Skip to main content

இனவெறிச்செயலில் ஈடுபட்டிருக்கும் கேரள எம்எல்ஏ கிருஷ்ணகுட்டி மீது என்ன நடவடிக்கை? வேல்முருகன்

Published on 24/02/2018 | Edited on 24/02/2018
velmurugan

 

தமிழக, கேரள அரசுகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் எழுப்பியுள்ள கேள்வி:

 ’’தமிழ்நாடு எல்லையில் அமைந்த கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள சித்தூர் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணகுட்டி. ஆளும் இடது முன்னணியின் கூட்டணிக் கட்சியான ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்.  இவர் தமது அடியாட்களை ஏவி தமிழர்களுக்கெதிராக தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டுவருகிறார்.

 

தமிழர்களின் அடிப்படை வாழ்வாதார விடயங்களை முடக்கி பாதிப்புகளை ஏற்படுத்துவதையே தனது நோக்கமாகக் கொண்டிருக்கிறார்.  மூலத்தரா அணையிலிருந்து தமிழ் விவசாயிகளுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்காதபடி செய்துவருகிறார்.

இப்போது கற்பனையான, பொய்யான ஒரு குற்றச்சாட்டை உருவாக்கி அதை வைத்து தமிழர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்திருக்கிறார்.  அதாவது பரம்பிகுளம்-ஆழியாறு திட்ட ஒப்பந்தப்படியான நீரை கேரளாவுக்கு தமிழகம் தருவதில்லை என்று பொய் கூறி தனது ஆதரவாளர்களை தமிழர்களுக்கெதிராகத் தூண்டிவிட்டிருக்கிறார்.

 

உண்மை அறியாத நிலையில் அவர்களும் தமிழர்களுக்கெதிராக வன்முறைச் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஒப்பந்தப்படியான 7.5 டிஎம்சி நீரை தடையின்றி கேரளாவுக்குத் தந்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு.  அணையில் தண்ணீர் இல்லாத சமயத்தில் அடுத்த முறை நீரைச் சேர்த்து வழங்கிவிடுவது வழக்கம்; இது ஒப்பந்தப்படியான நடைமுறையும்கூட.
ஆனால் தண்ணீர் இல்லாத இந்த தருணத்தில் பார்த்து, தண்ணீர் தரவில்லை என்பதாகச் சொல்லி, தனது அடியாட்களைக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார் கிருஷ்ணகுட்டி.

 

நேற்று நள்ளிரவு முதல் தமிழக வாகனங்கள் எதுவும் கேரளாவுக்குள் நுழையக் கூடாது என்று சொல்லி அவற்றைத் தாக்கித் தடுத்து நிறுத்தியிருக்கிறார்.

 

தமிழக-கேரள எல்லை ஊர்களான கோபாலபுரம், மீனாட்சிபுரம் சாலையில் கிருஷ்ணகுட்டியின் அடியாட்கள் தமிழக வாகனங்களை மறித்துத் தாக்கி, அதற்கு மேல் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.  அங்கிருந்து பொள்ளாச்சி வரைக்கும் போக்குவரத்து ஸ்தம்பித்து வாகனங்கள் அப்படியே நகர முடியாமல் நின்றுகொண்டிருக்கின்றன.

கிருஷ்ணகுட்டி இப்படிச் செய்திருப்பதற்கு முழுக்க முழுக்க அவரது உள்நோக்கமே காரணம்.  நீண்ட நாட்களாக இவர் அமைச்சர் பதவி கோரி வருகிறார். அதற்கான செல்வாக்கு தனக்கு இருப்பதாக காட்டிக்கொள்ளவே இந்த இனவெறிச் செயலில் இறங்கியிருக்கிறார் அவர்.

 

இப்படி தமிழக வாகனங்களைத் தடுத்து நிறுத்தி இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்தியதைக் கண்டித்தும், வாகனங்களைச் செல்லவிடுமாறும் தமிழ்நாடு திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கா.சு.நாகராஜன் தலைமையில் அறவழியில் போராட்டம் நடத்தினர்.

 

அந்தப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தோழர்களும் கலந்துகொண்டனர்.  போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 12 பேரை மட்டும் கைது செய்தது காவல்துறை.

 

சுயநல நோக்கில் அமைச்சர் பதவிக்காக திட்டமிட்டு தமிழர்களுக்கெதிராக வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டிருப்பது இரு மாநில மக்களுக்கிடையிலான நல்லுறவுக்கே ஊறு விளைவிப்பதாகும். இதற்கு காரணமான கிருஷ்ணகுட்டி, மக்கள் பிரதிநிதி என்கின்ற எம்எல்ஏ பதவி வகிக்கவே தகுதியற்றவராவார்.  இவரது பொறுப்பற்ற செயலால் அசம்பாவிதங்கள் மற்றும் விபரீதங்கள் ஏற்படுமுன் அவர் மீது கேரள அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசும் ஆவன செய்ய வேண்டும். முதல் வேலையாக கிருஷ்ணகுட்டியின் இனவெறியாட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்துத் தடையை அகற்ற வேண்டும்.

 

கிருஷ்ணகுட்டியின் இனவாத வெறியாட்டத்தைக் கண்டித்ததற்காக கைது செய்த தமிழ்நாடு திராவிடர் கழகம் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தோழர்களை உடனே விடுவிக்க வேண்டும்.

