டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், நேற்று (23.07.2021) கோலாகலமான துவக்க விழாவுடன் தொங்கியது. இந்தநிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா வென்றுள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதலில் சீன வீராங்கனை யாங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ரஷ்யா வெள்ளி பதக்கத்தையும், சுவிட்சர்லாந்து வெண்கலத்தையும் வென்றுள்ளது.
இதற்கிடையே, பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளு தூக்கும் போட்டியில் வெள்ளி வென்றதன் மூலம், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் நடிகை குஷ்பு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...
"ட்விட்டர் உலகிற்கு திரும்பி வர இதைவிட சிறந்த வழி எதுவாக இருக்கமுடியும்? 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்கள். வெள்ளி பதக்கம் வென்றது என்பது சராசரி சாதனையல்ல. இந்தியா உங்களை வணங்குகிறது!"என பதிவிட்டுள்ளார். மீராபாய் சானுவின் வெள்ளிப் பதக்கம், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு மீண்டும் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.