Skip to main content

வரலாற்றில் மிக மோசமான ஊழல் இது - சமூக செயற்பாட்டாளர் பால்கி குற்றச்சாட்டு

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Balki  interview

 

மத்திய அரசின் ஊழல்கள் குறித்து சிஏஜி வெளியிட்ட அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்டப் பொறுப்பாளர் பால்கி நம்மோடு உரையாடுகிறார்

 

ஒவ்வொரு துறையிலும் மத்திய அரசு எவ்வளவு செலவு செய்ய வேண்டும், எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள், செய்யப்பட்ட செலவுகள் அவசியமானவையா? இல்லையா? என்று சொல்வதுதான் சிஏஜி அமைப்பின் பணி. சுதந்திரம் கிடைத்த முதல் சில ஆண்டுகளில் சிஏஜி அமைப்பின் செயல்பாடுகள் பெருமளவு வெளியே விவாதத்துக்கு வரவில்லை. நரசிம்மராவ் காலத்தில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் பொதுவெளியில் வைத்து விவாதிக்கப்பட்டன. மோடியின் ஆட்சியில் ஏதாவது கேள்வி கேட்டால் அமலாக்கத்துறை வரும் என்று நாடாளுமன்றத்திலேயே பயமுறுத்தும் நிலை தான் இருக்கிறது. 

 

இப்படிப்பட்ட ஒரு நிலையிலும் சிஏஜி தைரியமாக இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பது எப்படி என்கிற ஆச்சரியம் ஏற்படுகிறது. இவர்களின் அத்தனை கட்டுப்பாடுகளையும் மீறி உண்மை இன்னமும் விழித்திருக்கிறது என்பதற்கான ஆதாரம் தான் இந்த அறிக்கை. பொதுவாக சிஏஜி அறிக்கையை வைத்து தான் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறும். ஆனால் பாஜக ஆட்சியில் அப்படி எதுவும் நடக்க இவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். சுங்கச்சாவடி மூலம் பாஜக மிகப்பெரிய கொள்ளையை அடித்திருக்கிறது. பணியே முடியாத சுங்கச்சாவடிகளில் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் மக்களின் உழைப்பு சுரண்டப்பட்டுள்ளது. ஏழு துறைகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை பாஜக அரசு ஊழல் செய்து சம்பாதித்துள்ளது. சுதந்திர வரலாற்றில் மிக மோசமான ஊழல் இது. இதை மக்களின் கவனத்திற்கு அனைவரும் கொண்டுசெல்ல வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலமாக இறந்தவர்களுக்கு சிகிச்சை செய்தது போல் கணக்கு காட்டி பல கோடி ரூபாயை இவர்கள் ஊழல் செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் இதுபோல் 20 கோடிக்கும் அதிகமாக ஊழல் செய்துள்ளனர். விஞ்ஞானப்பூர்வமாக செய்யப்பட்ட ஊழல் இது. 

 

இந்த ஊழலை வெளிப்படுத்திய சிஏஜி அமைப்புக்கு நாம் தலைவணங்கி நன்றி தெரிவிக்கிறோம். இதை நாடாளுமன்றமும் மக்கள் மன்றமும் விவாதிக்க வேண்டும். இந்த ஊழலைத் தடுப்பதற்கான மக்கள் இயக்கத்தை நாம் உருவாக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடியின் பேச்சில் வெளிப்பட்ட நடிப்பை மக்கள் ரசிக்கவில்லை. நேருவின் அற்புதமான சிந்தனையின் மூலம் உருவானது தான் இஸ்ரோ. அப்துல் கலாமின் உழைப்பு மூலம் இஸ்ரோ சிறப்பாக இயங்கியது. சென்ற முறை கிடைத்த தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு சந்திரயான்-3 இன்று சாதித்துள்ளது. 

 

 

சம்பளம் உட்பட பல்வேறு வகைகளில் விஞ்ஞானிகளை வஞ்சித்த மோடி, இப்போது இந்த வெற்றியில் மட்டும் பங்கெடுத்துக்கொள்ள விரும்புகிறார். சந்திரயான்-3 பெற்ற வெற்றி உலக நாடுகளின் மத்தியில் நம்முடைய பெருமையை உயர்த்தியுள்ளது. தாங்கள் எவ்வளவு வஞ்சிக்கப்பட்டாலும் இந்த நாட்டுக்காக உழைப்போம் என்கிற செய்தியை இந்த மோடி அரசுக்கு இதன் மூலம் விஞ்ஞானிகள் வழங்கியுள்ளனர்.
 

 

 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.