 

கிருஷ்ணகுட்டியின் இனவெறியாட்டத் தாக்குதலால் சேதமுற்ற வாகனங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இத்தனையும் செய்வதோடு, இந்த இனவெறிச்செயல் இனியும் தொடராதபடி உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழக, கேரள அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.’’


     

சார்ந்த செய்திகள்

Next Story

புரூஸ் லீயின் மரணத்திற்குக் காரணம் இதுவா? - 49 ஆண்டுகளுக்குப் பின் வெளியான ரகசியம்

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

Action King Bruce Lee's - Answers After 49 Years

 

உலக அளவில் 20ம் நூற்றாண்டில் 'அதிரடி' என்ற வார்த்தையை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்தவர் புரூஸ் லீ. தற்காப்புக் கலைஞர், இயக்குநர், நடிகர், தத்துவவாதி எனப் பன்முகம் கொண்டவர். 1940ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி பிறந்த புரூஸ் லீ சீனர் என்றாலும் அமெரிக்க பாப் கலாச்சாரத்தின் அடையாளமாக மாறிய அதிசயத்துக்குரியவர். இவரிடம் சண்டையிட்டுக் காயமடையாமல் யாரும் சென்றதில்லை எனக் கூறும் அளவிற்கு  குங்ஃபூ கலையில்  வல்லவர்.

 

உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட புரூஸ் லீ, 1973 ஆம் ஆண்டு ஜூலை 20ம் தேதி தனது 32 ஆவது வயதில் மரணமடைந்தார். அவரது மரணம் உலக இளைஞர்களை ஆழ்ந்த சோகத்திற்குள்ளாக்கியது. புரூஸ் லீயின் உயிரிழப்பு தொடர்பாகத் தற்பொழுது வரை பல சர்ச்சைகள் கொட்டிக் கிடக்கிறது. பலமுறை அவரைக் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டாலும் அவரை விஷத்தாலோ, கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட எந்த ஆயுதத்தாலோ அவரைக் கொல்ல முடியவில்லை என 80ஸ், 90 ஸ் கிட்ஸ்கள் சொல்லும் கதைகள் இன்றளவும் நீடிக்கிறது.

 

இன்றளவும் அவரது மரணம் என்பது எந்தத் தெளிவான தகவலும் இல்லாத ரகசியமாகவே  நீடித்து வருகிறது. புரூஸ் லீ பெருமூளை வீக்கம் என்னும் நோயினால் மரணம் அடைந்தார் என்று கூறப்படுகிறது. இந்த பெருமூளை வீக்கம் ( Cerebral Edema) என்ற பிரச்சனை காரணமாக அவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இப்படி ஒருமுறை தலைவலி ஏற்பட்ட பொழுது நடிகை பெட்டி டிங் பீ வலி நிவாரணி மருந்து ஒன்றைக் கொடுத்துள்ளார். அன்று மாலை அந்த மருந்து எடுத்துக் கொண்ட புரூஸ் லீ அதன் பிறகு எழுந்திருக்கவில்லை. அந்த நேரத்தில் நடிகை கொடுத்த வலி நிவாரணி மருந்தினால் மூளை வீக்கம் ஏற்பட்டு அவர் இறந்ததாக மருத்துவர்கள் நம்பினர். ஆனால் தற்பொழுது 'கிளினிக்கல் கிட்னி ஜெர்னல்' (Clinical Kidney Journal) என்ற ஒரு ஆய்வு நிறுவனம் இது தொடர்பாக நடத்திய ஆய்வில் அதிக தண்ணீர் குடிப்பதை புரூஸ் லீ வாடிக்கையாக வைத்திருந்ததால் அதன் காரணமாக அவர் இறந்து போய் இருக்கலாம் என்ற முடிவைத் தெரிவித்துள்ளது. அதிகப்படியான நீரை வெளியேற்ற முடியாமல் அவர் இறந்ததாக அந்நிறுவன ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

 


 

Next Story

வன்முறை காட்சிகளுக்கு எச்சரிக்கை வாசகம் வேண்டும் எனக் கோரி மனு-எச்சரித்து தள்ளுபடி செய்த நீதிபதிகள்

Published on 08/06/2022 | Edited on 08/06/2022

 

highcourt chennai

 

திரைப்படங்களில் வன்முறை காட்சிகள் வரும்போது அதில் வரும் ஆயுதங்கள், இரத்தம் போன்றவை போலியானவை என்பதை அறிவுறுத்த எச்சரிக்கை வாசகங்கள் வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

சினிமா சண்டைக் காட்சிகளில் இடம்பெறும் ஆயுதங்கள், இரத்தம் போன்றவை போலியானவையே. இருப்பினும் அவை பார்வையாளருக்குத் தத்ரூபமாக உண்மைபோலவே காட்டப்படுகிறது. இந்த நிலையில் அதிகம் ஆக்சன் நிறைந்த திரைப்படங்களில் வரும் சண்டை காட்சிகள், அதில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், ரத்தங்கள் உள்ளிட்டவற்றை காணும் இளைஞர்கள் அதேபோன்ற வன்முறை செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது என்றும், எனவே வன்முறை காட்சிகளின் பொழுது காட்டப்படும் ஆயுதங்கள் பேப்பரால் செய்த போலி எனவும், இரத்தங்கள் காட்டப்படும் பொழுது அவை ரத்தமல்ல கலர் பவுடர் எனவும் எச்சரிக்கை வாசகம் வைக்க உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடரக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தனர். வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் கோரிக்கை வைத்த நிலையில் இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.