Skip to main content

“இது போன்ற விஷயங்கள் ஏழைகளை மிரட்டுகிறது...”- இயக்குனர் சேரன்!

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

cheran dir

 

ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல் மூன்று மாதங்களுக்கு மின்சாரக் கட்டணம் வசூல் செய்யாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் முதல் மின்சாரக் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. 

 

இதன்பின் பிரபலங்கள் பலரும் மின்சாரக் கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது என்று சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

 

இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் தற்போது மின்சாரக் கட்டணம் உயர்வு குறித்து பேசியுள்ளார். அதில், “தமிழகம் முழுவதும் மின்வாரியத்துறையின் செயல்பாடுகளில் ஒரு தெளிவின்மை தென்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கான மின்கட்டணம் இதுவரை மாதமாதம் கட்டிய தொகையிலிருந்து இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது. (கிராமங்களில் இருப்பவர்களுக்கும்) அதற்கான காரணம் சொல்லப்படவில்லை.

 

இதுபோன்ற காலகட்டங்களில் மக்களுக்குச் சலுகையோடு செயல்பட வேண்டிய நிர்வாகம் இப்படி அதிகப்படியாக வசூலிக்க நினைப்பது கேள்வியை எழுப்புகிறது. இதை எங்கே எப்படிக் கேட்பது என்று தெரியாத அப்பாவி மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். அந்தத் துறை சார்ந்த மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கவனிப்பார்களாக.

 

வேலையின்றி வீட்டிற்கும் உணவிற்கும் தேவையான பணம் சம்பாதிக்கவே கஷ்டப்படும் சூழலில் இது போன்ற விஷயங்கள் ஏழைகளை மிரட்டுகிறது. வீட்டுக்கு வாடகையே கட்டமுடியாதவர்கள் எங்கிருந்து மின்சாரக் கட்டணத்தை இரண்டு மூன்று மடங்காகக் கட்டமுடியும். இதுபோன்ற நேரங்களில் தளர்வு அளிக்கவேண்டும் அரசு” என்று தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்