Skip to main content

பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது...

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

neymar

 

கடந்த ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தக் கூடிய ஒன்றாக மாறியுள்ளது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அதன் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றனர். இந்தக் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி விளையாட்டு வீரர்கள், மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் பிரபல கால்பந்து வீரரான நெய்மருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான நெய்மர், தற்போது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அவரது அணி நிர்வாகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அவருடன் சேர்த்து ஏஞ்சல் டிமரியா மற்றும் லியான்டிரோ ப்ரேடஸ் என்ற இருவீரர்களுக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பி.எஸ்.ஜி அணியின் பிற வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட இருப்பதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.