Skip to main content

நமது ரகசியங்களை  திமுகவிடம் சொல்ல மாட்டார்  என்பதற்கு என்ன கேரண்டி?’’-எடப்பாடியிடம் மோதும் அமைச்சர்கள்...

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

 

dmk party and admk party ministers i pac team


கரோனா நெருக்கடியை கடந்து அரசியலில் ஜெயிக்கப் போவது யார்? மருமகனா? மகனா? மகளா? என தமிழக அரசியலில் சத்தமில்லாமல் நடக்கும் போட்டியை மூன்று வாரங்களுக்கு முன்பு விரிவாக நமது இணையத்தளத்தில் பதிவு செய்திருந்தோம். அதில், முதல்வர் எடப்பாடியின் மகன் மிதுன் தலைமையில் அதிமுகவின் தேர்தல் வியூகம் வகுப்பாளராக செயல்பட திமுகவின் முன்னால் ஆலோசகர் சுனில் காய்களை நகர்த்தி வருகிறார் என சுட்டிக்காட்டியிருந்தோம். அந்த வகையில், அதிமுகவின் தேர்தல் வியூக வல்லுநராக சுனில் நியமிக்கப்படும் ஒப்பந்தம் தற்போது சத்தமில்லாமல் அரங்கேறியிருக்கிறது என்கிறார்கள் அதிமுகவினர்.   


திமுகவுடன் பி.கே. அக்ரிமெண்ட் போடுவதற்கு முன்பு, அதிமுகவிடம் அக்ரிமெண்ட் போடுவதற்கே அவர் முயற்சித்தார். ஆனால், தமிழகத்தில் அவருடைய முதல் முயற்சியே தோல்வியடைந்தது. அதாவது, தேர்தல் வெற்றிக்காக அதிமுகவுக்கு தேர்தல் வியூக வல்லுநர் குழுவை உருவாக்கலாமா? என கட்சின் மூத்த தலைவர்களிடம், கடந்த வருடம் இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் ஆலோசனை நடத்தியபோது, ‘’ அத்தகைய கம்பெனிகள் எதுவும் நமக்கு தேவையில்லை. வடநாட்டு கார்பரேட் அரசியல் தமிழகத்தில் எடுபடாது என அதிமுக சீனியர்கள் வலியுறுத்தியதால்தான் பி.கே.வின் முயற்சி அதிமுகவில் பலிக்கவில்லை.

அதன்பிறகே திமுகவை கையிலெடுத்தார். திமுகவும் பி.கே.வை வளைத்துக்கொண்டது. அதனால், திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார் சுனில். அதிமுகவுக்கு பணி செய்ய முயற்சித்த போதும் சுனிலுக்கு அதிமுகவில் பெர்த் கிடைக்கவில்லை. இருப்பினும் தனது முயற்சியை சுனில் கைவிடவில்லை. இந்த சூழலில், எடப்பாடியின் மகன் மிதுனின் நட்பை வளர்த்துக்கொண்ட சுனில், கடந்த 6 மாதங்களாக அதனை கெட்டியாக பிடித்துக் கொண்டதுடன் மிதுனின் மூலமாக எடப்பாடியின் மனதை கரைக்கும் வேலையில் இறங்கினார்.   

முதல் கட்டமாக, சோசியல் மீடியாக்களில் எடப்பாடியின் இமேஜை உயர்த்திக் காட்டும் நடவடிக்கையில் இறங்கினார் சுனில். மிதுனும் சுனிலும் இணைந்து நடத்திய அந்த முயற்சி, எடப்பாடியை மிகவும் கவர்ந்தது. இந்த நிலையில்தான், மூத்த அமைச்சர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதிமுகவிற்கான அரசியல் வியூக வகுப்பாளர் என்கிற ஒப்பந்தத்தை சுனிலுடன் போட்டுக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. திமுகவின் வெற்றிக்காக இயங்கும் ஐ-பேக் நிறுவனம் பி.கே. தலைமையில் இயங்கினாலும் பி.கே.வுக்கு பாஸ் சபரீசன்தான். அதேபோல, அதிமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக சுனில் நியமிக்கப்பட்டிருந்தாலும், இவருக்கு பாஸ் மிதுன்தான். அதாவது, எடப்பாடியின் மகன் மிதுன் தலைமையிலேயே சுனில் இயங்குவார். 

 

 


இந்த ஒப்பந்தம் தொடர்பாக, அதிமுகவின் மூத்த அமைச்சர்களுக்கும் எடப்பாடிக்கும் இடையே  மோதல் வெடித்திருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய அதிமுக சீனியர்கள்,‘’திமுகவின் அரசியல் ஆலோசகராக வேலைப்பார்த்த சுனில் ஒரு ராசி இல்லாதவர். திமுகவை ஆட்சியில் அமர்த்த அவர் போட்ட எந்த திட்டமும் வொர்க் அவுட் ஆகவில்லை. அதனால்தான் அவரை திமுக வெளியேற்றியது. அவரே வெளியேறுவதற்கான சூழலையும் உருவாக்கியது. அப்படிப்பட்டவரை, அதிமுகவுக்கு கொண்டு வர வேண்டுமா? திமுகவின் ரகசியங்களை தெரிந்தவர் என்பதற்காக அவரை பயன்படுத்த நீங்கள் நினைத்தால் , நாளைக்கு நமது ரகசியங்களை திமுகவுக்கு சொல்ல மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதனால், சுனில் நமக்கு வேண்டாம். தேர்தல் ஆலோசகர் என்கிற கம்பெனியே நமக்குத் தேவையில்லை என எடப்பாடிக்கு எதிராக மல்லுக்கட்டியிருக்கிறார்கள். 

இதற்கு எடப்பாடி சில விளக்கங்களை தர, அதனை மூத்த அமைச்சர்கள் ஏற்க மறுத்திருக்கிறார்கள். இதனால் இரு தரப்பிலும் தற்போது மன கசப்பு அதிகரித்துள்ளது’’ என்கிறார்கள் அதிமுகவின் சீனியர்கள்.
 

 

சார்ந்த செய்திகள்