Skip to main content

ஏமாற்றப்படுவது அப்பாவி விவசாய பெருமக்கள் தான் என்பதை அறியும்போது வேதனையாக உள்ளது: விஜயகாந்த்

Published on 19/03/2018 | Edited on 19/03/2018
dmdmk

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர்  விஜயகாந்த் அவர்கள் தமிழக அரசின் நேரடி நெல்கொள்முதல் மையங்களில் நடைபெறுகின்ற முறைகேடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

’’தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு செழித்தோங்கிய விவசாயம் இன்று பெரும் பின்னடைவில் உள்ளது. நெல்லுக்குரிய ஆதாரவிலை சரியாக கிடைக்கப்பெறாமல் விவசாயிகள் சொல்லெணாத் துயரினை அடைந்துவருகின்றனர். மேலும் டெல்டா பகுதிகள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர்க்கடன் சரிவர வழங்காத நிலையிலும், வெளியில் கடன் பெற்று, உழுது பயிர் செய்த நெல்தானியங்களை அரசு கிடங்கில் விவசாயிகளிடம் சரிவர கொள்முதல் செய்யாததால், உழுதவனுக்கு உரிய பலன் கிடைக்காமல் உயிர்விட்ட விவசாயிகள் பலபேர் என்பதை நினைக்கையில் நெஞ்சம் பதறுகிறது.


    
தமிழக அரசு கடந்த ஆண்டு அரசு பட்ஜெட்டில் 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்படும் என்பதை இலக்காக வைத்தது. ஆனால் வயலும், வாழ்வும் என்ற நிலை மறந்து, விவசாயம் எனும் உயிரை மரணத்தின் வாசலுக்கு தள்ளியிருக்கிறது இந்த தமிழக அரசு. இந்த நிதியாண்டுக்கான 2018-2019 பட்ஜெட்டில் மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்காக திருந்திய நெல்சாகுபடி முறை 10 லட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்படும் என்றும், சாதாரண ரக நெல், குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய் 1,600 விலையிலும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய் 1,660 விலையிலும், அரசு கொள்முதல் செய்யும் என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும், கொள்முதல் விலைக்கும் உள்ள வித்தியாசத்தை, நெல் உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக வழங்க 2018-2019 ஆண்டிற்கு தமிழக பட்ஜெட்டில் ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. இது வெறும் கண்துடைப்பு நாடகமே என்றும், விவசாயிகளை ஏமாற்றும் விதமாகவும் அமைந்துள்ளது.

 

நெல் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதை பயிர் செய்வதற்காக கடுமையான சோதனைகளையும் தாண்டி, பயிரிட்டு, அதை கொள்முதல் செய்ய அரசின் நெல் கொள்முதல் கிடங்கிற்கு எடுத்து சென்றால், அங்குள்ள அதிகாரிகள் அதை கொள்முதல் செய்வதை தட்டிக்கழிக்கும் விதமாக பல துன்பங்களை விவசாயிகளுக்கு தருகின்றனர். குறிப்பாக நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ய காலதாமதம் செய்வதற்காக ஈரப்பதம் உள்ளது என்றும், பதர் நிறைந்துள்ளது என்றும் காரணம் காட்டி காக்கவைப்பது, நெல்மூட்டைகளின் தரங்களை குறைத்து சொல்வது, பின் அந்த நெல்மூட்டைகளை எடை போடுவதற்கு ரூபாய் 40 முதல் 50 வரை கையூட்டு கேட்பது போன்ற பல துன்பத்திற்கு விவசாயிகளை ஆளாக்குகின்றனர். இதனால் விவசாயிகள் விரக்தியடைந்து அங்குள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு எடுத்துசென்று விவசாயிகள் வியாபாரிகளிடம் அரசு நிர்ணயித்த விலையை விட, குறைந்த விலைக்கு சான்றாக (ஒரு குவிண்டாலுக்கு) தமிழக அரசு ரூபாய் 1,600 என்று நிர்ணயித்தால், அவர்களுக்குள்ளாக உடன்படிக்கை செய்து ரூபாய் 1,300 என அவசரகதியில் நெல்லை கொள்முதல் செய்கின்றனர். பின்பு அதை மீண்டும் அரசு கொள்முதல் கிடங்களில் ஒரு மூட்டைக்கு ரூபாய் 200 முதல் 300 வரை வித்தியாசத்தில் கையூட்டு கொடுத்து அரசு கிடங்குகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

 

இதனால் ஏமாற்றப்படுவது அப்பாவி விவசாய பெருமக்கள் தான் என்பதை அறியும்போது மிகவும் வேதனையாக உள்ளது. சிலநாட்களுக்கு முன்புகூட இத்தகைய கடுமையான துன்பத்தினால் நாகை மாவட்டம், வேதாரண்யத்திற்கு அடுத்த கரியாப்பட்டினம் மேற்கு கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்கின்ற விவசாயி உயிரிழந்துள்ளார். பெரும்பாலும் டெல்டா பகுதி விவசாயிகள் பெரும்துன்பத்திற்கு ஆளாகி கடுமையான நெருக்கடியினால் அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டின் விலையின்படி, தங்களுக்கு நெல் கொள்முதல் விலை கிடைக்கப்பெறவில்லை என்பதையும் அரசின் திட்டங்கள், வெறும் ஏட்டளவில் உள்ள வாய் வார்த்தைகளாகவே உள்ளன என்றும், இதனால் லாபம் அடைவது இடைத்தரகர்களான வியாபாரிகள் தான் என்பதையும், தெள்ளத்தெளிவாக விவசாயிகள் தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் எடுத்துரைத்து மனம் குமுறுவதை பார்க்கும் பொழுது, விவசாயிகள் சேற்றில் கால்வைத்தால் தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும் என்கின்ற கூற்றை நினைவில் கொண்டு இந்த ஆட்சியாளர்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றேன்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

“கொட்டும் முரசு சின்னம் தேமுதிகவுக்கு மட்டுமே  சொந்தம்” - சீமான் பேச்சுக்கு விஜயகாந்த் மகன் பதிலடி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Vijayakanth son of Seaman said that Murasu symbol belongs only to dmdk

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு ஒன்றிய பகுதிகளில் தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் வருகை தந்தார். அப்போது வத்தலகுண்டு காளியம்மன் கோவில், புதுப்பட்டி, விராலிப்பட்டி, குன்னூத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தேமுதிக கொடியை ஏற்றி வைத்த விஜய பிரபாகரன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்று மேடையில் பேசிய விஜய பிரபாகரன் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசும்போது, “திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்ற மூன்றாவது கட்சி தேமுதிக மட்டுமே. பத்தாண்டுகள் தோல்விகளை சந்தித்து இருந்தாலும் கொட்டு முரசு சின்னம் தேமுதிகவின் சொத்தாக உள்ளது. அண்ணன் சீமான் கொட்டு முரசு சின்னம் தேமுதிகவுக்கு இல்லை என்றது போல் தவறான பரப்புரைகளில் ஈடுபட்டு, தேமுதிக தொண்டர்களையும் பொதுமக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடாது.

மேலும் ஹீரோக்களை நம்பி வாக்களிப்பது, ஜாதியை பார்த்து வாக்களிப்பது என்பது இருந்துவிடக் கூடாது. தமிழ் மக்களின் நலன் காப்பவர்கள் மீது நம்பிக்கை கொண்டு வாக்களிக்க வேண்டும்” என்று கூறினார். இந்த விழாவில் நகரம், ஒன்றியம், மாவட்ட பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.