Skip to main content

மாணவர்களுக்கு உதவித்தொகை - நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட உத்தரவு

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
vijay students functions update

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து செயல்பட்டு வரும் அவர், சமீபத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சமூக வலைத்தளப் பக்கம் மூலமாக வாழ்த்து தெரிவித்தார். அதோடு, அவர்களை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு, கடந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதில் சரியாக மாணவர்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஒரு மாணவி வருத்தம் தெரிவித்தார். 

இந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்கிய பின்பு முதல் முறையாக மாணவ மாணவிகளை சந்திக்கவுள்ளார் விஜய். இந்த முறையும் சட்டமன்ற தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து உதவித்தொகை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த மாணவர்களோடு பெற்றோர் இல்லாமல் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் இணைத்து மொத்தம் 1500 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஜூன் இடையில் அதாவது விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதிக்கு முன் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் (ஜூன் 4) வெளியான பின்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் போன முறை ஏற்பட்ட சில குளறுபடிகளை இந்த முறை நடக்காதவாறு திட்டமிடும் படி த.வெ.க பொதுச் செயலாளருக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக பரவலாக சொல்லப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்