Skip to main content

'தேவரகொண்டாவின் திரை ஆளுமை என்னை பிரமிக்கவைத்தது' - பிரபல இசையமைப்பாளர் பிரமிப்பு 

Published on 03/10/2018 | Edited on 03/10/2018
vijay devarakonda

 

விஜய் தேவரகொண்டா, மெஹ்ரீன் பிர்ஸாடா இணைந்து நடித்துள்ள 'நோட்டா' படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.  சத்யராஜ், நாசர், எம் எஸ் பாஸ்கர், பிரியதர்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் சார்பாக கே.ஈ ஞானவேல்ராஜா தயாரித்து ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். 'அருவி' புகழ் ரேமண்ட் டெரிக் கிராஸ்டா படத்தொகுப்பு செய்யும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் குறித்து சாம் சி.எஸ் பேசியபோது... "பல ஆண்டுகளாக நான் ஒரு விஷயத்தை செய்யும் கனவில் இருந்து வந்தேன். இறுதியாக, 'நோட்டா' படத்தின் மூலம் அதை நனவாக்கி இருக்கிறார் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா. 'A RISE OF A LEADER' என்ற பாடலில் சூழல் ஒரு ஆழ்ந்த, சக்தி வாய்ந்த இசையை கோரியது. மாசிடோனியா சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா இருந்தால் படத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தும் என்று உணர்ந்தேன். 

 

 

 

ஸ்ட்ரிங்ஸ் மற்றும்  பிராஸ் இசைக்கலைஞர்கள் 150க்கும் மேற்பட்டோர் பின்னணி இசையில், குறிப்பாக இந்த பாடல் இசைக்கோர்ப்பில் பங்கு பெற்றனர். 'நோட்டா' படத்தின் பின்னணி இசை மிக பிரமாண்டமாக இருக்கும். நான் சாதாரணமாக சொல்லவில்லை, படத்தில் உள்ள காட்சிகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன, அதனால் அவற்றிற்கு பொறுத்தமான இசையை வழங்க, நான் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. மேலும் கதை மற்றும் காட்சிகள் என்னை இன்னும் சிறப்பாக வேலை செய்ய உந்திய அதே நேரத்தில், விஜய் தேவரகொண்டாவின் திரை ஆளுமை என்னை இன்னும் அடுத்த கட்டத்துக்கு தள்ளியது. 'நோட்டா' படம் அவரின் காதல் நாயகன் என்ற முத்திரையை உடைத்து, நெருக்கமான, யதார்த்தமான கதாபாத்திரத்தில் அவரை முன்னிறுத்தியிருகிறது.  இது ஒரு இருமொழி திரைப்படமாக இருப்பதால், இரண்டு மொழி ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில்  இசையமைக்க வேண்டியிருந்தது. அதை செய்திருக்கிறேன் என நம்புகிறேன்" என்றார்.
 

 

சார்ந்த செய்திகள்