷா தரப்பு முடிவு செய்திருக்கிறது'' என்கிறார்கள்.

"துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு தொடங்கிவைக்க, நடிகைகள் காஜல் அகர்வால், நிக்கி கல்ராணி ஆட்டம்போட, இந்த ஆண்டு சிவராத்திரியில் ஜக்கி வாசுதேவின் ஆட்டம் வழக்கத்தை விடவும் கூடுதலாகவே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


இதுபற்றி விரிவாக நம்மிடம் பேசிய வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பன்னீர் செல்வம், "இந்த மகா சிவராத்திரி விழா நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.சும், அரசு முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானியை வைத்து நகர் ஊரமைப்பு இயக்குனருக்கு ஒரு அரசாணையை சத்தமில்லாமல் அனுப்பினார்கள்.

அந்த அரசாணையில், "அரசாங்கத்தின் அனுமதிபெற்ற மலைப்பகுதி இல்லாத இடங்களில், நகர் ஊரமைப்புத் துறையின் கூட்டு உள்ளூர் திட்டக் குழுமத்திற்கும், புறநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளர்களுக்கும், மண்டல இணை இயக்குனருக்கும், நகர் ஊரமைப்பு இயக்குனருக்கும் எப்படி கட்டடங்கள் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறதோ, அதேபோல மலைப்பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்களுக்கும் சீக்கிரம் அனுமதி வழங்கப்படும். அப்படி மலையிடத்தில் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ள மலையிடப் பாதுகாப்புக் குழுவான HACAவின் அதிகாரமும் பகிர்ந்தளிக்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், மலைப்பகுதியில் கட்டடம் கட்ட, மாவட்ட அதிகாரிகள் மூலம் எல்லா அனுமதியையும் பெற்று விடலாம் எனும்போது, ஏற்கனவே அனுமதி இல்லாமல் கட்டடங்களை கட்டியெழுப்பி இருக்கும் ஈஷாவுக்கு இது உற்சாகம் தரும் அறிவிப்புதானே?

இது மட்டுமா? 15 ஆயிரம் சதுர அடிக்கு மேல் போனால் மட்டுமே HACA அனுமதி வாங்கவேண்டும் என்பதைக் கேட்டாலே நெஞ்சு பதறுகிறது. காரணம், அதே அரசாணையில், "அரசின் முழுமைத் திட்டம் உள்ள மலை இடங்களில் கனிம, வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள், மாவட்ட வன அலுவலர், வனத்துறை தலைவர் உள்ளிட்டோரிடம் அனுமதி கேட்டு, ஒரு மாதத்திற்குள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் அனுமதி கொடுத்ததாக எடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும் அதிமுக்கியமாக, முழுமைத் திட்டம் இல்லாத மலை இடங்களில் நடைமுறைக்கு உட்பட்டு கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கவேண்டும் என்று சொன்னவர்கள், நகர்ப்புற பகுதிகளில் உள்ள மனையிடங்களுக்கு ஒரு ஹெக்டேர், ஊரகப்பகுதியில் இரண்டு ஹெக்டேருக்கு அதிகமாகும் பட்சத்தில் HACAவிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதில்தான் ஈஷாவின் வேலைத் திட்டமே அடங்கியிருக்கிறது.

அதாவது, HACAவின் அனுமதியை யானை வழித்தடங்கள் இருக்கும் காட்டுக்குள்தான் பெறவேண்டும். அப்படி இருக்கையில், நகர்ப்புறத்தில் இருக்கும் மனையிடங்களுக்கு HACA அனுமதி கொடுக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? ஆக, ஈஷாவுக்காக எல்லா விதிமுறைகளையும் தளர்த்திக் கொடுத்து தங்களது விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

முழுக்க முழுக்க மலை வாழ்விடப் பகுதிகளுக்கு எதிரான இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி, பழங்குடியின சங்கத் தலைவியான முத்தம்மாள் மூலம் வழக்குத் தொடரப் போகிறோம். மக்களும், வன விலங்குகளும் வெல்வார்கள்'' என்றார் நம்பிக்கையுடன்.

இதற்கிடையில், இந்துத்வ மேடைகளில் அடிக்கடி தலைகாட்டும் அ.தி.மு.க.வின் ஒரே மக்களவை எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஈஷாவின் சிவராத்திரி இரவில் தென்பட்டார். அங்கே ஜக்கியின் கால்களைத் தொட்டுத் தழுவிய ஓ.பி.ஆர்., மோடியிடம் பேசி எனக்கொரு மினிஸ்டர் பதவியை வாங்கிக் கொடுங்கள் எனக் கேட்டிருக்கிறார். இதற்கு ஜக்கியிடம் இருந்து கிரீன் சிக்னல் வர, உற்சாகமாக சிவராத்திரியை அங்கு கழித்திருக்கிறார் ஓ.பி.ரவீந்திரநாத்.

-மணிகண்டன்
 

 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.