Skip to main content

அழிந்த ஊரில் அழியாத வரலாற்றுத் தடயங்கள்... பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு..

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

Discovery of the ancient Mahavira sculpture

 

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், தே.கல்லுப்பட்டி அருகே வேளாம்பூரில் 1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தே. கல்லுப்பட்டி அருகே வேளாம்பூரில் பழமையான சிற்பம் இருப்பதாக கவசக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் கொடுத்த தகவலின்படி, மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில் வழக்கறிஞர் நாகபாண்டி, சிவக்குமார் ஆகியோர் வேளாம்பூர் மாரியம்மன் கோயில் பின்புறம் முட்புதரில் கள ஆய்வு செய்தனர். அப்போது 1000 ஆண்டுகள் பழமையான சிதைந்த நிலையில் 24வது தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் கண்டறியப்பட்டது.

 

Discovery of the ancient Mahavira sculpture

 

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் து.முனீஸ்வரன் கூறியதாவது; அழிந்த ஊரில் அழியாத வரலாற்றுத் தடயங்களுடன் இன்றும் அரசாங்க பதிவேட்டில் மட்டுமே காணப்படும் கிராமம் தான் வேளாம்பூர். இக்கிராமத்தில் அடர்ந்த முட்புதரில் சிதைந்த நிலையில் 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட வர்த்தமானர் எனும் சமன சமயத்தின் இருபத்து நான்காவது தீர்த்தங்கரான மகாவீரர் திகம்பரராக தியான கோலத்துடன் நீண்ட துளையுடைய காதுகள், முகம் தெளிவற்று தேய்ந்த நிலையிலும், விரிந்த மார்புடனும் காணப்படும் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேய்ந்த நிலையில் 3 சிங்கங்கள் உள்ள பீடத்தின்மீது சிம்மாசனத்தில் அர்த்த பரியங்கா ஆசனத்தில் (பாதங்கள் இரண்டும் மேல் நோக்கி இருக்கும்படி ஒரு கால் மீது மறுகாலை மடித்து அமர்வது) யோகமுத்திரையுடன் தியான நிலையில் அமைதி தவழும் திருக்கோலத்தில் மகாவீரர் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

Discovery of the ancient Mahavira sculpture

 


சிற்பம்  சிதைந்த பகுதி:
 

தலையின் பின்புறமாக முக்காலத்தையும் உணர்த்தும் விதமாக ஓளி வீசும் பிரபா வளையமும், மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்த விநோதம், சகல பாசானம், எனும் முக்குடையும், பின்புலத்தில் குங்கிலிய மரமும், சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் சாமரத்துடன் உருவங்கள் போன்றவை உடைந்த நிலையில் காணப்படுகிறன. சமீபத்தில் கவசக்கோட்டை செங்க மேடு பகுதியில் கண்டறியப்பட்ட மகாவீரர் சிற்பமும் இச்சிற்ப உருவமும் ஒப்பீட்டின்படி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தாக இச்சிற்பத்தை கருதலாம். இப்பகுதியிலும் ஒரு சமண பள்ளி வழிபாட்டிலிருந்து அழிந்ததை நம்மால் அறிய முடிகிறது. இவ்வூர் அருகிலுள்ள காரைக்கேணியில் ஒரு தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளதும் கருதத்தக்கது. இப்பகுதியில் சிதறிக்கிடக்கும் செங்கற்கள் மூலம் இங்கு இருந்த சமணப்பள்ளி முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டதாக அனுமானிக்கலாம் என்றார்.