காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், பஞ்சாபி பாப் பாடகருமான சித்து மூஸ் வாலா சமீபத்தில் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக டெல்லி திகார் சிறையில் இருக்கும் லாரென்ஸ் பிஷ்னாய் சேர்க்கப்பட்டுள்ளார். பாடகர் சித்து மூஸ் வாலா கொலை செய்யப்பட்ட பின்னர் சமூக வலைதளப் பக்கத்தில் உள்ள லாரன்ஸ் பிஷ்னாயின் குழு பக்கத்தில் இந்த கொலை கூட்டாளி விக்கியின் கொலைக்கு பதிலடி என குறிப்பிடப்பட்டிருந்தது.
சல்மான் கடந்த 2006 ஆம் ஆண்டு அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டு சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வகை மான்களை பிஷ்னாய் சமூகத்தினர் புனிதமாக கருதுகின்றனர். இதையடுத்து ஆத்திரமடைந்த லாரன்ஸ் பிஷ்னாய் இந்த மானை கொன்றதற்காக சல்மான் கானை கொன்றுவிடுவோம் எனக் கூறியிருந்தார். பாடகர் சித்து மூஸ் வாலாவின் கொடூர கொலையை தொடர்ந்து பல வருடங்களுக்கு இந்த மிரட்டல் பரபரப்பை கிளம்பியதை தொடர்ந்து சல்மான் கான் வசிக்கும் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் சல்மான் கானுக்கும், அவரது தந்தை சலீம் கானுக்கும் உண்மையிலேயே கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. நேற்று சல்மான் கான் தந்தை சலீம் கான் பாந்தரா கடற்கரையில் தனது வழக்கமான நடை பயணத்திற்கு பிறகு அங்குள்ள பெஞ்சில் அமர்ந்துள்ளார். அப்போது அவர் அருகில் இருந்த கடித்தை எடுத்து படித்துள்ளார். அதில் சல்மான் கான், சலீம் கான் ஆகிய இருவரும் பாடகர் சித்து மூஸ் வாலா போன்று கொடூரமாக கொல்லப்படுவீர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பாந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பிறகு வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.