Skip to main content

தமிழை இரண்டாம் அலுவல் மொழியாகக் கொண்டிருந்த வடமாநிலம்! - முதல்வரை தெரியுமா?

Published on 12/11/2019 | Edited on 27/11/2019

நம் 'முதல்வரை தெரியுமா' தொடரில் இந்தியா முழுவதுமுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடந்து புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும்பொழுது புதிதாகப் பதவியேற்கும் முதல்வர் குறித்தும் அந்த மாநிலத்தின் அரசியல் வரலாறு குறித்தும் சுருக்கமாகப் பார்த்து வருகிறோம். ஒரு இடைவெளிக்குப் பிறகு, சமீபத்தில் தேர்தல் நடந்த ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்கள் குறித்துக் காணலாம். மஹாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி குழப்பங்கள் முடிவுக்கு வராத நிலையில், ஹரியானாவில் தன் பாணியில் சுமூகமாக ஆட்சி அமைந்துவிட்டது பாஜக.

 

chandigarh capital complex



இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்கு அருகில் உள்ள மாநிலம் ஹரியானா. மனித உடலில் மூக்கு எங்குள்ளதோ, அதேபோல்தான் இந்திய வரைப்படத்தில் மூக்காக அடையாளப்படுத்தப்படும்  மாநிலம் ஹரியானா. ஹரியானா என்பது கடவுளின் வசிப்பிடம் என்கிறார்கள். கடவுள் மட்டுமா அங்கே வசிக்கிறார் என்றால் ஆட்சி அதிகாரத்துக்காக கடவுளையே விலைபேசி விற்பவர்களும் அந்த மாநிலத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியானாவின் தலைநகரம் சண்டிகர்தான், பஞ்சாப் மாநிலத்திற்கும் தலைநகரம். அதாவது இரண்டு தலை ஒரு வாய் என்பது போல். ஒரு காலத்தில் பஞ்சாப் மாகாணத்தோடு இருந்த பகுதியைத்தான் 1966ல் பிரித்து ஹரியானா என்கிற மாநிலம் உருவாக்கப்பட்டது. மாநிலம் பிரிக்கப்படும்போது சண்டிகர் நகரை தங்களுக்குத்தான் ஒதுக்க வேண்டும் என இரண்டு மாநில மக்களும் முட்டிக்கொண்டனர். கடைசி வரை யாருக்கு தீர்வு என்பது வராததால் சண்டிகரை, இரு மாநிலத்தவரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என முடிவு செய்து சண்டிகரை தனி ஒன்றிய பிரதேசமாக்கிவிட்டார்கள். தலைநகரத்துக்காக சண்டை போட்டுக்கொண்டது போல், இன்னொரு விவகாரத்திலும் இந்த மாநில மக்கள் முட்டிக்கொண்டு மோதினார்கள். அது மொழி பிரச்சனை.

 

 

haryana jats



பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரிந்தாலும் ஹரியானாவில் இந்தி அலுவல் மொழியாக்கப்பட்டது. பஞ்சாபி பேசியவர்கள் அதிக அளவில் இருந்தனர். அதனால் இந்தியோடு பஞ்சாபியை இரண்டாவது அலுவல் மொழியாக்க வேண்டும் என குரல் கொடுத்தனர். இந்தி பேசுபவர்களே தலைமை பதவிகளில் அதிக அளவில் இருந்ததால் அவர்களால் பஞ்சாபி வளர்வதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதற்காக ஒரு திட்டம் வகுத்தார்கள். அப்போது, தமிழகத்தில் இந்திக்கு எதிராக போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. எங்களுக்கு தமிழ் மீது எவ்வளவு பாசம் பாருங்கள் எனக்காட்ட வேண்டும் என்பதற்காக, (உண்மையில் பஞ்சாபியை ஹரியானாவில் இருந்து விரட்ட வேண்டும் என்பதற்காக) ஹரியானாவின் இரண்டாவது அலுவல் மொழியாக தமிழை அறிவித்தார் அப்போது முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பன்சால். அலுவல் மொழியாக இருந்தாலும், அது நடைமுறையில் கிடையாது. இத்தனைக்கும் அந்த மாநிலத்தில் சுமார் 15 ஆயிரம் என்ற அளவிலேயே தமிழர்கள் இருந்தார்கள். 2010ல் தமிழுக்கு பதில் இரண்டாவது அலுவல் மொழியாக பஞ்சாபியை அறிவித்துள்ளார்கள்.


