Skip to main content

6 பேருக்கு வாழ்க்கை கொடுத்த  தனலெட்சுமி !

Published on 18/03/2018 | Edited on 19/03/2018
Dhanalakshmi

 

திருச்சி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக உறுப்பு தானம் செய்து 6 பேருக்கு வாழ்க்கை கொடுத்தார் இளம்பெண்.

 

திருச்சி தென்னூரை சேர்ந்தவர் அய்யப்பன். சுமைதூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி தனலெட்சுமி (வயது 25). இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. 8 மாத கர்ப்பிணியான தனலெட்சுமிக்கு கடந்த 7-ந் தேதி உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு தொடர் வலிப்புடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு மூளையில் அதிகப்படியான ரத்தக்கசிவு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே 7-ந்தேதி மாலை அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.

 

பின்பு சுவாச கருவி உதவியுடன் அவருக்கு பிரசவ வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனை அரசு மருத்துவமனை டாக்டர்கள் உறுதி செய்தனர். மூளைச்சாவு அடைந்தவர்கள் மற்றவர்களை போல வாழ முடியாது என்பதால் தனலெட்சுமியின் உடல் உறுப்புகளை தானம் வழங்கினால் அதன் மூலம் பலருக்கு வாழ்வு கிடைக்கும் என்று அவரது குடும்பத்தினரிடம் எடுத்து கூறினர். அதன்பிறகு தனலெட்சுமி உடல் உறுப்புகளை தானம் வழங்க குடும்பத்தினர் ஒப்புதல் தெரிவித்தனர்.

 

இதையடுத்து அரசு மருத்துவமனை டீன் அனிதா மேற்பார்வையில், தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கருணாகரன் தலைமையில் அறுவை சிகிச்சைக்குழு உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். தனலெட்சுமியின் உடலில் இருந்து இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், 2 கண்கள் ஆகிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதில் இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு திருச்சியில் இருந்து விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. கல்லீரல் திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும், சிறுநீரகங்களில் ஒன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும், மற்றொன்று நெல்லை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. 2 கண்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 பேர் வாழ்வு பெற்றனர். இதுவரை திருச்சியில் உடல்உறுப்புகள் தானம் அறுவை சிகிச்சை தனியார் மருத்துவ மனையில் மட்டும் நடந்து வந்தது. இப்போது முதல் முறையாக திருச்சி அரசு மருத்துவ மனையில் உடல் உறுப்புதான அறுவை சிகிச்சை நடந்ததுள்ளது.

 

முதல்முறையாக நடைபெற்ற உறுப்பு தானம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர்.:-

தற்போது அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி அரசு மருத்துவமனையில் பெண் ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டுள்ளது. உடல் உறுப்புகள் தானம் பதிவு மூப்பு அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. இதில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை. என்றார். 
இதன் பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும்அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி, கலெக்டர் ராஜாமணி, டீன் அனிதா, கண்காணிப்பாளர் ஏகநாதன், கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் அர்ஷியாபேகம் தனலெட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செய்தனார். 

சார்ந்த செய்திகள்

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.

Next Story

யானைகள் தொடர் அட்டகாசம்; வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 villagers staged a struggle against the forest department as the elephants continued to roar
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூர், அனுப்பு, டிபி பாளையம், உள்ளிட்ட பகுதிகள் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தொடர்ந்து யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் பயிர்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்து வரும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - பரதராமி சாலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம் பரதராமி சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர், மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர்  உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.