Skip to main content

“மணிப்பூர் சம்பவம்: காறித்துப்பும் உலகநாடுகள்; மீறித் தொடரும் பாஜக” - வழக்கறிஞர் பாலு

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

Adv.balu Interview

 

மணிப்பூர் விவகாரம் குறித்த தன்னுடைய கருத்துக்களை மூத்த வழக்கறிஞர் பாலு பகிர்ந்துகொள்கிறார்

 

இந்தியாவுடைய மானம், மரியாதை எல்லாம் உள்ளூர் அளவில் போய்க்கொண்டிருந்தது. இப்போது உலக அளவில் போய்விட்டது. மணிப்பூரில் உள்ள பெரும்பான்மையினரான மெய்தேய் இன மக்கள் அரசாங்கத்திலும் ஆட்சியிலும் மிகப்பெரிய பொறுப்புகளில் இருக்கின்றனர். சிறுபான்மையினரான குக்கி மற்றும் நாகா இன மக்களின் மீது இப்போது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. கிட்டத்தட்ட 200 மரணங்களுக்கு மேல் இதுவரை நடைபெற்றுவிட்டது. உலக அரங்கில் இந்தியாவை ஒரு கேவலமான நிலைக்குக் கொண்டுபோய் தள்ளியிருக்கிறது இந்தச் சம்பவம். 

 

வேறு கட்சி ஆட்சி செய்யும் மாநிலமாக மணிப்பூர் இருந்திருந்தால் பாஜகவினர் அதை வைத்து எப்படி அரசியல் செய்திருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இதுபோன்ற சம்பவங்களின் மூலம் பாஜக அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணியை அடித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் இன்னும் என்னென்ன கொடூரங்கள் அரங்கேறப் போகின்றன என்பதை நினைத்தால் கை கால்கள் பதறுகின்றன. பாஜகவினரின் கோர முகம் எப்படி இருக்கும் என்பதை மக்களுக்கு அவர்கள் செய்தியாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

 

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக இழுத்து வந்த குற்றவாளிகளில் ஒருவனைக் கண்டறிந்து அவனுடைய வீட்டை எரித்தனர் பெண்கள். எனவே இப்போது பெண்கள் போராட்டக் குழு குறித்த தவறான செய்திகளை சங்கிகள் பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். பெண்களைக் கொச்சைப்படுத்துவது தான் இவர்களுக்கு எப்போதுமே முதன்மையான நோக்கம். பெண்களின் வன்முறைப் போராட்டம்தான் மணிப்பூர் பிரச்சனைக்குக் காரணம் என்று பொய்யாக இவர்கள் பரப்புகிறார்கள். இங்கு இவர்கள் குக்கி இனத்தவரைத் தாக்குவதால், பக்கத்து மாநிலங்களில் இருக்கும் மெய்தேய் மக்களை அவர்கள் வெளியேறச் சொல்கின்றனர். 

 

கடவுளின் பெயரைப் பயன்படுத்தி இவ்வளவு அராஜகங்களை இவர்கள் செய்வதன் மூலம், கடவுளுக்கே இவர்கள் சவால் விடுகின்றனர். இந்த வன்முறைகள் என்னைத் தூங்கவிடவில்லை. பெரிய பொறுப்புகளில் இருக்கும் எந்தப் பெண்ணும் இதுகுறித்துப் பேசவில்லை. பெண்களை வைத்தே பெண்களின் வாயை இவர்கள் அடைக்கிறார்கள். உலகம் முழுவதும் சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் இந்திய வடிவம் தான் இந்தக் கலவரங்கள். 

 

ஒரு தமிழனாக என் சகோதரிகளுக்கு நடக்கும் கொடுமைகளைப் பார்க்கும்போது, ஜனநாயகத்தை நோக்கி நாம் நடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது என்பது புரிகிறது. நம்முடைய இதயத்தையும் பாதங்களையும் நாம் இன்னும் வலிமையாக்கிக் கொள்ள வேண்டும்.

மணிப்பூர் பிரச்சனை தொடர்பான வழக்கறிஞர் பாலு முழு கருத்தினை காண வீடியோ லிங்கை கிளிக் செய்யவும்...