இந்த மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 85 சதவிதம் பேர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள், 8 சதவிதம் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள். மீதியுள்ள 7 சதவிகிதமே மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். உலகத்தின் பிரபல பல நிறுவனங்களுக்கு ஹரியானாவில் தொழிற்சாலை உண்டு. அதேபோல் புகழ்பெற்ற கைத்தறி ஆடைகளுக்கு  ஹரியானாவின் பானிபட் நகரம் பிரசித்திபெற்றது. இத்தனை பெரிய தொழிற்சாலைகள், அதன் அலுவலகங்கள் ஹரியானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தாலும் விவசாயம்தான் இந்த மாநிலத்தின் முக்கிய தொழில்.

 

 

devilal



ஹரியானா சட்டமன்றத்தில் 90 இடங்கள் உள்ளன. இதில் 46 இடங்களை பிடிப்பவர்கள் அரியணையில் ஏற முடியும். வெற்றியை தீர்மானிப்பவர்களில் இந்துக்களின் ஜாட் சாதியை சேர்ந்தவர்களே பிரதானம். 30 சதவிதம் அச்சாதியை சேர்ந்தவர்களே. அதற்கு அடுத்ததாக பட்டியலினத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர். மாநிலத்தில் 15 ரிசர்வ் தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. யார் வெற்றி பெற்றாலும் லால்களை ஒதுக்க முடியாது. இந்தியாவின் துணை பிரதமராக இருந்தவர் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் நிறுவனர் சௌத்ரி தேவிலால். ஹரியானாவின் மிக முக்கிய பலம் வாய்ந்த சாதியான ஜாட் சமுதாயத் தலைவர்களுள் மிக முக்கியமானவர் தேவிலால். இவர்களது குடும்பத்தை தவிர்த்துவிட்டு ஹரியானாவின் அரசியல் வரலாற்றை எழுதிவிட முடியாது. அந்தளவுக்கு மாநிலத்தில் நங்கூரம் பாய்ச்சி அமர்ந்துள்ளார்கள்.

தேவிலால்க்கு நான்கு மகன்கள். அதில் கடைசி மகன் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். மற்ற மகன்கள் பிரதாப் சிங், ஓம் பிரகாஷ் சௌதாலா, ரஞ்சித் சிங். சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசங்களை அனுபவித்தவர்களான தேவிலாலும் அவரது சகோதரர் சகிப்ராமும் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக இயங்கினர். சுதந்திரக்கு முன்பே காங்கிரஸ் கட்சி சார்பில் தேவிலாலின் இளைய சகோதரர் சகிப் ராம், எம்.எல்.ஏவாகத் தேர்வாகி மக்கள் பணியாற்றினார். சுதந்திரக்கு முன்பே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் இயங்கி வந்த ஒருமைப்பாட்டு கட்சி என்கிற கட்சியில் இணைந்து செயல்படத் துவங்கினார்கள். சுதந்திரத்துக்குப் பின்பு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள விவசாயிகளின் பெருந்தலைவராக தேவிலால் மாறினார். விவசாயிகளுக்காகப் பல போராட்டங்களை நடத்தினார், வைத்த கோரிக்கைகளில் வெற்றியும் பெற்றார். இந்நிலையில்தான் தனி மாநில கோரிக்கை, போராட்டமாகத் தீவிரமடைந்தது.

தமிழக மக்களுக்கு வாரிசு அரசியல் புதிதல்ல. ஆனால், நாமே வியக்கும் அளவுக்கான வாரிசு அரசியல், குடும்ப அரசியல் அங்கு நடக்கிறது. அந்தக் கதையையெல்லாம் தொடர்ந்து படிக்க...

அடுத்த பகுதி...

மாநிலத்தின் பாதி தொகுதிகள் குடும்பத்துக்கு, மீதிதான் கட்சிக்கு!

 

 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.